Friday, April 13, 2012

அறிவே தெய்வம்

பாரதியர் கவிதைகள்
அறிவே தெய்வம்

ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?

மாடனைக் காடனை வேடனைப் போற்றி

மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?

சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்

சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?

வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று

வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.

நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று

நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.

போந்த நிலைகள் பலவும் பராசக்தி

பூணு நிலையாமே - உப
சாந்த நிலையேவே தாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.

கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று

காட்டு மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?

உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி

யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?

No comments:

Post a Comment