Friday, April 13, 2012
அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)
அச்சமில்லை (பண்டாரப் பாட்டு)
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே
இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்துநின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
துச்சமாக வெண்ணிநம்மைச் தூறுசெய்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பிச்சைவாங்கி யுண்ணும்வாழ்க்கை பெற்றுவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
இச்சைகொண்ட பொருளெலாம் இழந்துவிட்ட போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
கச்சணிந்த கொங்கைமாதர் கண்கள்வீசு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
நச்சைவாயி லேகொணர்ந்து நண்பரூட்டு போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
பச்சையூ னியைந்தவேற் படைகள்வந்த போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
உச்சிமீது வானிடிந்து வீழுகின்ற போதினும்,
அச்சமில்லை யச்சமில்லை அச்சமென்ப தில்லையே.
அறிவே தெய்வம்
பாரதியர் கவிதைகள்
அறிவே தெய்வம்
ஆயிரந் தெய்வங்க ளுண்டென்று தேடி
அலையு மறிவிலிகாள் - பல்
லாயிரம் வேத மறிவொன்றே தெய்வமுண்
டாமெனல் கேளீரோ?
மாடனைக் காடனை வேடனைப் போற்றி
மயங்கு மதியிலிகாள் - எத
னூடுநின் றோங்கு மறிவொன்றே தெய்வமென்
றோதி யறியீரோ?
சுத்த அறிவே சிவமென்று கூறுஞ்
சுருதிகள் கேளீரோ - பல
பித்த மதங்களி லேதடு மாறிப்
பெருமை யழிவீரோ?
வேடம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
வேதம் புகன்றிடுமே - ஆங்கோர்
வேடத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றவ்
வேத மறியாதே.
நாமம்பல் கோடியொ ருண்மைக் குளவென்று
நான்மறை கூறிடுமே - ஆங்கோர்
நாமத்தை நீருண்மை யென்றுகொள் வீரென்றந்
நான்மறை கண்டிலதே.
போந்த நிலைகள் பலவும் பராசக்தி
பூணு நிலையாமே - உப
சாந்த நிலையேவே தாந்த நிலையென்று
சான்றவர் கண்டனரே.
கவலை துறந்திங்கு வாழ்வது வீடென்று
காட்டு மறைகளெலாம் - நீவிர்
அவலை நினைந்துமி மெல்லுதல் போலிங்
கவங்கள் புரிவீரோ?
உள்ளத னைத்திலு முள்ளொளி யாகி
யொளிர்ந்திடு மான்மாவே - இங்குக்
கொள்ளற் கரிய பிரமமென் றேமறை
கூவுதல் கேளீரோ?
ஜீவன்முக்தி
பாரதியர் கவிதைகள்
ஜீவன்முக்தி
ஜயமுண்டு பயமில்லை மனமே - இந்த
ஜன்மத்தி லேவிடு தலையுண்டு நிலையுண்டு. (ஜய)
அனுபல்லவி
பயனுண்டு பக்தியி னாலே - நெஞ்சிற்
பதிவுற்ற குலசக்தி சரணுண்டு பகையில்லை. (ஜய)
சரணங்கள்
புயமுண்டு குன்றத்தைப் போலே - சக்தி
பொற்பாத முண்டதன் மேலே
நியமமெல் லாம்சக்தி நினைவன்றிப் பிறிதில்லை;
நெறியுண்டு; குறியுண்டு; குலசக்தி வெறியுண்டு. (ஜய)
மதியுண்டு செல்வங்கள் சேர்க்கும் - தெய்வ
வலியுண்டு தீமையைப் போக்கும்;
விதியுண்டு; தொழிலுக்கு விளைவுண்டு; குறைவில்லை
விசனப்பொய்க் கடலுக்குக் குமரன்கைக் கணையுண்டு. (ஜய)
அலைபட்ட கடலுக்கு மேலே - சக்தி
அருளென்னுந் தோணியி னாலே
தொலையெட்டிக் கரையுற்றுத் துயரற்று விடுபட்டுத்
துணிவுற்ற குலசக்தி சரணத்தில் முடிதொட்டு. (ஜய)
அன்பு செய்தல்
பாரதியர் கவிதைகள்
அன்பு செய்தல்
இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?
வேறு
மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;
ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!
|
|
அழகுத் தெய்வம்
பாரதியர் கவிதைகள்
அழகுத் தெய்வம்
மங்கியதோர் நிலவினிலே கனவிலிது கண்டேன்
வயதுபதி னாறிருக்கும் இளவயது மங்கை
பொங்கிவரும் பெருநிலவு போன்றவொளி முகமும்
புன்னகையின் புதுநிலவும் போற்றவருந் தோற்றம்
துங்கமணி மின்போலும் வடிவத்தாள் வந்து
தூங்காதே யெழுந்தென்னைப் பாரென்று சொன்னாள்
அங்கதனிற் கண்விழித்தேன் அடடாவோ! அடடா!
அழகென்னுந் தெய்வந்தான் அதுவென்றே யறிந்தேன்.
யோகந்தான் சிறந்ததுவோ தவம்பெரிதோ என்றேன்;
யோகமேதவம் தவமே யோகமென வுரைத்தாள்.
ஏகமோ பொருளன்றி இரண்டாமோ என்றேன்;
இரண்டுமாம் ஒன்றுமாம் யாவுமாம் என்றாள்.
தாகமறிந் தீயுமருள் வான்மழைக்கே யுண்டோ
தாகத்தின் துயர்மழைதா னறிந்திடுமோ வென்றேன்
வேகமுடன் அன்பினையே வெளிப்படுத்தா மழைதான்
விருப்புடனே பெய்குவதோ வேறாமே என்றாள்.
காலத்தின்விதி மதியைக் கடந்திடுமோ என்றேன்
காலமே மதியினுக்கோர் கருவியா மென்றாள்.
ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ என்றேன்
நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலா மென்றாள்.
ஏலத்தில் விடுவதுண்டோ எண்ணத்தை யென்றேன்
எண்ணினால் எண்ணியது நண்ணுங்கா ணென்றாள்
மூலத்தைச் சொல்லவோ வேண்டாமோ என்றேன்
முகத்திலருள் காட்டினாள் மோகமது தீர்ந்தேன்.
மனமே (பாரதியர் கவிதைகள்)
கண்ணன் திருவடி எண்ணுக மனமே
திண்ணம் அழியா வண்ணந் தருமே.
தருமே நிதியும் பெருமை புகழும்
கருமா மேனிப் பெருமா னிங்கே.
இங்கே யமரர் சங்கந் தோன்றும்
மங்குந் தீமை பொங்கும் நலமே.
நலமே நாடிற் புலவீர் பாடீர்
நிலமா மகளின் தலைவன் புகழே.
புகழ்வீர் கண்ணன் தகைசே ரமரர்
தொகையோ டசுரப் பகைதீர்ப் பதையே.
தீர்ப்பான் இருளைப் பேர்ப்பான் கலியை
ஆர்ப்பா ரமரர் பார்ப்பார் தவமே.
தவறா துணர்வீர் புவியீர் மாலும்
சிவனும் வானோர் எவரும் ஒன்றே.
ஒன்றே பலவாய் நின்றோர் சக்தி
என்றுந் திகழும் குன்றா வொளியே.
Subscribe to:
Posts (Atom)