கடவுள் வணக்கம்
1. ஆதித் தனிக்கோல மானா னடியவற்காச்
சோதித் திருத்தூணிற் றோன்றினான் - வேதத்தின்
முன்னின்றான் வேழம் முதலே யெனவழைப்ப
என்னென்றா னெங்கட் கிறை.
அவையடக்கம்
2. வெந்தறுகண் வேழத்தை வேரிக் கமலத்தின்
தந்துவினாற் கட்டச் சமைவதொக்கும் - பைந்தொடையில்
தேன்பாடுந் தார் நளன்றன் தெய்வத் திருக்கதையை
யான்பாட லுற்ற இது.
நூல் வரலாறு
-----------
யுதிட்டிரர் வனத்தில் இருந்தது
3. பாண்டவரின் முன்தோன்றல் பார்முழுதுந் தோற்றொருநாள்
ஆண்டகையே தூதுவனாய்ச் சென்றவனி - வேண்ட
மறுத்தா னிருந்தானை மண்ணொடும் போய் மாளப்
பொறுத்தா னிருந்தான் புலர்ந்து.
யுதிட்டிரரை மன்னர் பலர் சென்று கண்டது
4. நாட்டின்கண் வாழ்வைத் துறந்துபோய் நான்மறையோர்
ஈட்டங்கள் சூழ விருந்தானைக் - காட்டில்
பெருந்தகையைக் கண்டார்கள் பேரெழிற்றோள் வேந்தர்
வருந்தகையா ரெல்லோரும் வந்து.
யுதிட்டிரரிடம் பிரகதசுவர் என்னும் முனிவர் வந்தது
5. கொற்றவேல் தானைக் குருநாடன் பாலணைந்தான்
எற்றுநீர் ஞாலத் திருள்நீங்க - முற்றும்
வழிமுறையே வந்த மறையெல்லாந் தந்தான்
மொழிமுறையே கோத்த முனி.
6. மறைமுதல்வ நீயிங்கே வந்தருளப் பெற்றேன்
பிறவிப் பெருந்துயர மெல்லாம் - அறவே
பிழைத்தேன்யா னென்றானப் பேராழி யானை
அழைத்தேவல் கொண்ட அரசு.
7. மெய்த்திருவந் துற்றாலும் வெய்ந்துயர்வந் துற்றாலும்
ஒத்திருக்கும் உள்ளத் துரவோனே - சித்தம்
வருந்தியவா என்னென்றான் மாமறையா லுள்ளம்
திருந்தியவா மெய்த்தவத்தோன் தேர்ந்து.
8. அம்பொற் கயிலைக்கே யாகத் தரவணிவார்
தம்பொற் படைக்குத் தமியனா - எம்பியைமுன்
போக்கினே னென்றுரைத்தான் பூதலத்தும் மீதலத்தும்
வாக்கினே ரில்லாத மன்.
9. காண்டா வனந்தீக் கடவுளுணக் கைக்கணையால்
நீண்ட முகில்தடுத்து நின்றாற்கு - மீண்டமரர்
தாளிரண்டும் நோவத் தனித்தனியே ஓடியநாள்
தோளிரண்டு மன்றோ துணை.
10. பேரரசு மெங்கள் பெருந்திருவுங் கைவிட்டுச்
சேர்வரிய வெங்கானஞ் சேர்தற்குக் - காரணந்தான்
யாதோவப் பாவென்றா னென்றுந்தன் வெண்குடைக்கீழ்
தீதோவப் பார்காத்த சேய்.
11. கேடில் விழுச்செல்வங் கேடெய்து சூதாடல்
ஏடவிழ்தார் மன்னர்க் கியல்பேகாண் - வாடிக்
கலங்கலைநீ யென்றுரைத்தான் காமருவு நாடற்
கிலங்கலைநூன் மார்ப னெடுத்து.
12. கண்ணிழந்து மாயக் கவறாடிக் காவலர்தம்
மண்ணிழந்து போந்து வனம்நண்ணி - விண்ணிழந்த
மின்போலும் நூன்மார்பா மேதினியில் வேறுண்டோ
என்போ லுழந்தா ரிடர்.
முனிவர் நளசரிதம் கூறுதல்
13. சேமவேன் மன்னற்குச் செப்புவான் செந்தனிக்கோல்
நாமவேற் காளை நளனென்பான் - யாமத்
தொலியாழி வைய மொருங்கிழப்பப் பண்டு
கலியால் விளைந்த கதை.
1. சுயம்வர காண்டம்
-----------------
நிடதநாட்டுச் சிறப்பு
14. காமர் கயல்புரழக் காவி முகைநெகிழத்
தாமரையின் செந்தேன் றளையவிழப் - பூமடந்தை
தன்னாட்டம் போலுந் தகைமைத்தே சாகரஞ்சூழ்
நன்னாட்டின் முன்னாட்டும் நாடு.
மாவிந்தநகர்ச் சிறப்பு
15, கோதை மடவார்தங் கொங்கை மிசைத்திமிர்ந்த
சீத களபச் செழுஞ்சேற்றால் - வீதிவாய்
மானக் கரிவழுக்கும் மாவிந்த மென்பதோர்
ஞானக் கலைவாழ் நகர்.
16. நின்று புயல்வானம் பொழிந்த நெடுந்தாரை
என்று மகிழ்கமழு மென்பரால் - தென்றல்
அலர்த்துங் கொடிமாடத் தாயிழையா ரைம்பால்
புலர்த்தும் புகைவான் புகுந்து.
17. வெஞ்சிலையே கோடுவன மென்குழலே சோருவன
அஞ்சிலம்பே வாய்விட் டரற்றுவன - கஞ்சம்
கலங்குவன மாளிகைமேற் காரிகையார் கண்ணே
விலங்குவன மெய்ந்நெறியை விட்டு.
18. தெரிவனநூ லென்றுந் தெரியா தனவும்
வரிவளையார் தங்கள் மருங்கே - ஒருபொழுதும்
இல்லா தனவு மிரவே யிகழ்ந்தெவரும்
கல்லா தனவுங் கரவு.
19. மாமனுநூல் வாழ வருசந் திரன்சுவர்க்கி
தாமரையாள் வைகுந் தடந்தோளான் - காமருபூந்
தாரான் முரணைநகர் தானென்று சாற்றலாம்
பாராளும் வேந்தன் பதி.
அந்நாட்டு மன்னன் நளன் சிறப்பு
20. ஓடாத தானை நளனென் றுளனொருவன்
பீடாருஞ் செல்வப் பெடைவண்டோ - டூடா
முருகுடைய மாதர் முலைநனைக்குந் தண்தார்
அருகுடையான் வெண்குடையா னாங்கு.
21. சீத மதிக்குடைக்கீழ்ச் செம்மை அறங்கிடப்பத்
தாதவிழ்பூந் தாரான் தனிக்காத்தான் - மாதர்
அருகூட்டும் பைங்கிளியும் ஆடற் பருந்தும்
ஒருகூட்டில் வாழ வுலகு.
நளன் பூஞ்சோலை சென்றமை
22. வாங்குவளைக் கையார் வதன மதிபூத்த
பூங்குவளைக் காட்டிடையே போயினான் - தேங்குவளைத்
தேனாடி வண்டு சிறகுலர்த்தும் நீர்நாடன்
பூனாடிச் சோலை புக.
23. வென்றி மதவேடன் வில்லெடுப்ப வீதியெலாம்
தென்றல் மதுநீர் தெளித்துவர - நின்ற
தளவேனல் மீதலருந் தாழ்வரைசூழ் நாடற்கு
இளவேனில் வந்த தெதிர்.
24. தேரின் துகளைத் திருந்திழையார் பூங்குழலின்
வேரின் புனல்நனைப்ப வேயடைந்தான் - கார்வண்டு
தொக்கிருந்தா லித்துழலுந் தூங்கிருள்வெய் யோற்கொதுங்கிப்
புக்கிருந்தா லன்ன பொழில்.
சோலையில் அன்னப்புள் வந்ததும், அதனை மங்கையர் பற்றி அரசன்முன் வைத்தலும்
25. நீணிறத்தாற் சோலை நிறம்பெயர நீடியதன்
தாணிறத்தாற் பொய்கைத் தலஞ்சிவப்ப - மாணிறத்தான்
முன்னப்புள் தோன்றும் முளரித் தலைவைகும்
அன்னப்புள் தோன்றிற்றே யாங்கு.
26. பேதை மடவன்னந் தன்னைப் பிழையாமல்
மேதிக் குலவேறி மென்கரும்பைக் - கோதிக்
கடித்துத்தான் முத்துமிழுங் கங்கைநீர் நாடன்
பிடித்துத்தா வென்றான் பெயர்ந்து.
27. நாடிமட வன்னத்தை நல்ல மயிற்குழாம்
ஓடி வளைக்கின்ற தொப்பவே - நீடியநல்
பைங்கூந்தல் வல்லியர்கள் பற்றிக் கொடுபோந்து
தன்கோவின் முன்வைத்தார் தாழ்ந்து.
28. அன்னந் தனைப்பிடித்தங் காயிழையார் கொண்டுபோய்
மன்னன் திருமுன்னர் வைத்தலுமே - அன்னம்
மலங்கிற்றே தன்னுடைய வான்கிளையைத் தேடிக்
கலங்கிற்றே மன்னவனைக் கண்டு.
29. அஞ்சல் மடவனமே உன்றன் னணிநடையும்
வஞ்சி யனையார் மணிநடையும் - விஞ்சியது
காணப் பிடித்ததுகா ணென்றான் களிவண்டு
மாணப் பிடித்ததார் மன்.
30. செய்ய கமலத் திருவை நிகரான
தையல் பிடித்த தனியன்னம் - வெய்ய
அடுமாற்ற மில்லா அரசன்சொற் கேட்டுத்
தடுமாற்றந் தீர்ந்ததே தான்.
அன்னம் தமயந்தியின் சிறப்புரைத்தமை
31. திசைமுகந்த வெண்கவிதைத் தேர்வேந்தே! உன்றன்
இசைமுகந்த தோளுக் கிசைவாள் - வசையில்
தமையந்தி யென்றோதுந் தையலாள் மென்றோள்
அமையந்தி யென்றோ ரணங்கு.
32. அன்னம் மொழிந்த மொழிபுகா முன்புக்குக்
கன்னி மனக்கோயில் கைக்கொள்ளச் - சொன்னமயில்
ஆர்மடந்தை யென்றா னனங்கன் சிலைவளைப்பப்
பார்மடந்தை கோமான் பதைத்து.
33. எழுவடுதோள் மன்னா இலங்கிழையோர் தூண்டக்
கொழுநுதியிற் சாய்ந்த குவளை - உழுநர்
மடைமிதிப்பத் தேன்பாயும் மாடொலிநீர் நாடன்
கொடைவிதர்ப்பன் பெற்றதோர் கொம்பு.
34. நாற்குணமும் நாற்படையா வைம்புலனும் நல்லமைச்சா
ஆர்க்குஞ் சிலம்பே யணிமுரசா - வேற்படையும்
வாளுமே கண்ணா வதன மதிக்குடைக்கீழ்
ஆளுமே பெண்மை யரசு.
35. மோட்டிளங் கொங்கை முடியச் சுமந்தேற
மாட்டா திடையென்று வாய்விட்டு - நாட்டேன்
அலம்புவார் கோதை யடியிணையில் வீழ்ந்து
புலம்புமாம் நூபுரங்கள் பூண்டு.
36. என்றும் நுடங்கு மிடையென்ப வேழுலகும்
நின்ற கவிகை நிழல்வேந்தே - ஒன்றி
அறுகாற் சிறுபறவை யஞ்சிறகால் வீசும்
சிறுகாற்றுக் காற்றாது தேய்ந்து.
37. செந்தேன் மொழியாள் செறியளக பந்தியின்கீழ்
இந்து முறியென் றியம்புவார் - வந்தென்றும்
பூவாளி வேந்தன் பொருவெஞ் சிலைசார்த்தி
ஏவாளி தீட்டும் இடம்.
நளன் தமயந்திபால் காதல் கொண்டது
38. அன்னமே நீயுரைத்த அன்னத்தை யென்னாவி
உன்னவே சோரு முனக்கவளோ - டென்ன
அடைவென்றான் மற்றந்த அன்னமதை முன்னே
நடைவென்றாள் தன்பால் நயந்து.
39. பூமனைவாய் வாழ்கின்ற புட்குலங்கள் யாமள்தான்
மாமனைவாய் வாழும் மயிற்குலங்கட் - காமன்
படைகற்பான் வந்தடைந்தான் பைந்தொடியாள்பாத
நடைகற்பான் வந்தடைந்தே யாம்.
40. இற்றது நெஞ்ச மெழுந்த திருங்காதல்
அற்றது மான மழிந்ததுநாண் - மற்றினியுன்
வாயுடைய தென்னுடைய வாழ்வென்றான் வெங்காமத்
தீயுடைய நெஞ்சுடையான் தேர்ந்து.
அன்னம் நளனுக்கு ஆறுதல் கூறித் தமயந்திபால் சென்றது
41. வீமன் திருமடந்தை மென்முலையை யுன்னுடைய
வாம நெடும்புயத்தே வைகுவிப்பேன் - சேம
நெடுங்குடையா யென்றுரைத்து நீங்கியதே யன்னம்
ஒடுங்கிடையாள் தன்பா லுயர்ந்து.
நளனது விரக தாபம்
42. இவ்வளவிற் செல்லுங்கொ லிவ்வளவிற் காணுங்கொல்
இவ்வளவிற் காத லியம்புங்கொல் - இவ்வளவில்
மீளுங்கொ லென்றுரையா விம்மினான் மும்மதம்நின்
றாளுங்கொல் யானை யரசு.
43. சேவல் குயிற்பெடைக்குப் பேசுஞ் சிறுகுரல்கேட்
டாவி யுருகி யழிந்திட்டான் - பூவின்
இடையன்னஞ் செங்கா லிளவன்னஞ் சொன்ன
நடையன்னந் தன்பா னயந்து.
44. அன்ன முரைத்த குயிலுக் கலசுவான்
மென்மயில்தான் தோகை விரித்தாட - முன்னதனைக்
கண்டாற்றா துள்ளங் கலங்கினான் காமநோய்
கொண்டார்க்கிஃ தன்றோ குணம்.
45. வாரணியுங் கொங்கை மடவார் நுடங்கிடைக்குப்
பேருவமை யாகப் பிறந்துடையீர் - வாரீர்
கொடியா ரெனச்செங்கை கூப்பினான நெஞ்சம்
துடியா நெடிதுயிரரச் சோர்ந்து.
தமயந்தி அன்னத்தை நோக்கி வினாவியது
46. மன்னன் விடுத்த வடிவிற் றிகழ்கின்ற
அன்னம்போய்க் கன்னி யருகணைய - நன்னுதலும்
தன்னாடல் விட்டுத் தனியிடஞ்சேர்ந் தாங்கதனை
என்னாடல் சொல்லென்றா ளீங்கு.
அன்னம் நளன் சிறப்புரைத்தல்
47. செம்மனத்தான் தண்ணளியான் செங்கோலான் மங்கையர்கள்
தம்மனத்தை வாங்குந் தடந்தோளான் - மெய்ம்மை
நளனென்பான் மேனிலத்தும் நானிலத்தும் மிக்கான்
உளனென்பான் வேந்த னுனக்கு.
48. அறங்கிடந்த நெஞ்சு மருளொழுகு கண்ணும்
மறங்கிடந்த திண்டோ ள் வலியும் - நிலங்கிடந்த
செங்கண்மா லல்லனேல் தேர்வேந்த ரொப்பரோ
அங்கண்மா ஞாலத் தவற்கு.
தமயந்தி நளன்பால் கொண்ட காதற்றிறம்
49. புள்ளின் மொழியினொடு பூவாளி தன்னுடைய
உள்ளங் கவர வொளியிழந்த - வெள்ளை
மதியிருந்த தாமென்ன வாய்ந்திருந்தாள் வண்டின்
பொதியிருந்த மெல்லோதிப் பொன்.
50. மன்னன் மனத்தெழுந்த மையல்நோய் அத்தனையும்
அன்ன முரைக்க வகமுருகி - முன்னம்
முயங்கினாள் போல்தன் முலைமுகத்தைப் பாரா
மயங்கினா ளென்செய்வாள் மற்று.
51. வாவி யுறையும் மடவனமே யென்னுடைய
ஆவி யுவந்தளித்தா யாதியால் - காவினிடைத்
தேர்வேந்தற் கென்னிலைமை சென்றுரைத்தி யென்றுரைத்தாள்
பார்வேந்தன் பாவை பதைத்து.
தோழியர் தமயந்தியின் நிலை வேறுபாட்டைத் தாய்க்குரைக்க அவள் அரசனுக்கு அறிவித்தது
52. கொற்றவன்தன் தேவிக்குக் கோமகந்தன் தோழியர்கள்
உற்ற தறியா வுளநடுங்கிப் - பொற்றொடிக்கு
வேறுபா டுண்டென்றார் வேந்தனுக்கு மற்றதனைக்
கூறினாள் பெற்ற கொடி.
வீமராசன் தமயந்தி மாளிகைக்கு வந்தது
53. கருங்குழலார் செங்கையினால் வெண்கவரிப் பைங்கால்
மருங்குலவ வார்முரசம் ஆர்ப்ப - நெருங்கு
பரிவளை நின்றேங்கப் போய்ப்புக்கான் பெற்ற
வரிவளைக்கை நல்லாள் மனை.
தமயந்தி தந்தையை வணங்கியது
54. கோதை சுமந்த கொடிபோ லிடைநுடங்கத்
தாதை திருவடிமேல் தான்வீழ்ந்தாள் - மீதெல்லாம்
காந்தாரம் பாடிக் களிவண்டு நின்றரற்றும்
பூந்தாரம் மெல்லோதிப் பொன்.
வீமன் தமயந்திக்குச் சுயம்வரம் ஏற்படுத்தியது
55. பேரழகு சோர்கின்ற தென்னப் பிறைநுதன்மேல்
நீரரும்பத் தன்பேதை நின்றாளைப் - பாராக்
குலவேந்தன் சிந்தித்தான் கோவேந்தர் தம்மை
மலர்வேய்ந்து கொள்ளும் மணம்.
56. மங்கை சுயம்வரநாள் ஏழென்று வார்முரசம்
எங்கும் அறைகென் றியம்பினான் - பைங்கமுகின்
கூந்தன்மேற் கங்கைக் கொழுந்எதாடும் நன்னாடன்
வேந்தர்மேல் தூதோட விட்டு.
சுயம்வரத்திற்கு அரசர்களின் வருகை
57. மாமுத்த வெண்குடையான் மால்களிற்றான் வண்டிசைக்கும்
தாமத் தரிச்சந் திரன்சுவர்க்கி - நாமத்தால்
பாவேய்ந்த செந்தமிழா மென்னப் பரந்ததே
கோவேந்தர் செல்வக் குழாம்.
58. புள்ளுறையுஞ் சோலைகளும் பூங்கமல வாவிகளும்
உள்ளும் புறமு மினிதுறைந்தார் - தெள்ளரிக்கண்
பூமகளைப் பொன்னைப் பொருவேல் விதர்ப்பன்றன்
கோமகளைத் தம்மனத்தே கொண்டு.
நளன் அன்னம் திரும்பிவரக் கண்டது
59. வழிமேல் விழிவைத்து வாள்நுதலாள் நாம
மொழிமேற் செவிவைத்து மோகச் - சுழிமேல்தா
நெஞ்சோட வைத்தயர்வான் கண்டான் நெடுவானில்
மஞ்சோட அன்னம் வர.
60. முகம்பார்த் தருள்நோக்கி முன்னிரந்து செல்வர்
அகம்பார்க்கு மற்றாரைப் போல - மிகுங்காதல்
கேளா விருந்திட்டா னன்னத்தைக் கேளாரை
வாளால் விருந்திட்ட மன்.
நளனது வினாவும் அன்னத்தின் மறுமொழியும்
61. அன்னக் குலத்தி னரசே அழிகின்ற
என்னுயிரை மீள வெனக்களித்தாய் - முன்னுரைத்த
தேமொழிக்குத் தீதிலவே யென்றான் திருந்தாரை
ஏமொழிக்கும் வேலா னெடுத்து.
62. கொற்றவன்ற னேவலினாற் போயக் குலக்கொடிபால்
உற்றதும் ஆங்கவள்தான் உற்றதுவும் - முற்றும்
மொழிந்ததே அன்னம் மொழிகேட் டரசற்
கழிந்ததே யுள்ள அறிவு.
நளனது காதல் நோய் நிலை
63. கேட்ட செவிவழியே கேளா துணர்வோட
ஓட்டை மனத்தோ டுயிர்தாங்கி - மீட்டும்
குழியிற் படுகரிபோற் கோமான் கிடந்தான்
தழலிற் படுதளிர்போற் சாய்ந்து.
வீமராசன் விடுத்த தூதர் நளனிடம் வந்தது
64. கோதை சுயம்வரநாள் கொற்றவனுக் குற்றுரைப்ப
ஏதமிலாக் காட்சியர்வந் தெய்தினார் - போதில்
பெடையொடு வண்டுறங்கும் பேரொலிநீர் நாடன்
அடையாத வாயி லகம்.
65. காவலன்றன் தூதர் கடைக்கா வலர்க்கறிவித்
தேவலிற்போ யீதென் றியம்புதலும் - மாவில்
பொலிந்ததேர் பூட்டென்றான் பூவாளி பாய
மெலிந்ததோள் வேந்தன் விரைந்து.
நளன் தேரூர்ந்து குண்டினபுரம் சென்றது
66. கெட்ட சிறுமருங்குற் கீழ்மகளிர் நீள்வரம்பில்
இட்ட பசுங்குவளை யேரடித்த - கட்டி
கரையத்தே னூறுங் கடல்நாட னூர்க்கு
விரையத்தே ரூரென்றான் வேந்து.
67. சடைச்செந்நெல் பொன்விளைக்குந் தன்னாடு பின்னாகக்
கடல்தானை முன்னாகக் கண்டான் - அடற்கமைந்த
வல்லியரும் பொற்றாம வீமன் திருமகளாம்
நல்லுயிரும் வாழும் நகர்.
நாரதமுனிவர் வானுலகு சென்றது
68. நெற்றித் தனிக்கண் நெருப்பைக் குளிர்விக்கும்
கொற்றத் தனியாழ்க் குலமுனிவன் - உற்றடைந்தான்
தேனாடுந் தெய்வத் தருவுந் திருமணியும்
வானாடுங் காத்தான் மருங்கு.
இந்திரன் நாரதரை வினாவியது
69. வீரர் விறல்வேந்தர் விண்ணாடு சேர்கின்றார்
ஆரு மிலராலென் றையுற்று - நாரதனார்
நன்முகமே நோக்கினான் நாகஞ் சிறகரிந்த
மின்முகவேற் கையான் விரைந்து.
நாரதர், தமயந்தி சுயம்வரத்தையும் அவளது எழிற் சிறப்பையும் கூறியது
70. வீமன் மடந்தை மணத்தின் விரைதொடுத்த
தாமம் புனைவான் சயம்வரத்து - மாமன்னர்
போயினா ரென்றான் புரந்தரற்குப் பொய்யாத
வாயினான் மாதவத்தோர் மன்.
71. அழகு சுமந்திள்த்த ஆகத்தாள் வண்டு
பழகு கருங்கூந்தற் பாவை - மழகளிற்று
வீமன் குலத்துக்கோர் மெய்த்தீபம் மற்றவளே
காமன் திருவுக்கோர் காப்பு.
அச்சுயம்வரத்திற்கு இந்திரன் முதலிய தேவர்கள் புறப்பட்டது
72. மால்வரையை வச்சிரத்தா லீர்ந்தானும் வானவரும்
கோல்வளைதன் மாலை குறித்தெழுந்தார் - சால்புடைய
விண்ணாடு நீங்கி விதர்ப்பன் திருநகர்க்கு
மண்ணாடு நோக்கி மகிழ்ந்து.
நளனைத் தேவர்கள் வழியில் கண்டது
73. பைந்தெரியல் வேல்வேந்தன் பாவைபாற் போயினதன்
சிந்தை கெடுத்தனைத் தேடுவான் - முந்தி
வருவான்போல் தேர்மேல் வருவானைக் கண்டார்
பெருவானிற் றேவர் பெரிது.
இந்திரன் நளனைத் தமயந்திபால் தூதுசெல்ல வேண்டியது
74. காவற் குடைவேந்தைக் கண்ணுற்ற விண்ணவர்கோன்
ஏவற் றொழிலுக் கிசையென்றான் - ஏவற்கு
மன்னவனும் நேர்ந்தான் மனத்தினான் மற்றதனை
இன்னதென றோரா திசைந்து.
75. செங்கண் மதயானைத் தேர்வேந்தே தேமாலை
எங்களிலே சூட்ட இயல்வீமன் - மங்கைபால்
தூதாக வென்றானத் தோகையைத்தன் ஆகத்தால்
கோதாக வென்றானக் கோ.
76. தேவர் பணிதலைமேற் செல்லுந் திரிந்தொருகால்
மேவுமிளங் கன்னிபால் மீண்டேகும் - பாவில்
குழல்போல நின்றுழலுங் கொள்கைத்தே பூவின்
நிழல்போலுந் தண்குடையான் நெஞ்சு.
77. ஆவ துரைத்தா யதுவே தலைநின்றேன்
தேவர்கோ னேயத் திருநகரிற் - காவல்
கடக்குமா றென்னென்றான் காமநீ ராழி
அடக்குமா றுள்ளத் தவன்.
78. வார்வெஞ் சிலையொழிய வச்சிரத்தால் மால்வரையைப்
போர்வெஞ் சிறகறிந்த பொற்றோளான் - யாருமுனைக்
காணார்போய் மற்றவளைக் காணென்றான் கார்வண்டின்
பாணாறுந் தாரானைப் பார்த்து.
நளன் தூது சென்றதும், தமயந்தியைக் கண்டதும்
79. இசைமுகந்த வாயும் இயல்தெரிந்த நாவும்
திசைமுகந்தா லன்ன தெருவும் - வசையிறந்த
பொன்னாடு போந்திருந்தாற் போன்றதே போர்விதர்ப்ப
நன்னாடற் கோமாந்தன் நாடு.
80. தேங்குவளை தன்னிலே செந்தா மரைமலரப்
பூங்குவளை தாமரைக்கே பூத்ததே - ஆங்கு
மதுநோக்குந் தாரானும் வாள்நுதலுந் தம்மில்
பொதுநோக் கெதிர்நோக்கும் போது.
நளனைக் கண்ட தமயந்தி நிலை
81. நீண்ட கமலத்தை நீலக் கடைசென்று
தீண்டு மளவில் திறந்ததே - பூண்டதோர்
அற்பின்தாழ் கூந்தலாள் வேட்கை யகத்தடக்கிக்
கற்பின்தாழ் வீழ்ந்த கதவு.
82. உய்ஞ்சு கரையேற வொட்டுங்கொ லொண்டொடியாள்
நெஞ்சு தடவும் நெடுங்கண்கள் - விஞ்சவே
நீண்டதோ வங்ஙனே யிங்ஙனே நீள்மலராள்
ஆண்டதோள் மன்ன னழகு.
83. மன்னாகத் துள்ளழுந்தி வாரணிந்த மென்முலையும்
பொன்னாணும் புக்கொளிப்பப் புல்லுவனென் - றுன்னா
எடுத்தபே ரன்பை யிடையே புகுந்து
தடுத்ததே நாணாந் தறி.
தமயந்தி நளனை யாவனென வினாவியது
84. காவல் கடந்தெங்கள் கன்னிமா டம்புகுந்தாய்
யாவனோ விஞ்சைக் கிறைவனோ - தேவனோ
உள்ளவா சொல்லென்றா ளூசற் குழைமீது
வெள்ளவாள் நீர்சோர விட்டு.
நளனது மறுமொழி
85. தீராத காமத் தழலைத்தன் செம்மையெனும்
நீரா லவித்துக் கொடுநின்று - வாராத
பொன்னாட ரேவலுடன் போந்தவா சொல்லித்தன்
நன்னாடுஞ் சொன்னான் நளன்.
86. என்னுரையை யாதென் றிகழா திமையவர்வாழ்
பொன்னுலகங் காக்கும் புரவலனை - மென்மாலை
சூட்டுவா யென்றான் தொடையில் தேன்தும்பிக்கே
ஊட்டுவா னெல்லா முரைத்து.
தமயந்தி கூறிய உறுதிமொழி
87. இயமரநின் றார்ப்ப இனவளைநின் றேங்க
வயமருதோள் மன்னா வகுத்த - சுயம்வரந்தான்
நின்பொருட்டா லென்று நினைகென்றா நீள்குடையான்
தன்பொருட்டால் நைவாள் தளர்ந்து.
88. போதரிக்கண் மாதராள் பொன்மாலை சூட்டத்தான்
ஆதரித்தார் தம்மோ டவையகத்தே - சோதிச்
செழுந்தரள வெண்குடையாய் தேவர்களும் நீயும்
எழுந்தருள்க வென்றா ளெடுத்து.
89. வானவர்கோ னேவல் வழிச்சென்று வாணுதலைத்
தானணுகி மீண்டபடி சாற்றவே - தேன்முரலும்
வண்டார் நளன்போந்து வச்சிராயு தற்றொழுதான்
கண்டா ருவப்பக் கலந்து.
நளனுக்கு அத்தேவர்கள் அளித்த வரங்கள்
90. விண்ணவர்தம் ஏவலுடன் வீமன் திருமகள்பால்
நண்ணு புகழ்நளனும் நன்குரைத்த - பெண்ணங்கின்
வன்மொழியுந் தேவர் மனமகிழத் தான்மொழிந்த
மென்மொழியுஞ் சென்றுரைத்தான் மீண்டு.
91. அங்கி யமுதம்நீ ரம்பூ அணியாடை
எங்குநீ வேண்டினைமற் றவ்விடத்தே - சங்கையறப்
பெற்றா யெனவருண ஆகலண்டன் தருமன்
மற்றோனு மீந்தார் வரம்.
தமயந்தியின் துயர நிலை
92. தூதுவந்த காதலனைச் சொல்லிச் செலவிடுத்த
மாதுவந்து பின்போன வன்னெஞ்சால் - யாதும்
அயிர்த்தா ளுயிர்த்தா ளணிவதன மெல்லாம்
வியர்த்தா ளுரைமறந்தாள் வீழ்ந்து.
93. உள்ளம்போய் நாண்போ யுரைபோய் வரிநெடுங்கண்
வெள்ளம்போய் வேகின்ற மென்றளிர்போல் - பிள்ளைமீன்
புள்ளரிக்கும் நாடன் திருமடந்தை பூவாளி
உள்ளரிக்கச் சோர்ந்தா ளுயிர்.
94. பூவின்வாய் வாளி புகுந்த வழியேயென்
ஆவியார் போனாலு மவ்வழியே - பாவியேன்
ஆசைபோ காதென் றழிந்தா ளணியாழின்
ஓசைபோற் சொல்லா ளுயிர்த்து.
சூரியன் அத்தமித்தல்
95. வையம் பகலிழப்ப வானம் ஒளியிழப்பப்
பொய்கையும் நீள்கழியும் புள்ளிழப்பப் - பையவே
செவ்வாய அன்றில் துணையிழப்பச் சென்றடைந்தான்
வெவ்வாய் விரிகதிரோன் வெற்பு.
96. மாயிரு ஞாலத் துயிர்காண வானரங்கில்
பாயிரு ளென்னும் படாம்வாங்கிச் - சேய்நின்
றறைந்தா ரணம்பாட ஆடிப்போய் வெய்யோன்
மறைந்தான் குடபால் வரை.
மாலைப்பொழுதின் வரவு
97. மல்லிகையே வெண்சங்கா வண்டூத வான்கருப்பு
வில்லி கணைதெரிந்து மெய்காப்ப - முல்லையெனும்
மென்மாலை தோளசைய மெல்ல நடந்ததே
புன்மாலை யந்திப் பொழுது.
98. புற்கென்றா ரந்தி புனைமலர்க்கண் நீரரும்ப
நிற்கின்ற தந்தோ நிலங்காப்பான் - முற்கொண்
டடைகின்ற வேந்தர்க்கு மாண்டஞ்சி னோர்க்கும்
இடைநின்ற காலம்போ லின்று.
பிறையின் தோற்றம்
99. பைந்தொடியா ளாவி பருகுவான் நிற்கின்ற
அந்தி முறுவலித்த தாமென்ன - வந்ததால்
மையார்வேற் கண்ணாள் வனமுலைமே லாரழலைப்
பெய்வா னமைந்த பிறை.
100. கூட்டுமைபோற் சிறந்த கூரிருளைக் கூன்கோட்டால்
கோட்டுமண் கொண்ட குளிர்திங்கள் - ஈட்டுமணிப்
பூணிலா மென்முலைமேற் போதச் சொரிந்ததே
நீணிலா வென்னும் நெருப்பு.
தமயந்தியின் துயர நிலை
101. அன்னங்காள் நீங்களுமவ் வாதித்தன் தானும்போய்
மன்னும் படியகலா வல்லிரவின் - மின்னும்
மழைத்தாரை வல்லிருட்கும் வாடைக்கும் நாங்கள்
பிழைத்தால்வந் தேனென்னும் பேர்.
102. கொப்புளங் கொங்கைமீர் திங்கட் சுடர்பட்டுக்
கொப்புளங் கொண்ட குளிர்வானை - இப்பொழுது
மீன்பொதிந்து நின்ற விசும்பென்ப தென்கொலோ
தேன்பொதிந்த வாயால் தெரிந்து.
103. கானுந் தடங்காவுங் காமன் படைவீடு
வானுந்தேர் வீதி மறிகடலும் - மீனக்
கொடியாடை வையமெலாங் கோதண்ட சாலை
பொடியாடிக் கொன்றதெல்லாம் பொய்.
104. கொள்ளைபோ கின்ற துயிரென்னும் கோளரவின்
முள்ளெயிறோ மூரி நிலாவென்னும் - உள்ளம்
கொடிதிரா வென்னுங் குழையுந் தழல்போல்
நெடிதிரா வாய்புலர நின்று.
105. வெங்கதிரோன் தன்னை விழுங்கிப் புழுங்கியோ
கொங்கை யனலிற் கொளுந்தியோ - திங்கள்
விரிகின்ற வெண்ணிலவால் வேகின்ற தேயோ
எரிகின்ற தென்னோ இரா.
106. ஊழி பலவோ ரிரவாயிற் றோவென்னும்
கோழி குரலடைத்த தோவென்னும் - ஆழி
துயிலாதோ வென்னுஞ் சுடர்மதியங் கான்ற
வெயிலா லுடலுருகா வீழ்ந்து.
107. ஆடி வரிவண் டருகே பறக்கவே
வாடி மெலிவாள் வனமுலைமேல் - ஓடிப்
பொறையாகச் சோர்வாள் பொறுக்குமோ மோகத்
துறைவா யடங்காத் துயர்.
108. ஈர மதியே! இளநிலவே யிங்ஙமேன
சோர்குழலின் மீதே சொரிவதெவன் - மாரன்
பொரவளித்தான் கண்ணி யுனக்குப் புலரா
இரவளித்தா னல்லனோ இன்று.
109. தாங்கு நிலவின் தழல்போய்த் தலைக்கொள்ளத்
தேங்குழல்சேர் வண்டு சிறைவெதும்ப - ஓங்குயிர்ப்பின்
தாமங் கரியாத் தனியே தளர்கின்றாள்
யாமங் கரியாக இன்று.
110. மையிட்ட கண்ணருவி வார வளைசோரக்
கையிற் கபோலத் தலம்வைத்து - மெய்வருந்தி
தேனிருந்த பூங்கணையே தீயாகத் தேமொழியாள்
தானிருந்து செய்வாள் தவம்.
இருளின் மிகுதியும் தமயந்தியின் துயரமும்
111. அள்ளிக் கொளலா யடையத் திரண்டொன்றாய்க்
கொள்ளிக்கும் விள்ளாத கூரிருளாய் - உள்ளம்
புதையவே வைத்த பொதுமகளிர் தங்கள்
இதயமே போன்ற திரா.
112. ஊக்கிய சொல்ல ரொலிக்குந் துடிக்குரலர்
வீக்கிய கச்சையர் வேல்வாளர் - காக்க
இடையாமங் காவலர்கள் போந்தா ரிருளில்
புடைவா யிருள்புடைத்தாற் போன்று.
113. சேமங் களிறுபுகத் தீம்பாலின் செவ்வழியாழ்
தாமுள் ளிழைபுகுந்த தார்வண்டு - காமன்தன்
பூவாளி ஐந்தும் புகத்துயில் புக்கதே
ஓவாது முந்நீ ருலகு.
114. ஊன்தின் றுவகையா லுள்ள வுயிர்புறம்பே
தோன்றுங் கழுதுந் துயின்றதே - தான்தன்
உரைசோரச் சோர வுடல்சோர வாயின்
இரைசோரக் கைசோர நின்று.
115. அன்றிலொருகண் துயின் றொருகண் ணார்வத்தால்
இன்றுணைமேல் வைத்துறங்கு மென்னுஞ்சொல் - இன்று
தவிர்ந்ததே போலரற்றிச் சாம்புகின்ற போதே
அவிழ்ந்ததே கண்ணீ ரவட்கு.
116. ஏழுலகுஞ் சூழிருளா யென்பொருட்டால் வேகின்ற
ஆழ்துயர மேதென் றறிகிலேன் - பாழி
வரையோ எனுநெடுந்தோண் மன்னாவோ தின்னும்
இரையோ இரவுக்கு யான்?
117. கருவிக்கு நீங்காத காரிருள்வாய்க் கங்குல்
உருவிப் புகுந்ததா லூதை - பருகிக்கார்
வண்டுபோ கட்ட மலர்போல் மருள்மாலை
உண்டுபோ கட்ட வுயிர்க்கு.
118. எழுந்திருக்கு மேமாந்து பூமாந் தவிசின்
விழுந்திருக்குந் தன்னுடம்பை மீளச் - செழுந்தரளத்
தூணோடு சேர்க்குந் துணையேது மில்லாதே
நாணோடு நின்றழியும் நைந்து.
119. விரிகின்ற மெல்லமளி வெண்ணிலவின் மீதே
சொரிகின்ற காரிருள்போற் சோரும் - புரிகுழலைத்
தாங்குந் தளருந் தழலே நெடிதுயிர்க்கும்
ஏங்குந் துயரோ டிருந்து.
120. மயங்குந் தெளியும் மனநடுங்கும் வெய்துற்று
உயங்கும் வறிதே யுலாவும் - வயங்கிழைபோய்ச்
சோருந் துயிலுந் துயிலாக் கருநெடுங்கண்
நீருங் கடைசோர நின்று.
121. உடைய மிடுக்கெல்லா மென்மேல் ஓச்சி
விடிய மிடுக்கின்மை யாலோ - கொடியன்மேல்
மாகாதல் வைத்ததோ மன்னவர்த மின்னருளோ
ஏகாத தென்னோ இரா.
122. விழுது படத்திணிந்த வீங்கிருள்வாய்ப் பட்டுக்
கழுதும் வழிதேடுங் கங்குற் - பொழுதிடையே
நீருயிர்க்குங் கண்ணோடு நெஞ்சுருகி வீழ்வார்தம்
ஆருயிர்க்கு முண்டோ அரண்.
பொழுது புலர்ந்தமை
123. பூசுரர்தங் கைம்மலரும் பூங்குமுத மும்முகிழ்ப்பக்
காசினியுந் தாமரையுங் கண்விழிப்ப - வாசம்
அலர்ந்ததேங் கோதையின் ஆழ்துயரத் தோடு
புலர்ந்ததே யற்றைப் பொழுது.
சூரியோதயம்
124. வில்லி கணையிழப்ப வெண்மதியஞ் சீரிழப்பத்
தொல்லை யிருள்கிழியத் தோன்றினான் - வல்லி
மணமாலை வேட்டிடுதோள் வாளரசர் முன்னே
குணவாயிற் செங்கதிரோன் குன்று.
125. முரைசெறிந்த நாளேழும் முற்றியபின் கொற்ற
வரைசெறிந்த தோள்மன்னர் வந்தார் - விரைசெறிந்த
மாலை துவள முடிதயங்க வால்வளையும்
காலை முரசுங் கலந்து.
நளன் சுயம்வர மண்டபம் வந்தமை
126. மன்றலந்தார் மன்னன் நடுவணைய வந்திருந்தான்
கன்று குதட்டிய கார்நீலம் - முன்றில்
குறுவிழிக்கு நேர்நாடன் கோதைபெருங் கண்ணின்
சிறுவிழிக்கு நோற்றிருந்த சேய்.
தமயந்தி சுயம்வர மண்டபம் வந்தது
127. நித்திலத்தின் பொற்றோடு நீலமணித் தோடாக
மைத்தடங்கண் செல்ல வயவேந்தர் - சித்தம்
மருங்கே வரவண்டின் பந்தற்கீழ் வந்தாள்
அருங்கேழ் மணிப்பூண் அங்கு.
128. பேதை மடமயிலைச் சூழும் பிணைமான்போல்
கோதை மடமானைக் கொண்டணைந்த - மாதர்
மருங்கின் வெளிவழியே மன்னவர்கண் புக்கு
நெருங்கினவே மேன்மேல் நிறைந்து.
129. மன்னர் விழித்தா மரைபூத்த மண்டபத்தே
பொன்னின் மடப்பாவை போய்ப்புக்காள் - மின்னிறத்துச்
செய்யதாள் வெள்ளைச் சிறையன்னஞ் செங்கமலப்
பொய்கைவாய் போவதே போன்று.
130. வடங்கொள் வனமுலையாள் வார்குழைமேல் ஓடும்
நெடுங்கண் கடைபார்த்து நின்றான் - இடங்கண்டு
பூவாளி வேந்தன்றன் பொன்னாவம் பின்னேயிட்டு
ஐவாளி நாணின்பால் இட்டு.
தோழி தமயந்திக்கு, அங்கு வந்திருந்த அரசர்கள்
ஒவ்வொருவரையும் குறிபிட்டுரைத்தல்
131. மன்னர் குலமும் பெயரும் வளநாடும்
இன்ன பரிசென் றியலணங்கு - முன்னின்று
தார்வேந்தன் பெற்ற தனிக்கொடிக்குக் காட்டினாள்
தேர்வேந்தர் தம்மைத் தெரிந்து.
சோழ மன்னன்
132. பொன்னி யமுதப் புதுக்கொழுந்து பூங்கமுகின்
சென்னி தடவுந் திருநாடன் - பொன்னின்
சுணங்கவிழ்ந்த பூண்முலையாய் சூழமரிற் றுன்னார்
கணங்கவிழ்ந்த வேலனிவன் காண்.
பாண்டிய மன்னர்
133. போர்வாய் வடிவேலாற் போழப் படாதோரும்
சூர்வாய் மதரரிக்கண் தோகாய்கேள் - பார்வாய்ப்
பருத்ததோர் மால்வரையைப் பண்டொருகாற் செண்டால்
திரித்தகோ விங்கிருந்த சேய்.
சேர மன்னன்
134. வென்றி நிலமடந்தை மென்முலைமேல் வெண்டுகில்போல்
குன்றருவி பாயுங் குடநாடன் - நின்றபுகழ்
மாதே யிவன்கண்டாய் மானத் தனிக்கொடியின்
மீதே சிலையுயர்த்த வேந்து.
குரு நாட்டரசன்
135. தெரியில் யிவன்கண்டாய் செங்கழுநீர் மொட்டை
அரவின் பசுந்தலையென் றஞ்சி - இரவெல்லாம்
பிள்ளைக் குருகிரங்கப் பேதைப்புள் தாலாட்டும்
வள்ளைக் குருநாடர் மன்.
மத்திர நாட்டரசன்
136. தேமருதார்க் காளை யிவன்கண்டாய் செம்மலர்மேல்
காமருசங் கீன்ற கதிர்முத்தைத் - தாமரைதன்
பத்திரத்தா லேற்கும் படுகர்ப் பழனஞ்சூழ்
மத்திரத்தார் கோமான் மகன்.
மச்ச நாட்டரசன்
137. அஞ்சாயல் மானே யிவன்கண்டாய் ஆலைவாய்
வெஞ்சாறு பாய விளைந்தெழுந்த - செஞ்சாலிப்
பச்சைத்தாள் மேதிக் கடைவாயிற் பாலொழுகும்
மச்சத்தார் கோமான் மகன்.
அவந்தி நாட்டரசன்
138. வண்ணக் குவளை மலர்வௌவி வண்டெடுத்த
பண்ணிற் செவிவைத்துப் பைங்குவளை - உண்ணா
தருங்கடா நிற்கு மவந்திநா டாளும்
இருங்கடா யானை இவன்.
பாஞ்சால மன்னன்
139. விடக்கதிர்வேற் காளை யிவன்கண்டாய் மீனின்
தொடக்கொழியப் போய்நிமிர்ந்த தூண்டின் - மடற்கமுகின்
செந்தோடு பீறத்தேன் செந்நெற் பசுந்தோட்டில்
வந்தோடு பாஞ்சாலர் மன்.
கோசல மன்னன்
140. அன்னந் துயிலெழுப்ப அந்தா மரைவயலில்
செந்நெ லரிவார் சினையாமை - வன்முதுகில்
கூனிரும்பு தீட்டுங் குலக்கோ சலநாடன்
தேனிருந்த சொல்லாயிச் சேய்.
மகத நாட்டரசன்
141. புண்டரிகந் தீயெரிவ போல்விரியப் பூம்புகைபோல்
வண்டிரியுந் தெண்ணீர் மகதர்கோன் - எண்டிசையில்
போர்வேந்தர் கண்டறியாப் பொன்னாவம் பின்னுடைய
தேர்வேந்தன் கண்டாயிச் சேய்.
அங்க நாட்டரசன்
142. கூன்சங்கின் பிள்ளை கொடிப்பவழக் கோடிடறித்
தேன்கழியில் வீழத் திரைக்கரத்தால் - வான்கடல்வந்
தந்தோ வெனவெடுக்கு மங்கநா டாளுடையான்
செந்தேன் மொழியாயிச் சேய்.
கலிங்கர் கோன்
143. த்ள்வாளைக் காளைமீன் மேதிக் குலமெழுப்பக்
கள்வார்ந்த தாமரையின் காடுழக்கிப் - புள்ளோடு
வண்டிரியச் செல்லும் மணிநீர்க் கலிங்கர்கோன்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.
கேகயர் கோன்
144. அங்கை வரிவளையா யாழித் திரைகொணர்ந்த
செங்கண் மகரத்தைத் தீண்டிப்போய் - கங்கையிடைச்
சேல்குளிக்குங் கேகயர்கோன் றெவ்வாடற் கைவரைமேல்
வேல்குளிக்க நின்றானிவ் வேந்து.
காந்தார வேந்தன்
145. மாநீர் நெடுங்கயத்து வள்ளைக் கொடிமீது
தனேகு மன்னந் தனிக்கயிற்றில் - போநீள்
கழைக்கோ தையரேய்க்கும் காந்தார நாடன்
மழைக்கோதை மானேயிம் மன்.
சிந்து நாட்டரசன்
146. அங்கை நெடுவேற்கண் ஆயிழையாய் வாவியின்வாய்ச்
சங்கம் புடைபெயரத் தான்கலங்கிச் - செங்கமலப்
பூச்சிந்தும் நாட்டேறல் பொன்விளைக்குந் தண்பணைசூழ்
மாச்சிந்து நாட்டானிம் மன்.
தேவர்கள் நளனுருவில் இருக்கத் தமயந்தி கண்டு தியங்கியது
147. காவலரைத் தன்சேடி காட்டக்கண் டீரிருவர்
தேவர் நளனுருவாச் சென்றிருந்தார் - பூவரைந்த
மாசிலாப் பூங்குழலாள் மற்றவரைக் காணநின்று
ஊசலா டுற்றா ளுளம்.
148. பூணுக் கழகளிக்கும் பொற்றொடியைக் கண்டக்கால்
நாணுக்கு நெஞ்சுடைய நல்வேந்தர் - நீணிலத்து
மற்றேவர் வாராதார் வானவரும் வந்திருந்தார்
பொற்றேர் நள்னுருவாப் போந்து.
தமயந்தியின் சூளுரை
149. மின்னுந்தார் வீமன்றன் மெய்ம்மரபிற் செம்மைசேர்
கன்னியான் ஆகிற் கடிமாலை - அன்னந்தான்
சொன்னவனைச் சூட்ட அருளென்றாள் சூழ்விதியின்
மன்னவனைத் தன்மனத்தே கொண்டு.
தமயந்தி நளனை அறிந்தமை
150. கண்ணிமைத்த லாலடிகள் காசினியில் தோய்தலால்
வண்ண மலர்மாலை வாடுதலால் - எண்ணி
நறுந்தா மரைவிரும்பு நன்னுதலே யன்னாள்
அறிந்தாள் நளன்தன்னை ஆங்கு.
தமயந்தி நளனுக்கு மாலை சூட்டியது
151. விண்ணரச ரெல்லாரும் வெள்கி மனஞ்சுளிக்கக்
கண்ணகன் ஞாலங் களிகூர - மண்ணரசர்
வன்மாலைதம் மனத்தே சூட வயவேந்தைப்
பொன்மாலை சூட்டினாள் பொன்.
மற்ற அரசர்களின் ஏமாற்ற நிலை
152. திண்டோ ள் வயவேந்தர் செந்தா மரைமுகம்போய்
வெண்டா மரையாய் வெளுத்தவே - ஒண்டாரைக்
கோமாலை வேலான் குலமாலை வேற்கண்ணாள்
பூமாலை பெற்றிருந்த போது.
நளன் தமயந்தியுடன் சென்றமை
153. மல்லல் மறுகின் மடநா குடனாகச்
செல்லும் மழவிடைபோற் செம்மாந்து - மெல்லியலாள்
பொன்மாலை பெற்றதோ ளோடும் புறப்பட்டான்
நன்மாலை வேலான் நளன்.
தேவர்கள், கலி எதிர்வரக் கண்டது
154. வேலை பெறாவமுதம் வீமன் திருமடந்தை
மாலை பெறாதகலும் வானாடர் - வேலை
பொருங்கலிநீர் ஞாலத்தைப் புன்னெறியி லாக்கும்
இருங்கலியைக் கண்டா ரெதிர்.
இந்திரன் கலியின் வரவு வினாவியதும், கலியின் மறுமொழியும்
155. ஈங்குவர வென்னென் றிமையவர்தங் கோன்வினவத்
தீங்கு தருகலியுஞ் செப்பினான் - நீங்கள்
விருப்பான வீமன் திருமடந்தை யோடும்
இருப்பான் வருகின்றேன் யான்.
156. மன்னவரில் வைவேல் நளனே மதிவதனக்
கன்னி மணமாலை கைக்கொண்டான் - உன்னுடைய
உள்ளக் கருத்தை யொழித்தே குதியென்றான்
வெள்ளைத் தனியானை வேந்து.
157. விண்ணரசர் நிற்க வெறித்தேன் மணமாலை
மண்ணரசற் கீந்த மடமாதின் - எண்ணம்
கெடுக்கின்றேன் மற்றவள்தன் கேள்தற்க்குங் கீழ்மை
கொடுக்கின்றே னென்றான் கொதித்து.
158. வாய்மையுஞ் செங்கோல் வளனும் மனத்தின்கண்
தூய்மையும் மற்றவன் தோள்வலியும் - பூமான்
நெடுங்கற்பு மற்றவற்கு நின்றுரைத்துப் போனான்
அருங்கொற்ற வச்சிரத்தா னாங்கு.
நளனைக் கெடுக்கக் கலி துவாபரனைத் துணைவேண்டியது
159. செருக்கதிர்வேற் கண்ணியுடன் தேர்வேந்தன் கூட
இருக்கத் தரியேன் இவரைப் - பிரிக்க
உடனாக என்றா னுடனே பிறந்த
விடநாகம் அன்னான் வெகுண்டு.
சூரியோதயம்
160. வெங்கதிரோன் தானும் விதர்ப்பன் திருமடந்தை
மங்கலநாள் காண வருவான்போல் - செங்குமுதம்
வாயடங்க மன்னற்கும் வஞ்சிக்கும் நன்னெஞ்சில்
தீயடங்க ஏறினான் றேர்.
தமயந்திக்குச் செய்த மணக்கோலம்
161. இன்னுயிர்க்கு நேரே இளமுறுவல் என்கின்ற
பொன்னழகைத் தாமே புதைப்பார்போல் - மென்மலரும்
சூட்டினார் சூட்டித் துடிசே இடையாளைப்
பூட்டினார் மின்னிமைக்கும் பூண்.
நளதமயந்தியர் திருமணம்
162. கணிமொழிந்த நாளிற் கடிமணமுஞ் செய்தார்
அணிமொழிக்கும் அண்ண லவற்கும் - பணிமொழியார்
குற்றேவல் செய்யக் கொழும்பொன் னறைபுக்கார்
மற்றேவரும் ஒவ்வார் மகிழ்ந்து.
நளதமயந்தியர் கூடிமகிழ்ந்தமை
163. செந்திருவின் கொங்கையினுந் தேர்வேந்த னாகத்தும்
வந்துருவ வார்சிலையைக் கால்வளைத்து - வெந்தீயும்
நஞ்சுந் தொடுத்தனைய நாம மலர்வாளி
அஞ்சுந் தொடுத்தா னவன்.
164. ஒருவர் உடலில் ஒருவர் ஓதுங்கி
இருவ ரெனும்தோற்ற மின்றிப் - பொருவெம்
கனற்கேயும் வேலானுங் காரிகையுஞ் சேர்ந்தார்
புனற்கே புனல்கலந்தாற் போன்று.
165. குழைமேலுங் கோமா னுயிர்மேலுங் கூந்தல்
மழைமேலும் வாளோடி மீள - விழைமேலே
அல்லோடும் வேலான் அகலத் தொடும்பொருதாள்
வல்லோடுங் கொங்கை மடுத்து.
166. வீரனக லச்செறுவின் மீதோடிக் குங்குமத்தின்
ஈர விளவண்ட லிட்டதே -நேர்பொருத
காராரும் மெல்லோதிக் கன்னியவள் காதலெனும்
ஓராறு பாய வுடைந்து.
167. கொங்கை முகங்குழையக் கூந்தல் மழைகுலையச்
செங்கையற்க ணோடிச் செவிதடவ - அங்கை
வளைபூச லாட மடந்தையுடன் சேர்ந்தான்
விளைபூசற் கொல்யானை வேந்து.
168. தையல் தளிர்க்கரங்கள் தன்தடக்கை யாற்பற்றி
வையம் முழுதும் மகிழ்தூங்கத் - துய்ய
மணந்தான் முடிந்ததற்பின் வாணுதலுந் தானும்
புணர்ந்தான் நெடுங்காலம் புக்கு.
சுயம்வர காண்டம் முற்றும்
=====================
2. கலிதொடர் காண்டம்
--------------------
நளன் தமயந்தியுடன் தன் நாடு சென்றமை
169. தவளத் தனிக்குடையின் வெண்ணிழலுந் தையல்
குவளைக் கருநிழலுங் கொள்ளப் - பவளக்
கொழுந்தேறிச் செந்நெற் குலைசாய்க்கும் நாடன்
செழுந்தேரி லேறினான் சென்று.
நளன் தமயந்திக்கு வழியில் பல காட்சிகளைக் காட்டுதல்
170. மங்கையர்கள் வாச மலர்கொய்வான் வந்தடையப்
பொங்கி யெழுந்த பொறிவண்டு - கொங்கோடு
எதிர்கொண் டணைவனபோ லேங்குவன முத்தின்
கதிர்கொண்ட பூண்முலையாய் காண்.
171. பாவையர்கை தீண்டப் பணியாதார் யாவரே
பூவையர்கை தீண்டலுமப் பூங்கொம்பு - மேவியவர்
பொன்னடியிற் றாழ்ந்தனவே பூங்குழலாய் காணென்றான்
மின்னெடுவேற் கையான் விரைந்து.
172. மங்கை யொருத்தி மலர்கொய்வாள் வாண்முகத்தைப்
பங்கயமென் றெண்ணிப் படிவண்டைச் - செங்கையால்
காத்தாளக் கைம்மலரைக் காந்தளெனப் பாய்தலுமே
வேர்த்தாளைக் காணென்றான் வேந்து.
173. புல்லும் வரிவண்டைக் கண்டு புனமயில்போல்
செல்லும் மடந்தை சிலம்பவித்து - மெல்லப்போய்
அம்மலரைக் கொய்யா தருந்தளிரைக் கொய்வாளைச்
செம்மலரில் தேனே தெளி.
174. கொய்த மலரைக் கொடுங்கையி னாலணைத்து
மொய்குழலிற் சூட்டுவான் முன்வந்து - தையலாள்
பாதார விந்தத்தே சூட்டினான் பாவையிடைக்
காதார மில்லா தறிந்து.
175. ஏற்ற முலையார்க்கு இளைஞர் இடும்புலவித்
தோற்ற வமளியெனத் தோற்றுமால் - காற்றசைப்ப
உக்க மலரோ டுகுத்தவளை முத்தமே
எக்கர் மணன்மே லிசைந்து.
176. அலர்ந்த மலர்சிந்தி அம்மலர்மேற் கொம்பு
புலர்ந்தசைந்து பூவணைமேற் புல்லிக் - கலந்தொசிந்த
புல்லென்ற கோலத்துப் பூவையரைப் போன்றதே
அல்லென்ற சோலை யழகு.
177. கொங்கை முகத்தணையக் கூட்டிக் கொடுங்கையால்
அங்கணைக்க வாய்நெகிழ்ந்த ஆம்பற்பூ - கொங்கவிழ்தேன்
வார்க்கின்ற கூந்தன் முகத்தை மதியென்று
பார்க்கின்ற தென்னலாம் பார்.
178. கொய்த குவளை கிழித்துக் குறுநுதன்மேல்
எய்தத் தனிவைத்த ஏந்திழையாள் - வையத்தார்
உண்ணாக் கடுவிடத்தை யுண்ட தொருமூன்று
கண்ணானைப் போன்றனளே காண்.
179. கொழுநன் கொழுந்தாரை நீர்வீசக் கூசிச்
செழுமுகத்தைத் தாமரைக்கே சேர்த்தாள் - கெழுமியவக்
கோமகற்குத் தானினைந்த குற்றங்க ளத்தனையும்
பூமகட்குச் சொல்லுவாள் போல்.
180. பொய்தற் கமலத்தின் போதிரண்டைக் காதிரண்டில்
பெய்து முகமூன்று பெற்றாள்போல் - எய்த
வருவாளைப் பாரென்றான் மாற்றாரை வென்று
செருவாளைப் பார்துவக்குஞ் சேய்.
181. பொன்னுடைய வாசப் பொகுட்டு மலரலையத்
தன்னுடனே மூழ்கித் தனித்தெழுந்த - மின்னுடைய
பூணாள் திருமுகத்தைப் புண்டரிக மென்றயிர்த்துக்
காணா தயர்வானைக் காண்.
182. சிறுக்கின்ற வாண்முகமுஞ் செங்காந்தட் கையால்
முறுக்குநெடு மூரிக் குழலும் - குறிக்கின்
கரும்பாம்பு வெண்மதியைக் கைக்கொண்ட காட்சி
அரும்பாம் பணைமுலையா யாம்.
183. சோர்புனலில் மூழ்கி யெழுவாள் சுடர்நுதன்மேல்
வார்குழலை நீக்கி வருந்தோற்றம் - பாராய்
விரைகொண் டெழுந்தபிறை மேகத் திடையே
புரைகின்ற தென்னலாம் பொற்பு.
184. செழுநீலம் நோக்கெறிப்பச் செங்குவளை கொய்வாள்
முழுநீல மென்றயிர்த்து முன்னர்க் - கழுநீரைக்
கொய்யாது போவாளைக் கோல்வளைக்குக் காட்டினான்
வையாரும் வேற்றடக்கை மன்.
நளன் தமயந்தியுடன் பல நதி முதலியவற்றில் நீராடியது
185. காவி பொருநெடுங்கண் காதலியுங் காதலனும்
வாவியும் ஆறும் குடைந்தாடித் - தேவின்
கழியாத சிந்தையுடன் கங்கைநதி யாடி
ஒழியா துறைந்தா ருவந்து.
186. நறையொழுக வண்டுறையும் நன்னகர்வாய் நாங்கள்
உறையும் இளமரக்கா ஒக்கும் - இறைவளைக்கைச்
சிற்றிடையாய் பேரின்பத் தேமொழியாய் மென்முறுவல்
பொற்றொடியாய் மற்றிப் பொழில்.
தமயந்தியின் ஊடல்
187. கன்னியர்தம் வேட்கையே போலுங் களிமழலை
தன்மணிவா யுள்ளே தடுமாற - மன்னவனே
இக்கடிகா நீங்க ளுறையு மிளமரக்கா
ஒக்குமதோ வென்றா ளுயிர்த்து.
188. தொண்டைக் கனிவாய் துடிப்பச் சுடர்நுதன்மேல்
வெண்தரளம் என்ன வியர்வரும்பக் - கெண்டைக்
கடைசிவப்ப நின்றாள் கழன்மன்னர் வெள்ளைக்
குடைசிவப்ப நின்றான் கொடி.
189. தங்கள் புலவித் தலையில் தனித்திருந்த
மங்கை வதன மணியரங்கில் - அங்கண்
வடிவாள்மேற் கால்வளைத்து வார்புருவ மென்னும்
கொடியாடக் கண்டானோர் கூத்து.
தமயந்தி புலவி தவிர்த்தது
190. சில்லரிக் கிண்கிணிமென் தெய்வமலர்ச் சீறடியைத்
தொல்லை மணிமுடிமேற் சூட்டினான் - வல்லை
முழுநீலக் கோதை முகத்தே மலர்ந்த
செழுநீலம் மாறாச் சிவப்பு.
ஊடல் நீங்கித் தமயந்தி நளனுடன் கூடி மகிழ்ந்தது
191. அங்கைவேல் மன்னன் அகல மெனுஞ்செறுவில்
கொங்கையேர் பூட்டிக் குறுவியர்நீர் - அங்கடைத்துக்
காதல் வரம்பொழுக்கிக் காமப் பயிர்விளைத்தாள்
கோதையரின் மேலான கொம்பு.
நள தமயந்தியர் கங்கை கண்டது
192. வேரி மழைதுளிக்கு மேகக் கருங்கூந்தல்
காரிகையுந் தானும்போய்க் கண்ணுற்றான் - மூரித்
திரையேற மென்கிடங்கிற் சேலேற வாளை
கரையேறுங் கங்கைக் கரை.
அவர்கள் ஒரு பொழிலை அடைந்தது
193. சூதக் கனியூறல் ஏற்ற சுருள்வாழை
கோதில் நறவேற்குங் குப்பியென - மாதரார்
ஐயுற்று நோக்கு மகன்பொழில்சென் றெய்தினான்
வையுற்ற வேற்றானை மன்.
நளன் தமயந்திக்குத் தன் வளநகரைக் காட்டியது
194. வான்தோய நீண்டுயர்ந்த மாடக் கொடிநுடங்கத்
தான்தோன்று மற்றின் தடம்பதிதான் - வான்தோன்றி
வில்விளக்கே பூக்கும் விதர்ப்பநா டாளுடையான்
நல்விளக்கே யெங்கள் நகர்.
நளன் பன்னிரண்டாண்டுகள் தமயந்தியோடு மகிழ்ந்திருந்தது
195. பொய்கையும் வாசப் பொழிலு மெழிலருவச்
செய்குன்று மாறுந் திரிந்தாடித் - தையலுடன்
ஆறிரண்டாண் டெல்லை கழித்தா னடையலரைக்
கூறிரண்டாக் கொல்யானைக் கோ.
தமயந்தியின் மக்கட் பேறு
196. கோல நிறம்விளர்ப்பக் கொங்கை முகங்கருக
நீல நிறமயிர்க்கால் நின்றெறிப்ப - நூலென்னத்
தோன்றாத நுண்மருங்குல் தோன்றச் சுரிகுழலாள்
ஈன்றாள் குழவி யிரண்டு.
கலி நளனைச் சார முடியாதிருந்தது
197. ஆண்டிரண்டா றெல்லை யளவுந் திரிந்தேயும்
காண்டகைய வெங்கலியுங் காண்கிலான் - நீண்டபுகழ்ச்
செந்நெறியாற் பார்காத்த செங்கோல் நிலவேந்தன்
தன்னெறியால் வேறோர் தவறு.
கலி நளனைச் சேர்ந்தது
198. சந்திசெயத் தாள்விளக்கத் தாளின்மறுத் தான்கண்டு
புந்தி மகிழப் புகுந்துகலி - சிந்தையெலாம்
தன்வயமே ஆக்குந் தமைய னுடனிருந்தான்
பொன்னசல மார்பற் புகைந்து.
199. நாராய ணாய நமவென் றவனடியில்
சேராரை வெந்துயரஞ் சேர்ந்தாற்போல் - பாராளும்
கொற்றவனைப் பார்மடந்தை கோமானை வாய்மைநெறி
கற்றவனைச் சேர்ந்தான் கலி.
கலி புட்கரனை நளனோடு சூதாட அழைத்தது
200. நன்னெறியில் சூதால் நளனைக் களவியற்றித்
தன்னரசு வாங்கித் தருகின்றேன் - மன்னவனே
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.
புட்கரன் உடன்பட்டுக் கலியுடன் சென்றது
201. புன்னை நறுமலரின் பூந்தா திடையுறங்கும்
கன்னி யிளமேதிக் காற்குளம்பு - பொன்னுரைத்த
கல்லேய்க்கும் நாடன் கவறாடப் போயினான்
கொல்லேற்றின் மேலேறிக் கொண்டு.
புட்கரன் நிடத நாடடைந்தது
202. வெங்கட் சினவிடையின் மேலேறிக் காலேறிக்
கங்கைத் திரைநீர் கரையேறிச் - செங்கதிர்ப்பைம்
பொன்னொழியப் போதும் புறம்பணைசூழ் நன்னாடு
பின்னொழியப் போந்தான் பெயர்ந்து.
நளன் புட்கரனைக் கண்டு வினாவிய்து
203. அடற்கதிர்வேல் மன்னன் அவனேற்றின் முன்போய்
எடுத்தகொடி யென்னகொடி யென்ன - மிடற்சூது
வெல்லுங் கொடியென்றான் வெங்கலியா லங்கவன்மேல்
செல்லுங் கொடியோன் தெரிந்து.
நளன் புட்கரனுடன் சூதாட இசைந்தது
204. ஏன்றோம் இதுவாயின் மெய்ம்மையே எம்மோடு
வான்றோய் மடல்தெங்கின் வான்தேறல் - தான்தேக்கி
மீதாடி வாளைவயல் வீழ்ந்துழக்கும் நன்னாடன்
சூதாட என்றான் துணிந்து.
நளனுக்கு அமைச்சர் முதலினோர் சூதின் தீமைகளை உரைத்தது
205. காதல் கவறாடல் கள்ளுண்ணல் பொய்ம்மொழிதல்
ஈதல் மறுத்த லிவைகண்டாய் - போதில்
சினையாமை வைகுந் திருநாடா செம்மை
நினையாமை பூண்டார் நெறி.
206. அறத்தைவேர் கல்லும் அருநரகிற் சேர்க்கும்
திறத்தையே கொண்டருளைத் தேய்க்கும் - மறத்தையே
பூண்டுவிரோ தஞ்செய்யும் பொய்ச்சூதை மிக்கோர்கள்
தீண்டுவரோ வென்றார் தெரிந்து.
207. உருவழிக்கும் உண்மை உயர்வழிக்கும் வண்மைத்
திருவழிக்கு மோனஞ் சிதைக்கும் - மருவும்
ஒருவரோ டன்பழிக்கும் ஒன்றல்ல சூது
பொருவரோ தக்கோர் புரிந்து.
208. ஆயம் பிடித்தாரு மல்லற் பொதுமகளிர்
நேயம் பிடித்தாரும் நெஞ்சிடையே - மாயம்
பிடித்தாரின் வேறல்ல ரென்றுரைப்ப தன்றே
வடித்தாரின் றிலோர் வழக்கு.
நளனது மறுப்புரை
209. தீது வருக நலம்வருக சிந்தையால்
சூது பொரவிசைந்து சொல்லினோம் - யாதும்
விலக்கலிர்நீ ரென்றான் வராலேற மேதி
கலக்கலைநீர் நாடன் கனன்று.
புட்கரனை நளன் பந்தயம் யாதென்று கேட்டது
210. நிறையிற் கவறாட நீநினைந்தா யாகில்
திறையிற் கதிர்முத்தஞ் சிந்தும் - துறையில்
கரும்பொடியா மள்ளர் கடவடிக்கும் நாடா
பொரும்படியா தென்றானிப் போது.
நளன் சூதாடியதும் யாவும் தோற்றதும்
211. விட்டொளிர்வில் வீசி விளங்குமணிப் பூணாரம்
ஒட்டினே னுன்பணையம் ஏதென்ன - மட்டவிழ்தார்
மல்லேற்ற தோளானும் வான்பணைய மாகத்தன்
கொல்லேற்றை வைத்தான் குறித்து.
212. காரேயுங் கூந்தலார் காரிகைமேற் காதலித்த
தாரேயுந் தோளான் தனிமனம்போல் - நேரே
தவறாய்ப் புரண்ட தமையனொடுங் கூடிக்
கவறாய்ப் புரண்டான் கலி.
213. வைத்த மணியாரம் வென்றேன் மறுபலகைக்
கொத்த பணைய முரையென்ன - வைத்தநிதி
நூறா யிரத்திரட்டி நூறுநூ றாயிரமும்
வேறாகத் தோற்றானவ் வேந்து.
214. பல்லா யிரம்பரியும் பத்துநூ றாயிரத்து
சொல்லார் மணித்தேருந் தோற்றதற்பின் - வில்லாட்கள்
முன்றோற்று வானின் முகிறோற்கு மால்யானை
பின்றோற்றுத் தோற்றான் பிடி.
215. சாதுரங்கம் வென்றேன் தரும்பணைய மேதென்ன
மாதுரங்கம் பூணும் மணித்தேரான் - சூதரங்கில்
பாவையரைச் செவ்வழியாழ்ப் பண்ணின்மொழிப் பின்னுகுழல்
பூவையரைத் தோற்றான் பொருது.
216. கற்பின் மகளிர்பா னின்றும் தமைக்கவட்டின்
விற்கு மகளிர்பான் மீண்டாற்போல் - நிற்கும்
நெறியானை மெய்ம்மைவாய் நின்றானை நீங்கிச்
சிறியானைச் சேர்ந்தாள் திரு.
புட்கரன் தமயந்தியைப் பந்தயமாக வைக்ககேட்டது
217. மனைக்குரியா ரன்றே வருந்துயரந் தீர்ப்பார்
சினைச்சங்கின் வெண்டலையைத் தேனால் - நனைக்கும்
குவளைப் பணைப்பைந்தாட் குண்டுநீர் நாடா
இவளைப் பணையந்தா வின்று.
நளன் சூதாட்டத்தை விட்டு நீங்கியது
218. இனிச்சூ தொழிந்தோ மினவண்டு கிண்டிக்
கனிச்சூத வார்பொழிலின் கண்ணே - பனிச்சூதப்
பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே
நாம்போது மென்றான் நளன்.
நளன் நகரைவிட்டுச் சென்றது
219. மென்காற் சிறையன்னம் வீற்றிருந்த மென்மலரைப்
புன்காகங் கொள்ளத்தான் போனாற்போல் - தன்கால்
பொடியாடத் தேவியொடும் போயினா னன்றே
கொடியானுக் கப்பார் கொடுத்து.
220. கடப்பா ரெவரே கடுவினையை வீமன்
மடப்பாவை தன்னுடனே மன்னன் - நடப்பான்
வனத்தே செலப்பணித்து மாயத்தாற் சூழ்ந்த
தனைத்தே விதியின் வ்லி.
நகரமாந்தரின் வேண்டுகோள்
221. ஆருயிரின் தாயே அறத்தின் பெருந்தவமே
பேரருளின் கண்ணே பெருமானே - பாரிடத்தை
யார்காக்கப் போவதுநீ யாங்கென்றார் தங்கண்ணின்
நீர்வார்த்துக் கால்கழுவா நின்று.
222. வேலை கரையிழந்தால் வேத நெறிபிறழ்ந்தால்
ஞாலம் முழுதும் நடுவிழந்தால் - சீலம்
ஒழிவரோ செம்மை யுரைதிறம்பாச் செய்கை
அழிவரோ செங்கோ லவர்.
223. வடியேறு கூரிலைவேன் மன்னாவோ வுன்றன்
அடியேங்கட் காதரவு தீரக் - கொடிநகரில்
இன்றிருந்து நாளை யெழுந்தருள்க வென்றுரைத்தார்
வென்றிருந்த தோளான்றாள் வீழ்ந்து.
224. மன்றலிளங் கோதை முகநோக்கி மாநகர்வாய்
நின்றுருகு வார்கண்ணி னீர்நோக்கி - இன்றிங்
கிருத்துமோ வென்றா னிளங்குதலை வாயாள்
வருத்தமே தன்மனத்தில் வைத்து.
புட்கரன் நளனை ஆதரிப்பார் கொல்லப்படுவார் என முரசறைவித்தது
225. வண்டாடுந் தார்நளனை மாநகரில் யாரேனும்
கொண்டாடி னார்தம்மைக் கொல்லென்று - தண்டா
முரசறைவா யாங்கென்றான் முன்னே முனிந்தாங்
கரசறியா வேந்த னழன்று.
226. அறையும் பறையரவங் கேட்டழிந்து நைந்து
பிறைநுதலாள் பேதைமையை நோக்கி - முறுவலியா
இந்நகர்க்கீ தென்பொருட்டா வந்த தெனவுரைத்தான்
மன்னகற்றுங் கூரிலைவேன் மன்.
நளன், தமயந்தியும் மக்களும் தொடர நகர் நீங்கியது
227. தன்வாயில் மென்மொழியே தாங்கினான் ஓங்குநகர்ப்
பொன்வாயில் பின்னாகப் போயினான் - முன்னாளில்
பூமகளைப் பாரினொடு புல்லினான் கன்மகனைக்
கோமகளைத் தேவியொடுங் கொண்டு.
நகரின் துயர நிலை
228. கொற்றவன்பாற் செல்வாரைக் கொல்வான் முரசறைந்து
வெற்றியொடு புட்கரனும் வீற்றிருப்ப - முற்றும்
இழவு படுமாபோ லில்லங்க டோ றும்
குழவிபா லுண்டிலவே கொண்டு.
நளனுடைய மக்களின் துயரநிலை
229. சந்தக் கழற்றா மரையுஞ் சதங்கையணி
பைந்தளிரு நோவப் பதைத்துருகி - எந்தாய்
வடந்தோய் களிற்றாய் வழியான தெல்லாம்
கடந்தோமோ வென்றார் கலுழ்ந்து.
230. தூயதன் மக்கள் துயர்நோக்கிச் சூழ்கின்ற
மாய விதியின் வலிநோக்கி - யாதும்
தெரியாது சித்திரம்போல் நின்றிட்டான் செம்மை
புரிவான் துயரால் புலர்ந்து.
நளன் தமயந்தியை மக்களுடன் குண்டினபுரம் ஏகக் கூறியது
231. காத லிருவரையும் கொண்டு கடுஞ்சுரம்போக்
கேத முடைத்திவரைக் கொண்டுநீ - மாதராய்
வீமன் திருநகர்க்கே மீளென்றான் விண்ணவர்முன்
தாமம் புனைந்தாளைத் தான்.
தமயந்தியின் மறுமொழி
232. குற்றமில் காட்சிக் குதலைவாய் மைந்தரையும்
பெற்றுக் கொளலாம் பெறலாமோ - கொற்றவனே
கோக்கா தலனைக் குலமகளுக் கென்றுரைத்தாள்
நோக்கான் மழைபொழியா நொந்து.
நளன் மக்கட் பேற்றின் சிறப்பைக் கூறியது
233. கைதவந்தான் நீக்கிக் கருத்திற் கறையகற்றிச்
செய்தவந்தா னெத்தனையுஞ் செய்தாலும் - மைதீர்
மகப்பெறா மானிடர்கள் வானவர்தம் மூர்க்குப்
புகப்பெறார் மாதராய் போந்து.
234. பொன்னுடைய ரேனும் புகழுடைய ரேனுமற்
றென்னுடைய ரேனு முடையரோ - இன்னடிசில்
புக்களையுந் தாமரைக்கைப் பூநாறுஞ் செய்யவாய்
மக்களையிங் கில்லாத வர்.
235. சொன்ன கலையின் துறையனைத்துந் தோய்ந்தாலும்
என்ன பயனுடைத்தா மின்முகத்து - முன்னம்
குறுகுதலைக் கிண்கிணிக்காற் கோமக்கள் பால்வாய்ச்
சிறுகுதலை கேளாச் செவி.
தமயந்தி நளனைத் தன் தந்தை நகருக்கு வருமாறு அழைத்தது
236. போற்றரிய செல்வம் புனனாட் டொடும்போகத்
தோற்றமையும் யாவர்க்குந் தோற்றாதே - ஆற்றலாய்
எம்பதிக்கே போந்தருளு கென்றா ளெழிற்கமலச்
செம்பதிக்கே வீற்றிருந்த தேன்.
நளன் அதற்கு உடன்படாது உரைத்தது
237. சினக்கதிர்வேற் கண்மடவாய் செல்வர்பாற் சென்றீ
எனக்கென்னு மிம்மாற்றங் கண்டாய் - தனக்குரிய
தானந் துடைத்துத் தருமத்தை வேர்பறித்து
மானந் துடைப்பதோர் வாள்.
238. மன்னராய் மன்னர் தமையடைந்து வாழ்வெய்தி
இன்னமுதந் தேக்கி யிருப்பரேல் - சொன்ன
பெரும்பே டிகளலரேற் பித்தரே யன்றோ
வரும்பேடை மானே யவர்.
தமயந்தி மக்களையேனும் தன் தந்தையிடம் அனுப்ப வேண்டிக்கொண்டது
239. செங்கோலா யுன்றன் திருவுள்ளம் ஈதாயின்
எங்கோன் விதர்ப்ப னெழினகர்க்கே - நங்கோலக்
காதலரைப் போக்கி யருளென்றாள் காதலருக்
கேதிலரைப் போல வெடுத்து.
நளன் தன் மக்களை அனுப்ப உடன்பட்டது
240. பேதை பிரியப் பிரியாத பேரன்பின்
காதலரைக் கொண்டுபோய்க் காதலிதன் - தாதைக்குக்
காட்டுநீ யென்றான் கலங்காத வுள்ளத்தை
வாட்டுநீர் கண்ணிலே வைத்து.
மக்களின் பிரிவாற்றாத் துயரநிலை
241. தந்தை திருமுகத்தை நோக்கித் தமைப்பயந்தாள்
இந்து முகத்தை யெதிர்நோக்கி - எந்தம்மை
வேறாகப் போக்குதிரோ வென்றார் விழிவழியே
ஆறாகக் கண்ணீ ரழுது.
242. அஞ்சனந்தோய் கண்ணி லருவிநீ ராங்கவர்க்கு
மஞ்சனநீ ராக வழிந்தோட - நெஞ்சுருகி
வல்லிவிடா மெல்லிடையாண் மக்களைத்தன் மார்போடும்
புல்லிவிடா நின்றாள் புலர்ந்து.
மக்களை ஒரு மறையோன் அழைத்துச் சென்றது
243. இருவ ருயிரு மிருகையான் வாங்கி
ஒருவன்கொண் டேகுவா னொத்து - அருமறையோன்
கோமைந்த னோடிளைய கோதையைக்கொண் டேகினான்
வீமன் நகர்க்கே விரைந்து.
244. காத லவர்மேலே கண்ணோட விண்ணோடும்
ஊதை யெனநின் றுயிர்ப்போட - யாதும்
உரையாடா துள்ள மொடுங்கினான் வண்டு
விரையாடுந் தாரான் மெலிந்து.
நளதமயந்தியர் ஒரு பாலைநிலத்தைக் கண்ணுற்றது
245. சேலுற்ற வாவித் திருநாடு பின்னொழியக்
காலிற்போய்க் தேவியொடுங் கண்ணுற்றான் - ஞாலஞ்சேர்
கள்ளிவே கத்தரவுங் கண்மணிகள் தாம்பொடியாய்த்
துள்ளிவே கின்ற சுரம்.
கலி ஒரு பொற்புள்ளாய் அங்கு தோன்றியது
246. கன்னிறத்த சிந்தைக் கலியுமவன் முன்பாகப்
பொன்னிறத்த புள்வடிவாய்ப் போந்திருந்தான் - நன்னெறிக்கே
அஞ்சிப்பா ரீந்த அரசனையுந் தேவியையும்
வஞ்சிப்பான் வேண்டி வனத்து.
அப்பொற்புள்ளைத் தமயந்தி விரும்பியது
247. தேன்பிடிக்குந் தண்துழாய்ச் செங்கட் கருமுகிலை
மான்பிடிக்கச் சொன்ன மயிலேபோல் - தான்பிடிக்கப்
பொற்புள்ளைப் பற்றித்தா வென்றாள் புதுமழலைச்
சொற்கிள்ளை வாயாள் தொழுது.
நளன் அப்பறவைஅயிப் பிடிக்க முயலுதல்
248. பொற்புள் ளதனைப் பிடிப்பான் நளன்புகுதக்
கைக்குள்வரு மாபோற் கழன்றோடி எய்க்கும்
இளைக்குமா போல இருந்ததுகண் டன்றே
வளைக்குமா றெண்ணினான் மன்.
249. கொற்றக் கயற்கட் கொடியே யிருவோரும்
ஒற்றைத் துகிலா லுடைபுனைந்து - மற்றிந்த
பொற்றுகிலாற் புள்வளைக்கப் போதுவோ மென்றுரைத்தான்
பற்றகலா வுள்ளம் பரிந்து.
நளன் தன் ஆடையால் புள் வளைத்தது
250. எற்றித் திரைபொரநொந் தேறி யிளமணலில்
பற்றிப் பவழம் படர்நிழற்கீழ் - முத்தீன்று
வெள்வளைத்தா யோடுநீர் வேலைத் திருநாடன்
புள்வளைத்தா னாடையாற் போந்து.
அப்புள் வானில் அவ்வாடையுடன் எழுந்து கூறியது
251. கூந்த லிளங்குயிலுங் கோமானுங் கொண்டணைத்த
பூந்துகில்கொண் டந்தரத்தே போய்நின்று - வேந்தனே
நன்னாடு தோற்பித்தோண் நானேகா ணென்றதே
பொன்னாடு மாநிறத்த புள்.
நளதமயந்தியர் இருவரும் ஓராடையே கொண்டமை
252. காவிபோற் கண்ணிக்குங் கண்ணியந்தோட் காளைக்கும்
ஆவிபோ லாடையுமொன் றானதே - பூவிரியக்
கள்வேட்டு வண்டுழலுங் கானத் திடைக்கனகப்
புள்வேட்டை யாதரித்த போது.
தமயந்தி கலியைச் சபித்தது
253. அறம்பிழைத்தார் பொய்த்தா ரருள்சிதைத்தார் மானத்
திறம்பிழைத்தார் தெய்வ மிகழ்ந்தார் - புறங்கடையில்
சென்றார் புகுநரகஞ் சேர்வாய்கொ லென்றழியா
நின்றாள் விதியை நினைந்து.
தமயந்தி, தாம் அவ்விடம்விட்டு நீங்க விரும்பியது
254. வையந் துயருழப்ப மாயம் பலசூழ்ந்து
தெய்வங் கெடுத்தாற் செயலுண்டோ - மெய்வகையே
சேர்ந்தருளி நின்றதனிச் செங்கோலா யிங்கொழியப்
போந்தருளு கென்றாள் புலந்து.
சூரியாத்தமயம்
255. அந்த நெடுஞ்சுரத்தின் மீதேக வாங்கழலும்
வெந்தழலை யாற்றுவான் மேற்கடற்கே - எந்தை
குளிப்பான்போற் சென்றடைந்தான் கூரிருளால் பாரை
ஒளிப்பான்போற் பொற்றே ருடன்.
நளதமயந்தியர் இருளூடே கானிற் சென்றது
256. பானு நெடுந்தேர் படுகடலிற் பாய்ந்ததற்பின்
கான வடம்பின் கவட்டிலைகள் - மானின்
குளம்பேய்க்கும் நன்னாடன் கோதையொடுஞ் சென்றான்
இளம்பேய்க்குந் தோன்றா விருள்.
ஒரு பாழ்மண்டபம் அடைந்தது
257. எங்காம் புகலிடமென் றெண்ணி யிருள்வழிபோய்
வெங்கா னகந்திரியும் வேளைதனில் - அங்கேயோர்
பாழ்மண் டபங்கண்டான் பால்வெண் குடைநிழற்கீழ்
வாழ்மண் டபங்கண்டான் வந்து.
258. மூரி யிரவும்போய் முற்றிருளாய் மூண்டதால்
சாரு மிடமற்றுத் தானில்லை - சோர்கூந்தல்
மாதராய் நாமிந்த மண்டபத்தே கண்டுயிலப்
போதரா யென்றான் புலர்ந்து.
தமயந்தியின் துயரநிலை
259. வைய முடையான் மகரயாழ் கேட்டருளும்
தெய்வச் செவிகொதுகின் சில்பாடல் - இவ்விரவில்
கேட்டவா வென்றழுதாள் கெண்டையங்கண் நீர்சோரத்
தோட்டவார் கோதையாள் சோர்ந்து.
நளன் தமயந்தியைத் தேற்றியது
260. பண்டை வினைப்பயனைப் பாரிடத்தி லார்கடப்பார்
கொண்டல் நிழலிற் குழைதடவும் - கெண்டை
வழியனீ ரென்றான் மனநடுங்கி வெய்துற்
றழியனீ யென்றா னரசு.
மீண்டும் தமயந்தி வருந்தியது
261. விரைமலர்ப்பூ மெல்லணையு மெய்காவல் பூண்ட
பரிசனமும் பள்ளி யறையும் - அரசேநான்
காணேனிங் கென்னாக் கலங்கினாள் கண்பனிப்பப்
பூணேர் முலையாள் புலர்ந்து.
நளன் தமயந்தியைக் கண்ணுறங்குமாறு கூறியது
262. தீய வனமுந் துயின்று திசைஎட்டுமேதுயின்று
பேயுந் துயின்றதாற் பேர்யாமம் - நீயுமினிக்
கண்மேற் துயில்கை கடனென்றான் கைகொடுத்து
மண்மேற் றிருமேனி வைத்து.
நளனது துயரம்
263. புன்கண்கூர் யாமத்துப் பூழிமேற் றான்படுத்துத்
தன்கண் துயில்வாளைத் தான்கண்டும் - என்கண்
பொடியாதா லுள்ளாவி போகாதால் நெஞ்சம்
வெடியாதா லென்றான் விழுந்து.
தமயந்தியின் துயரம்
264. முன்றில்தனில் மேற்படுக்க முன்தா னையுமின்றி
இன்று துயில இறைவனுக்கே - என்றனது
கைபுகுந்த தென்னுடைய கால்புகுந்த தென்றழுதாள்
மைபுகுந்த கண்ணீர் வர.
மீண்டும் நளனது துயரம்
265. வீமன் திருமடந்தை விண்ணவரும் பெற்றிலாத்
தாம மெனக்களித்த தையலாள் - யாமத்துப்
பாரே யணையாப் படைக்கண் துயின்றாள்மற்
றாரோ துயரடையா ராங்கு.
கலி நளன் மன உறுதியைக் கலைத்தது
266. பெய்ம்மலர்ப்பூங் கோதை பிரியப் பிரியாத
செம்மை யுடைமனத்தான் செங்கோலான் - பொய்ம்மை
விலக்கினா னெஞ்சத்தை வேறாக்கி நின்று
கலக்கினான் வஞ்சக் கலி.
267. வஞ்சக் கலிவலியான் மாகத் தராவளைக்கும்
செஞ்சுடரின் வந்த கருஞ்சுடர்போல் - விஞ்ச
மதித்ததேர்த் தானை வயவேந்த னெஞ்சத்
துதித்ததே வேறோ ருணர்வு.
268. காரிகைதன் வெந்துயரங் காணாமல் நீத்தந்தக்
கூரிருளிற் போவான் குறித்தெழுந்து - நேரே
இருவர்க்கு மோருயிர்போ லெய்தியதோ ராடை
அரிதற் கவனினைந்தா னாங்கு.
269. எண்ணிய எண்ணம் முடிப்ப இகல்வேந்தன்
கண்ணி யதையறிந்து காய்கலியும் - பண்ணினுக்குக்
கேளான தேமொழியை நீக்கக் கிளரொளிசேர்
வாளாய் மருங்கிருந்தான் வந்து.
நளன் அடையை அரிந்தது
270. ஒற்றைத் துகிலு முயிரு மிரண்டாக
முற்றுந்தன் னன்பை முதலோடும் - பற்றி
அரிந்தா னரிந்திட் டவள்நிலைமை நெஞ்சில்
தெரிந்தா னிருந்தான் திகைத்து.
நளனது பிரிவுத்துயர்
271. போயொருகால் மீளும் புகுந்தொருகால் மீண்டேகும்
ஆயர் கொணர்ந்த அடுபாலின் - தோயல்
கடைவார்தங் கைபோல் ஆயிற்றே காலன்
வடிவாய வேலான் மனம்.
272. சிந்துரத்தான் தெய்வ முனிவன் தெரிந்துரைத்த
மந்திரத்தால் தம்பித்த மாநீர்போல் - முந்த
ஒளித்ததேர்த் தானை யுயர்வேந்த னெஞ்சம்
வலித்ததே தீக்கலியால் வந்து.
273. தீக்கா னகத்துறையுந் தெய்வங்காள்! வீமன்தன்
கோக்கா தலியைக் குறிக்கொண்மின் - நீக்காத
காதலன்பு மிக்காளைக் காரிருளிற் கைவிட்டின்
றேதிலன்போற் போகின்றேன் யான்.
நளன் தமயந்தியை நீத்துச் சென்றது
274. ஏந்து மிளமுலையா ளின்னுயிருந் தன்னருளும்
பூந்துகிலும் வேறாகப் போயினான் - தீந்தேன்
தொடைவிரவு நாள்மாலை சூட்டினாள் தன்னை
இடையிருளிற் கானகத்தே யிட்டு.
275. தாருவெனப் பார்மேல் தருசந் திரன்சுவர்க்கி
மேருவரைத் தோளான் விரவார்போல் - கூரிருளிற்
செங்கா னகஞ்சிதையத் தேவியைவிட் டேகினான்
வெங்கா னகந்தனிலே வேந்து.
தமயந்தி விழித்துக்கொண்டு நளனைக் காணாது வருந்தியது
276. நீல மளவே நெகிழ நிரைமுத்தின்
கோல மலரின் கொடியிடையாள் - வேல்வேந்தே
எங்குற்ற யென்னா இனவளைக்கை நீட்டினாள்
அங்குத்தான் காணா தயர்ந்து.
277. வெய்ய தரையென்னும் மெல்லமளி யைத்தடவிக்
கையரிகொண் டெவ்விடத்துங் காணாமல் - ஐயகோ
என்னப்போய் வீழ்ந்தா ளினமேதி மென்கரும்பைத்
தின்னப்போம் நாடன் திரு.
278. அழல்வெஞ் சிலைவேட னம்புருவ ஆற்றா
துழலுங் களிமயில்போ லோடிக் - குழல்வண்
டெழுந்தோட வீழ்ந்தா ளிருகுழைமேற் கண்ணீர்க்
கொழுந்தோட வீமன் கொடி.
279. வான்முகிலும் மின்னும் வறுநிலத்து வீழ்ந்ததுபோல்
தானுங் குழலுந் தனிவீழ்ந்தாள் - ஏனம்
குளம்பான் மணிகிளைக்குங் குண்டுநீர் நாடன்
இளம்பாவை கைதலைமே லிட்டு.
பொழுது புலர்ந்தமை
280. தையல் துயர்க்குத் தரியாது தஞ்சிறகாம்
கையால் வயிறலைத்துக் காரிருள்வாய் - வெய்யோனை
வாவுபரித் தேரேறி வாவென் றழைப்பனபோல்
கூவினவே கோழிக் குலம்.
சூரியோதயம்
281. வான நெடுவீதி செல்லும் மணித்தேரோன்
தான மடந்தைக்குத் தார்வேந்தன் - போனநெறி
காட்டுவான் போலிருள்போய்க் கைவாங்கக் கானூடே
நீட்டுவான் செங்கரத்தை நின்று.
தமயந்தி நளன் அடிச்சுவடு கண்டு வருந்தியது
282. அல்லியந்தார் மார்ப னடித்தா மரையவள்தன்
நல்லுயிரு மாசையும்போல் நாறுதலும் - மல்லுறுதோள்
வேந்தனே என்று விழுந்தாள் விழிவேலை
சார்ந்தநீர் வெள்ளத்தே தான்.
தமயந்தி, மயில் முதலியவற்றை நோக்கி 'நளன் சென்ற வழி காட்டீர்' எனக் கூறியது
283. வெறித்த இளமான்காள்! மென்மயில்காள்! இந்த
நெறிக்கண் நடிதூழி வாழ்வீர் - பிறித்தெம்மைப்
போனாரைக் காட்டுதிரோ என்னாப் புலம்பினாள்
வானாடர் பெற்றிலா மான்.
ஒரு பாம்பு தமயந்தியைப்பற்றி விழுங்கலுற்றது
284. வேட்ட கரியை விழுங்கிப் பெரும்பசியால்
மோட்டு வயிற்றரவு முன்தோன்ற - மீட்டதனை
ஓரா தருகணைந்தாள் உண்தேன் அறற்கூந்தல்
போரார் விழியாள் புலர்ந்து.
285. அங்கண் விசும்பி னவிர்மதிமேற் சென்றடையும்
வெங்க ணரவுபோல் மெல்லியலைக் - கொங்கைக்கு
மேலெல்லாந் தோன்ற விழுங்கியதே வெங்கானின்
பாலெல்லாந் தீயுமிழும் பாம்பு.
தமயந்தி நளன் உதவிநாடி அழுதது
286. வாளரவின் வாய்ப்பட்டு மாயாமுன் மன்னவநின்
தாளடைந்து வாழுந் தமியேனைத் - தோளால்
விலக்காயோ வென்றழுதாள் வெவ்வரவின் வாய்க்கிங்
கிலக்காகி நின்றா ளெடுத்து.
287. வென்றிச் சினவரவின் வெவ்வா யிடைப்பட்டு
வன்துயராற் போயாவி மாள்கின்றேன் - இன்றுன்
திருமுகநான் காண்கிலேன் தேர்வேந்தே யென்றாள்
பொருமுகவேற் கண்ணாள் புலர்ந்து.
தமயந்தி தன் மக்களை நினைத்து வருந்தியது
288. மற்றொடுத்த தோள்பிரிந்து மாயாத வல்வினையேன்
பெற்றெடுத்த மக்காள் பிரிந்தேகும் - கொற்றவனை
நீரேனுங் காண்குதிரே என்றழுதாள் நீள்குழற்குக்
காரேனு மொவ்வாள் கலுழ்ந்து.
தமயந்தி தன் உயிர் நீங்கு நிலையில் நளனை நினைந்து வணங்கிக் கூறியது
289. அடையுங் கடுங்கானி லாடரவின் வாய்ப்பட்
டுடையுமுயிர் நாயகனே ஓகோ - விடையெனக்குத்
தந்தருள்வா யென்னாத்தன் தாமரைக்கை கூப்பினாள்
செந்துவர்வாய் மென்மொழியாள் தேர்ந்து.
ஒரு வேடன் அங்கு வந்தது
290. உண்டோ ரழுகுரலென் றொற்றி வருகின்ற
வெண்தோடன் செம்பங்கி வில்வேடன் - கண்டான்
கழுகுவாழ் கானகத்துக் காரரவின் வாயில்
முழுகுவாள் தெய்வ முகம்.
தமயந்தி அவ்வேடனை வேண்டிக் கொண்டது
291. வெய்ய அரவின் விடவாயி னுட்பட்டேன்
ஐயன்மீ ருங்கட் கபயம்யா - னுய்ய
அருளீரோ என்னா அரற்றினா ளஞ்சி
இருளீரும் பூணா ளெடுத்து.
வேடன் தமயந்தியைப் பாம்பின் வயினின்று மீட்டது
292. சங்க நிதிபோல் தருசந் திரன்சுவர்க்கி
வெங்கலிவாய் நின்றுலகம் மீட்டாற்போல் - மங்கையைவெம்
பாம்பின்வாய் நின்றும் பறித்தான் பகைகடிந்த
காம்பின்வாய் வில்வேடன் கண்டு.
தமயந்தி வேடன் உதவிக்கு நன்றி கூறியது
293. ஆருயிரும் நானு மழியாமல் ஐயாவிப்
பேரரவின் வாயிற் பிழைப்பித்தாய் - தேரில்
இதற்குண்டோ கைம்மா றெனவுரைத்தாள் வென்றி
விதர்ப்பன்றான் பெற்ற விளக்கு.
வேடன் தமயந்தியை விரும்பித் தன்னுடன் வர அழைத்தது
294. இந்து நுதலி எழில்நோக்கி ஏதோதன்
சிந்தை கருதிச் சிலைவேடன் - பைந்தொடிநீ
போதுவா யென்னுடனே யென்றான் புலைநரகுக்
கேதுவாய் நின்றா னெடுத்து.
தமயந்தி வேடனிடம் தப்பி ஓட முயன்றது
295. வேட னழைப்ப விழிபதைத்து வெய்துயிரா
ஆடன் மயில்போல் அலமரா - ஓடினாள்
தூறெலா மாகச் சுரிகுழல்வேற் கண்ணினீர்
ஆறெல்லா மாக வழுது.
தமயந்தி சீறிவிழிக்க வேடன் எரிந்து நீறானது
296. தீக்கட் புலிதொடரச் செல்லுஞ் சிறுமான்போல்
ஆக்கை தளர வலமந்து - போக்கற்றுச்
சீறா விழித்தாள் சிலைவேட னவ்வளவில்
நீறாய் விழுந்தா னிலத்து.
தமயந்தியை ஒரு வணிகன் கண்டு வினாவியது
297. அவ்வளவி லாதிப் பெருவழியி லாய்வணிகன்
இவ்வளவு தீவினையே னென்பாள்தன் - மெய்வடிவைக்
கண்டானை யுற்றான் கமலமயி லேயென்றான்
உண்டாய தெல்லா முணர்ந்து.
298. எக்குலத்தாய் யார்மடந்தை யாதுன்னூர் யாதுன்பேர்
நெக்குருகி நீயழுதற் கென்னிமித்தம் - மைக்குழலாய்
கட்டுரைத்துக் காணென்றான் கார்வண்டு காந்தாரம்
விட்டுரைக்குந் தார்வணிகர் வேந்து.
299. முன்னை வினையின் வலியால் முடிமன்னன்
என்னைப் பிரிய இருங்கானில் - அன்னவனைக்
காணா தழுகின்றே னென்றாள் கதிரிமைக்கும்
பூணாரம் பூண்டாள் புலர்ந்து.
வணிகன் தமயந்தியைச் சேதி நகரில் விட்டுச் சென்றது
300. சேதி நகர்க்கே திருவைச் செலவிட்டப்
போதிற் கொடைவணிகன் போயினான் - நீதி
கிடத்துவான் மன்னவர்தங் கீர்த்தியினைப் பார்மேல்
நடத்துவான் வட்டை நடந்து.
தமயந்தியைக் கண்ட பணிப்பெண்கள் சேதியரசன் தேவிக்கு அறிவித்தது
301. அற்ற துகிலு மறாதொழுகு கண்ணீரும்
உற்ற துயரு முடையவளாய் - மற்றொருத்தி
நின்றாளைக் கண்டோ ம் நிலவேந்தன் பொற்றேவி
என்றார் மடவா ரெடுத்து.
சேதிராசன் தேவி தமயந்தியை அழைத்து வரச் செய்தது
302. போயகலா முன்னம் புனையிழையாய் பூங்குயிலை
ஆய மயிலை யறியவே - நீயேகிக்
கொண்டுவா வென்றாள்தன் கொவ்வைக் கனிதிறந்து
வண்டுவாழ் கூந்தன் மயில்.
சேதியரசன் தேவி தமயந்தியை வினாவியது
303. அந்தா மரையி லவளேயென் றையுற்றுச்
சிந்தா குலமெனக்குத் தீராதால் - பைந்தொடியே
உள்ளவா றெல்லா முரையென்றா ளொண்மலரின்
கள்ளவார் கூந்தலாள் கண்டு.
தமயந்தியின் மறுமொழி
304. என்னைத் தனிவனத்திட் டென்கோன் பிரிந்தேக
அன்னவனைக் காணா தலமருவேன் - இந்நகர்க்கே
வந்தே னிதுவென் வரவென்றாள் வாய்புலராச்
செந்தேன் மொழிபதறாத் தேர்ந்து.
தமயந்தி அரண்மனையில் தங்கியிருந்தது
305. உன்றலைவன் தன்னை யொருவகையால் நாடியே
தந்து விடுமளவுந் தாழ்குழலாய் - என்றனுடன்
இங்கே யிருக்க இனிதென்றா ளேந்திழையைக்
கொங்கேயுந் தாராள் குறித்து.
வீமராசன் நளனையும் தமயந்தியையும் தேடிவர ஒரு மறையவனை ஏவியது
306. ஈங்கிவளிவ் வாறிருப்ப இன்னலுழந் தேயேகிப்
பூங்குயிலும் போர்வேற் புரவலனும் - யாங்குற்றார்
சென்றுணர்தி யென்று செலவிட்டான் வேதியனைக்
குன்றுறழ்தோள் வீமன் குறித்து.
மறையோன் சேதிநாடு சென்று தமயந்தியைக் கண்டது
307. ஓடும் புரவித்தேர் வெய்யோ னொளிசென்று
நாடு மிடமெல்லாம் நாடிப்போய்க் - கூடினான்
போதிற் றிருநாடும் பொய்கைத் திருநாடாம்
சேதித் திருநாடு சென்று.
308. தாமஞ்சே ரோதித் தமயந்தி நின்றாளை
ஆமென் றறியா அருமறையோன் - வீமன்
கொடிமேல் விழுந்தழுதான் கொம்புமவன் செம்பொன்
அடிமேல் விழுந்தா ளழுது.
மறையோன் சேதியரசியிடம் தமயந்தியின் நிலை அறிவித்ததும் அவள் துயரும்
309. மாரி பொருகூந்தன் மாதராய் நீபயந்த
காரிகைதான் பட்டதுயர் கண்டாயோ - சோர்குழலும்
வேணியாய் வெண்டுகிலும் பாதியாய் வெந்துயருக்
காணியாய் நின்றா ளயர்ந்து.
310. தன்மக ளாவ தறியாத் தடுமாறாப்
பொன்வடிவின் மேலழுது போய்வீழ்ந்தாள் - மென்மலரைக்
கோதிப்போய் மேதி குருகெழுப்புந் தண்பணைசூழ்
சேதிக்கோன் தேவி திகைத்து.
சேதிராசன் தமயந்தியை அவள் தந்தை நகருக்கு அனுப்பியது
311. கந்தனையுங் கன்னியையுங் கண்டாயி னுஞ்சிறிது
தன்துயரந் தீர்ந்து தனியாறத் - தந்தை
பதியிலே போக்கினான் சேதியர்கோன் பண்டை
விதியிலே போந்தாளை மீண்டு.
தமயந்தியைக் கண்ட குண்டினபுர மக்களின் துயரம்
312. கோயிலு மந்தப் புரமும் கொடிநுடங்கும்
வாயிலும் நின்று மயங்கியதே - தீயகொடும்
கானாள மக்களையுங் கைவிட்டுக் காதலன்பின்
போனாள் புகுந்த பொழுது.
313. அழுவார் விழுவா உயிர்ப்பார்
தொழுவார் தமரெங்குஞ் சூழ்வார் - வழுவாக்
காமநீ ரோதக் கடல்கிளர்ந்தால் ஒத்தவே
நாமவேல் வீமன் நகர்.
314, தந்தையைமுன் காண்டலுமே தாமரைக்க ணீர்சொரியச்
சிந்தை கலங்கித் திகைத்தலமந் - தெந்தாயான்
பட்டதே யென்னப்போய் வீழ்ந்தாள் படைநெடுங்கண்
விட்டநீர் மேலே விழ.
தமயந்தியைக் கண்ட தாய்தந்தையரும் சுற்றத்தாரும் கொண்ட துயர்
315. செவ்வண்ண வாயாளுந் தேர்வேந் தனுமகளை
அவ்வண்ணங் கண்டக்கா லாற்றுவரோ - மெய்வண்ணம்
ஓய்ந்துநா நீர்போ யுலர்கின்ற தொத்ததமர்
நீந்தினார் கண்ணீரி னின்று.
316. பனியிருளிற் பாழ்மண் டபத்திலே யுன்னை
நினையாது நீத்தகன்ற போது - தனியேநின்
றென்னினைந்து என்செய்தா யென்னாப் புலம்பினாள்
பொனினைத்தாய் நோக்கிப் புலர்ந்து.
கலிதொடர் காண்டம் முற்றும்
========================
3. கலிநீங்கு காண்டம்
--------------------
தமயந்தியைப் பிரிந்து சென்ற நளன் தீயிடைப்பட்ட ஒருவன் துயரக்குரல் கேட்டது
317. மன்னா வுனக்கபய மென்னா வனத்தீயில்
பன்னாக வேந்தன் பதைத்துருகிச் - சொன்ன
மொழிவழியே சென்றான் முரட்கலியின் வஞ்சப்
பழிவழியே செல்கின்றான் பார்த்து.
நளன் ஒரு பாம்பைத் தீயிடைக் கண்டது
318. ஆருந் திரியா அரையிருளில் அங்கனமே
சோர்குழலை நீத்த துயரோடும் - வீரன்
திரிவானத் தீக்கானிற் செந்தீயின் வாய்ப்பட்
டெரிவானைக் கண்டா னெதிர்.
நளன் தீயிடம் சென்றது
319. தீக்கடவுள் தந்த வரத்தைத் திருமனத்தில்
ஆக்கி யருளா லரவரசை - நோக்கி
அடைந்தா னடைதலுமே ஆரழலோ னஞ்சி
உடைந்தான் போய்ப்புக்கான் உவர்ந்து.
பாம்பு தனது வரலாறு கூறித் தன்னை விடுவிக்க வேண்டியது
320. வேத முனியொருவன் சாபத்தால் வெங்கானில்
ஆதபத்தின் வாய்ப்பட் டழிகின்றேன் - காதலால்
வந்தெடுத்துக் காவென்றான் மாலை மணிவண்டு
சந்தெடுத்த தோளானைத் தான்.
321. சீரியாய் நீயெடுப்பத் தீமை கெடுகின்றேன்
கூருந் தழலவித்துக் கொண்டுபோய்ப் - பாரில்
விடுகென்றான் மற்றந்த வெந்தழலால் வெம்மைப்
படுகின்றான் வேல்வேந்தைப் பார்த்து.
322. என்றுரைத்த அவ்வளவி லேழுலகுஞ் சூழ்கடலும்
குன்றுஞ் சுமந்த குலப்புயத்தான் - வென்றி
அரவரசைக் கொண்டகன்றா னாரணியந் தன்னின்
இரவரசை வென்றா னெடுத்து.
323. மண்ணின்மீ தென்றனைநின் வன்றாளா லொன்றுமுதல்
எண்ணித் தசவென் றிடுகென்றான் - நண்ணிப்போர்
மாவலான் செய்த வுதவிக்கு மாறாக
ஏவலாற் றீங்கிழைப்பே னென்று.
324. ஆங்கவன்றா னவ்வா றுரைப்ப அதுகேட்டுத்
தீங்கலியாற் செற்ற திருமனத்தான் - பூங்கழலை
மண்ணின்மேல் வைத்துத் தசவென்ற வாய்மையால்
எண்ணினான் வைத்தா னெயிறு.
325. வீமன் மடந்தை விழிமுடியக் கண்டறியா
வாம நெடுந்தோள் வறியோருக் - கேமம்
கொடாதார் அகம்போற் குறுகிற்றே மெய்ம்மை
விடாதான் திருமேனி வெந்து.
அரவை நோக்கி நளன் உரைத்தது
326. ஆற்ற லரவரசே யாங்கென் னுருவத்தைச்
சீற்றமொன் றின்றிச் சினவெயிற்றால் - மாற்றுதற்கின்
றென்கா ரணமென்றா னேற்றமரிற் கூற்றழைக்கும்
மின்கா லயின்முகவேல் வேந்து.
அரவின் மறுமொழியும் அது அளித்த வரமும்
327. காயுங் கடகளிற்றாய் கார்க்கோ டகனென்பேர்
நீயிங்கு வந்தமை யானினைந்து - காயத்தை
மாறாக்கிக் கொண்டு மறைந்துறைதல் காரணமா
வேறாக்கிற் றென்றான் விரைந்து.
328. கூனிறால் பாயக் குவளை தவளைவாய்த்
தேனிறால் பாயுந் திருநாடா - கானில்
தணியாத வெங்கனலைத் தாங்கினா யிந்த
அணியாடை கொள்கென்றா னாங்கு.
329. சாதி மணித்துகில்நி சாத்தினால் தண்கழுநீர்ப்
போதின்கீழ் மேயும் புதுவரால் - தாதின்
துளிக்குநா நீட்டுந் துறைநாடர் கோவே
ஒளிக்குநாள் நீங்கு முரு.
330. வாகு குறைந்தமையால் வாகுவனென் றுன்னாமம்
ஆக வயோத்தி நகரடைந்து - மாகனகத்
தேர்த் தொழிற்கு மிக்கானீ யாகென்றான் செம்மனத்தால்
பார்த்தொழிற்கு மிக்கானைப் பார்த்து.
நளன் அக்கான் கடந்து சென்றது
331. இணையாரு மில்லா னிழைத்த உதவி
புணையாகச் சூழ்கானிற் போனான் - பணையாகத்
திண்ணாக மோரெட்டுந் தாங்குந் திசையனைத்தும்
எண்ணாக வேந்த னெழுந்து.
நளன் கடற்கரையைக் கண்டது
332. நினைப்பென்னும் காற்றசைப்ப நெஞ்சிடையே மூளும்
கனற்புகைய வேகின்றான் கண்டான் - பனிக்குருகு
தன்படாம் நீழல் தனிப்பேடைப் பார்த்திரவு
கண்படா வேலைக் கரை.
நளன் கடற்கரையில் பலவற்றைக் கண்டு புலம்பல்
333. கொம்ப ரிளங்குருகே கூறா திருத்தியால்
அம்புயத்தின் போதை யறுகாலால் - தும்பி
திறக்கத்தே னூறுந் திருநாடன் பொன்னை
உறக்கத்தே நீத்தேனுக் கொன்று.
334. புன்னை நறுந்தாது கோதிப் பொறிவண்டு
கன்னிப் பெடையுண்ணக் காத்திருக்கும் - இன்னருள்கண்
டஞ்சினா னாவி யழிந்தா னறவுயிர்த்து
நெஞ்சினா லெல்லாம் நினைந்து.
335. காதலியைக் காரிருளிற் கானகத்தே கைவிட்ட
பாதகனைப் பார்க்கப் படாதென்றோ - நாதம்
அளிக்கின்ற ஆழிவா யாங்கலவ ஓடி
ஒளிக்கின்ற தென்னோ வுரை.
336. பானலே சோலைப் பசுந்தென்றல் வந்துலவும்
கானலே வேலைக் கழிக்குருகே - யானுடைய
மின்னிமைக்கும் பூணாரம் வீங்கிருள்வா யாங்குணர்ந்தால்
என்னினைக்குஞ் சொல்வீ ரெனக்கு.
நளன் அயோத்தி நகரை அடைந்தது
337. முந்நீர் மடவார் முறுவல் திரள்குவிப்ப
நன்னீ ரயோத்தி நகரடைந்தான் - பொன்னீர்
முருகுடைக்குந் தாமரையின் மொய்ம்மலரைத் தும்பி
அருகுடைக்கும் நன்னாட் டரசு.
நளன் அயோத்தி மன்னனை அடைதல்
338. மான்தேர்த் தொழிற்கு மடைத்தொழிற்கு மிக்கோனென்று
ஊன்தேய்க்கும் வேலா னுயர்நறவத் - தேன்தோய்க்கும்
தார்வேந்தற் கென்வரவு தானுரைமி னென்றுரைத்தான்
தேர்வேந்தன் வாகுவனாய்ச் சென்று.
339. பொய்யடையாச் சிந்தைப் புரவலனை நோக்கித்தன்
செய்ய முகமலர்ந்து தேர்வேந்தன் - ஐயநீ
எத்தொழிற்கு மிக்கானீ யாதுன் பெயரென்றான்
கைத்தொழிற்கு மிக்கானைக் கண்டு.
340. அன்னம் மிதிப்ப அலர்வழியுந் தேறல்போயச்
செந்நெல் விளைக்குந் திருநாடர் - மன்னா
மடைத்தொழிலுந் தேர்த்தொழிலும் வல்லன்யா னென்றான்
கொடைத்தொழிலின் மிக்கான் குறித்து.
தமயந்தி நளனைத் தேடப் புரோகிதனை விடுத்தது
341. என்னை யிருங்கானில் நீத்த இகல்வேந்தன்
தன்னைநீ நாடுகெனத் தண்கோதை - மின்னுப்
புரைகதிர்வேல் வேந்தன் புரோகிதனுக் கிந்த
உரைபகர்வ தானா ளுணர்ந்து.
342. காரிருளில் பாழ்மண் டபத்தேதன் காதலியைச்
சோர்துயிலின் நீத்தல் துணிவென்றோ - தேர்வேந்தற்
கென்றறைந்தா நேர்நின் றெதிர்மாற்றந் தந்தாரைச்
சென்றறிந்து வாவென்றாள் தேர்ந்து.
புரோகிதன் அயோத்தியை அடைந்தது
343. மின்னாடும் மால்வரையும் வேலையும் வேலைசூழ்
நன்னாடுங் கானகமு நாடினான் - மன்னு
கடந்தாழ் களியானைக் காவலனைத் தேடி
அடைந்தா னயோத்தி நகர்.
புரோகிதன் கூறிய மொழிகேட்டு நளன் கூறிய மறுமொழி
344. கானகத்துக் காதலியைக் காரிருளிற் கைவிட்டுப்
போனதுவும் வேந்தற்குப் போதுமோ - தானென்று
சாற்றினா னந்தவுரை தார்வேந்தன் தன்செவியில்
ஏற்றினான் வந்தா னெதிர்.
345. ஒண்டொடி தன்னை யுறக்கத்தே நீத்ததுவும்
பண்டை விதியின் பயனேகாண் - தண்டரளப்
பூத்தாம வெண்குடையான் பொன்மகளை வெவ்வனத்தே
நீத்தானென் றையுறேல் நீ.
தமயந்தி வந்த புரோகிதனை வினாவியது
346. எங்க ணுறைந்தனைகொல் எத்திசைபோய் நாடினைகொல்
கங்கைவள நாட்டார்தங் காவலனை - அங்குத்
தலைப்பட்ட வாறுண்டோ சாற்றென்றாள் கண்ணீர்
அலைப்பட்ட கொங்கையா ளாங்கு.
புரோகிதன் மறுமொழி
347. வாக்கினால் மன்னவனை யொப்பான் மதித்தொருகால்
ஆக்கையே நோக்கி னவனல்லன் - பூக்கமழும்
கூந்தலாய் மற்றக் குலப்பாக னென்றுரைத்தான்
ஏந்துநூல் மார்ப னெடுத்து.
தமயந்தி தன் இரண்டாஞ் சுயம்வரச் செய்தி அறிவிக்கச் செய்தது
348. மீண்டோ ர் சுயம்வரத்தை வீமன் திருமடந்தை
பூண்டாளென் றந்தணநீ போயுரைத்தால் - நீண்ட
கொடைவேந்தற் கித்தூரந் தேர்க்கோலங் கொள்வான்
படைவேந்த னென்றாள் பரிந்து.
இரண்டாஞ் சுயம்வரச் செய்தி கேட்டு இருதுபன்னன் கூறியது
349. எங்கோன் மகளுக் கிரண்டாஞ் சுயம்வரமென்
றங்கோர் முரச மறைவித்தான் - செங்கோலாய்
அந்நாளும் நாளை யளவென்றா னந்தணன்போய்த்
தென்னாளுந் தாரானைச் சேர்ந்து.
350. வேத மொழிவாணன் மீண்டுஞ் சுயம்வரத்தைக்
காதலித்தாள் வீமன்றன் காதலியென் - றோதினான்
என்செய்கோ மற்றிதனுக் கென்றா னிகல்சீறும்
மின்செய்த வேலான் விரைந்து.
நளன் அதுகேட்டுக் கூறியது
351. குறையாத கற்பினாள் கொண்டானுக் கல்லால்
இறவாத வேந்திழையா ளின்று - பறிபீறி
நெல்லிற் பருவரா லோடும் நெடுநாடா
சொல்லப் படுமோவிச் சொல்.
இருதுபன்னன் கூறிய சமாதானம்
352. என்மே லெறிகின்ற மாலை யெழில்நளன்தன்
தன்மேல் விழுந்ததுகாண் முன்னாளில் - அன்னதற்குக்
காரணந்தா னீதன்றோ வென்றான் கடாஞ்சொரியும்
வாரணந்தா னன்னான் மறித்து.
நளனது தியக்கம்
353. முன்னை வினையான் முடிந்ததோ மொய்குழலாள்
என்னைத்தான் காண விசைந்ததோ - தன்மரபுக்
கொவ்வாத வார்த்தை யுலகத் துரைப்பட்ட
தெவ்வாறு கொல்லோ விது?
நளன் இருதுபன்னனுக்குத் தேரோட்டிச் செல்ல உடன்பட்டது
354. காவலனுக் கேவற் கடன்பூண்டேன் மற்றவன்றன்
ஏவன் முடிப்ப னினியென்று - மாவிற்
குலத்தேரைப் பூட்டினான் கோதையர்தங் கொங்கை
மலர்த்தேன் அளிக்குந்தார் மன்.
355. ஒற்றைத் தனியாழித் தேரென்ன வோடுவதோர்
கொற்ற நெடுந்தேர் கொடுவந்தேன் - மற்றிதற்கே
போந்தேறு கென்றுரைத்தான் பொம்மென் றளிமுரலத்
தீந்தேறல் வாக்குந்தார்ச் சேய்.
நளன் தேர் ஓட்டிய சிறப்பு
356. முந்தை வினைகுறுக மூவா மயல்கொண்டான்
சிந்தை யினுங்கடுகச் சென்றதே - சந்தவிரைத்
தார்குன்றா மெல்லோதி தன்செயலைத் தன்மனத்தே
தேர்கின்றா னூர்கின்ற தேர்.
357. மேலாடை வீழ்ந்த தெடுவென்றா னவ்வளவில்
நாலாறு காதம் நடந்ததே - தோலாமை
மேல்கொண்டா னேறிவர வெம்மைக் கலிச்சூதில்
மால்கொண்டான் கோல்கொண்ட மா.
இருதுபன்னனது கணிதச் சிறப்பு
358. இத்தாழ் பணையி லிருந்தான்றிக் காயெண்ணில்
பத்தா யிரங்கோடி பாரென்ன - உய்த்ததனில்
தேர்நிறுத்தி யெண்ணினான் தேவர் சபைநடுவே
தார்நிறுத்துந் தோள்வேந்தன் தான்.
இருதுபன்னன் நளனிடம் கூறியது
359. ஏரடிப்பார் கோலெடுப்ப இந்தேன் தொடைபீறிக்
காரடுத்த சோலைக் கடனாடன் - தேரடுத்த
மாத்தொழிலு மித்தொழிலும் மாற்றுதியோ வென்றுரைத்தான்
தேர்தொழிலின் மிக்கானைத் தேர்ந்து.
கலி நளனைவிட்டு நீங்கியது
360. வண்டார் வளவயல்சூழ் மள்ளுவநாட் டெங்கோமான்
தண்டார் புனைசந் திரன்சுவர்க்கி - கொண்டாடும்
பாவலன்பால் நின்ற பசிபோல நீங்கிற்றே
காவலன்பால் நின்ற கலி.
இருதுபன்னன் குண்டினபுரி அடைந்தது
361. ஆமை முதுகி லலவன் துயில்கொள்ளும்
காமர் நெடுநாடு கைவிட்டு - வீமன்தன்
பொன்னகரி சென்றடைந்தான் போர்வெட் டெழுங்கூற்றம்
அன்னகரி யொன்றுடையா னாங்கு.
இருதுபன்னன் வீமராசனுக்குத் தன் வரவு அறிவித்தது
362. வெற்றித் தனித்தேரை வீமன் பெருங்கோயில்
முற்றத் திருத்தி முறைசெய்யும் - கொற்றவற்குத்
தன்வரவு கூறப் பணித்துத் தனிப்புக்கான்
மன்விரவு தாரான் மகிழ்ந்து.
வீமராசன் இருதுபன்னனை வினாவியது
363. கன்னி நறுந்தேறன் மாந்திக் கமலத்தின்
மன்னித் துயின்ற வரிவண்டு - பின்னையும்போய்
நெய்தற் கவாவும் நெடுநாட நீயென்பால்
எய்தற் கவாவியவா றென்.
இருதுபன்னன் மறுமொழி
364. இன்றுன்னைக் காண்பதோ ராதரவால் யானிங்ஙன்
மன்றல் மலர்த்தாராய் வந்தடைந்தேன் - என்றான்
ஒளியார்வேற் கண்ணாள்மே லுள்ளந் துரப்பத்
தெளியாது முன்போந்த சேய்.
நளன் மடைவாயிற் புக்கது
365. ஆதி நெடுந்தேர்ப் பரிவிட் டவையாற்றிக்
கோதி லடிசிற் குறைமுடிப்பான் - மேதிக்
கடைவாயிற் கார்நீலங் கண்விழிக்கும் நாடன்
மடைவாயிற் புக்கான் மதித்து.
நளன் புக்க மடைவாயிற் சிறப்பு
366. ஆதி மறைநூ லனைத்துந் தெரிந்துணர்ந்த
நீதி நெறியாளர் நெஞ்சம்போல் - யாதும்
நிரப்பாம லெல்லாம் நிரம்பிற்றே பொற்றேர்
வரப்பாகன் புக்க மனை.
தமயந்தி நளன் செய்யும் மடைத்தொழிலை அறிந்துவரச் செய்தது
367. இடைச்சுரத்தில் தன்னை யிடையிருளில் நீத்த
கொடைத் தொழிலா னென்றயிர்த்தக் கோமான் - மடைத்தொழில்கள்
செய்கின்ற தெல்லாந் தெரிந்துணர்ந்து வாவென்றாள்
நைகின்ற நெஞ்சாள் நயந்து.
தமயந்தி தன் மக்களை நளன்பால் விடுத்தது
368. கோதை நெடுவேற் குமரனையுந் தங்கையையும்
ஆதி யரச னருகாகப் - போத
விளையாட விட்டவன்றன்மேற் செயல்நா டென்றாள்
வளையாடுங் கையாள் மதித்து.
தன் மக்களைக் கண்ட நளன் அவர்களோடு உரையாடியது
369. மக்களைமுன் காணா மனநடுங்கா வெய்துயிராப்
புக்கெடுத்து வீரப் புயத்தணையா - மக்காள்நீர்
என்மக்கள் போல்கின்றீர் யார்மக்க ளென்றுரைத்தான்
வன்மக் களியானை மன்.
370. மன்னு நிடதத்தார் வாழ்வேந்தன் மக்கள்யாம்
அன்னைதனைக் கான்விட் டவனேக - இந்நகர்க்கே
வாழ்கின்றோ மெங்கள் வளநாடு மற்றொருவன்
ஆள்கின்றான் னென்றா ரழுது.
371. ஆங்கவர் சொன்ன வுரைகேட் டழிவெய்தி
நீங்கா வுயிரோடு நின்றிட்டான் - பூங்காவின்
வள்ளம்போற் கோங்கு மலருந் திருநாடன்
வெள்ளம்போற் கண்ணீ ருகுத்து.
372. உங்க ளரசொருவன் ஆளநீ ரோடிப்போந்
திங்க ணுறைத லிழுக்கன்றோ - செங்கை
வளவரசே யென்றுரைத்தான் மாதவத்தாற் பெற்ற
இளவரசை நோக்கி யெடுத்து.
373. நெஞ்சாலிம் மாற்றம் நினைந்துரைக்க நீயல்லால்
அஞ்சாரோ மன்ன ரடுமடையா! - எஞ்சாது
தீமையே கொண்ட சிறுதொழிலா யெங்கோமான்
வாய்மையே கண்டாய் வலி.
374. எந்தை கழலிணையி லெம்மருங்குங் காணலாம்
கந்து கடியும் கடாக்களிற்றின் - வந்து
பணிமுடியிற் பார்காக்கும் பார்வேந்தர் தங்கள்
மணிமுடியிற் றேய்ந்த வடு.
375. மன்னர் பெருமை மடைய ரறிவரோ
உன்னை யறியா துரைசெய்த - என்னை
முனிந்தருள லென்று முடிசாய்த்து நின்றான்
கனிந்துருகி நீர்வாரக் கண்.
அச்செய்தியைக் கேட்ட தமயந்தியின் துயரம்
376. கொற்றக் குமரனையுங் கோதையையுந் தான்கண்டு
மற்றவன்றா னாங்குரைத்த வாசகத்தை - முற்றும்
மொழிந்தாரம் மாற்றம் மொழியாத முன்னே
அழிந்தாள் விழுந்தா ளழுது.
377. கொங்கை யளைந்து குழல்திருத்திக் கோலஞ்செய்
அங்கை யிரண்டு மடுபுகையால் - இங்ஙன்
கருகியவோ வென்றழுதாள் காதலனை முன்னாள்
பருகியவேற் கண்ணாள் பதைத்து.
உள்ள நிலைமையைத் தமயந்தி தன் தந்தைக்கு அறிவித்தது
378. மற்றித் திருநகர்க்கே வந்தடைந்த மன்னவர்க்குக்
கொற்றத் தனித்தேருங் கொண்டணைந்து - மற்றும்
மடைத்தொழிலே செய்கின்ற மன்னவன்கா ணெங்கள்
கொடைத்தொழிலா னென்றாள் குறித்து.
வீமராசன் நளனைத் தோற்றத்தால் அறிய முடியாது வாக்கினால் அறிந்தது
379. போதலருங் கண்ணியான் போர்வேந்தர் சூழப்போய்
காதலிதன் காதலனைக் கண்ணுற்றான் - ஓதம்
வரிவளைகொண் டேறும் வளநாடன் தன்னைத்
தெரிவரிதா நின்றான் திகைத்து.
380. செவ்வாய் மொழிக்குஞ் செயலுக்குஞ் சிந்தைக்கும்
ஒவ்வாது கொண்ட உருவென்னா - எவ்வாயும்
நோக்கினா னோக்கித் தெளிந்தா னுணங்கியதோர்
வாக்கினான் தன்னை மதித்து.
வீமராசன் நளனைத் தன் உருக்காட்ட வேண்டியது
381. பைந்தலைய நாக பணமென்று பூகத்தின்
ஐந்தலையின் பாளைதனை ஐயுற்று - மந்தி
தெளியா திருக்குந் திருநாடா! உன்னை
ஒளியாது காட்டுன் னுரு.
நளன் கார்க்கோடகன் தந்த ஆடைகளை உடுத்ததும் சுய உருப்பெற்றதும்
382. அரவரசன் தான்கொடுத்த அம்பூந் துகிலின்
ஒருதுகிலை வாங்கி யுடுத்தான் - ஒருதுகிலைப்
போர்த்தான் பொருகலியின் வஞ்சனையாற் பூண்டளிக்கும்
கோத்தாயம் முன்னிழந்த கோ.
383. மிக்கோ னுலகளந்த மெய்யடியே சார்வாகப்
புக்கோ ரருவினைபோற் போயிற்றே - அக்காலம்
கானகத்தே காதலியை நீத்துக் கரந்துறையும்
மானகத்தேர்ப் பாகன் வடிவு.
நளன் மக்கள் அவனைச் சுயவடிவில் கண்டு மகிழ்ந்து வணங்கியது
384. தாதையைமுன் காண்டலுமே தாமரைக்கண் நீரரும்பப்
போதலருங் குஞ்சியான் புக்கணைந்து - கோதிலாப்
பொன்னடியைக் கண்ணிற் புனலாற் கழுவினான்
மின்னிடையா ளோடும் விழுந்து.
தமயந்தி நளனடியில் வீழ்ந்து வணங்கியது
385. பாதித் துகிலோடு பாய்ந்திழியுங் கண்ணீரும்
சீதக் களபதனஞ் சேர்மாசும் - போத
மலர்ந்ததார் வேந்தன் மலரடியில் வீழ்ந்தாள்
அலர்ந்ததே கண்ணீ ரவற்கு.
தமயந்தியின் துயரநிலை
386. வெவ்விடத்தோ டொக்கும் விழியிரண்டும் வீழ்துயில்கொள்
அவ்விடத்தே நீத்த அவரென்றே - இவ்விடத்தே
வாரார் முலையாளம் மன்னவனைக் காணாமல்
நீரால் மறைத்தனவே நின்று.
வானவர் நளனை வாழ்த்திப் பூமாரி பெய்தது
387. உத்தமரின் மற்றிவனை யொப்பா ரொருவரிலை
இத்தலத்தி லென்றிமையோ ரெம்மருங்கும் - கைத்தலத்தில்
தேமாரி பெய்யுந் திருமலர்த்தார் வேந்தன்மேல்
பூமாரி பெய்தார் புகழ்ந்து.
கலி, நளனைத் தன்பால் வரம் கொள்ள வேண்டியது
388. தேவியிவள் கற்புக்குஞ் செங்கோன் முறைமைக்கும்
பூவுலகி லொப்பார்யார் போதுவார் - காவலனே
மற்றென்பால் வேண்டும் வரங்கேட்டுக் கொள்ளென்றான்
முற்றன்பாற் பாரளிப்பான் முன்.
நளன் கேட்ட வரம்
389. உன்சரிதஞ் செல்ல வுலகாளுங் காலத்து
மின்சொரியும் வேலாய் மிகவிரும்பி - என்சரிதம்
கேட்டாரை நீயடையே லென்றான் கிளர்மணிப்பூண்
வாட்டானை மன்னன் மதித்து.
கலி நளனுக்கு வரமளித்து மீண்டது
390. என்காலத் துன்சரிதங் கேட்டாரை யானடையேன்
மின்கா லயில்வேலாய் மெய்யென்று - நன்காவி
மட்டுரைக்குஞ் சோலை வளநாடன் முன்னின்று
கட்டுரைத்துப் போனான் கலி.
வீமராசன் நளன் முதலியோர்க்கு விருந்தளித்தது
391. வேத நெறிவழுவா வேந்தனையும் பூந்தடங்கண்
கோதையையு மக்களையுங் கொண்டுபோய்த் - தாது
புதையத்தேன் பாய்ந்தொழுகும் பூஞ்சோலை வேலி
விதையக்கோன் செய்தான் விருந்து.
இருதுபன்னன் நளனிடம் தன் பிழை பொறுக்க வேண்டிப் பின் தன் நகர்க்கேகியது
392. உன்னையா னொன்று முணரா துரைத்தவெலாம்
பொன்னமருந் தாராய் பொறுவென்று - பின்னைத்தன்
மேனீர்மை குன்றா வெறுந்தேர் மிசைக்கொண்டான்
மானீ ரயோத்தியார் மன்.
நளன் தனது மனைவி மக்களுடன் நிடதநாடு சென்றது
393. விற்றானை முன்செல்ல வேல்வேந்தர் பின்செல்லப்
பொற்றேர்மேற் றேவியொடும் போயினான் - முற்றாம்பல்
தேநீ ரளித்தருகு செந்நெற் கதிர்விளைக்கும்
மாநீர் நிடதத்தார் மன்.
394. தானவரை மெல்லத் தரித்தநெடு வைவேலாய்
ஏனைநெறி தூரமினி யெத்தனையோ - மானேகேள்
இந்த மலைகடந் தேழுமலைக் கப்புறமா
விந்தமெனு நம்பதிதான் மிக்கு.
சூரியோதயம்
395. இக்கங்குல் போக இகல்வேல் நளனெறிநீர்
செய்க்கங்கு பாயுந் திருநாடு - புக்கங்
கிருக்குமா காண்பான்போ லேறினான் குன்றில்
செருக்குமான் தேர்வெய்யோன் சென்று.
நளன், மாவிந்த நகரைச் சார்ந்த ஒரு சோலையில் தங்கியது
396. மன்றலிளங் கோதையொடு மக்களுந் தானுமொரு
வென்றி மணிநெடுந்தேர் மேலேறிச் - சென்றடைந்தான்
மாவிந்த மென்னும் வளநகரஞ் சூழ்ந்தவொரு
பூவிந்தை வாழும் பொழில்.
நளன் புட்கரனுக்கு அறிவித்தது
397. மற்றவனுக் கென்வரவு சொல்லி மறுசூதுக்
குற்ற பணைய முளதென்று - கொற்றவனைக்
கொண்டணைவீ ரென்று குலத்தூ தரைவிடுத்தான்
தண்டெரியல் தேர்வேந்தன் தான்.
புட்கரன் நளனைக் கண்டது
398. மாய நெடுஞ்சூதில் வஞ்சித்த வன்னெஞ்சன்
தூய நறுமலர்ப்பூஞ் சோலைவாய் - ஆய
பெருந்தானை சூழப் பெடைநடையா ளோடும்
இருந்தானைக் கண்டா னெதிர்.
புட்கரன் நளனை நலம் வினாவியது
399. செங்கோ லரசன் முகம்நோக்கித் தேர்ச்சியிலா
வெங்கோ லரசன் வினாவினான் - அங்கோலக்
காவற் கொடைவேந்தே காதலர்க்குங் காதலிக்கும்
யாவர்க்குந் தீதிலவே யென்று.
நளனும் புட்கரனும் மறு சூது ஆடியது
400. தீது தருகலிமுன் செய்ததனை யோராதே
யாது பணைய மெனவியம்பச் - சூதாட
மையாழி யிற்றுயிலும் மாலனையான் வண்மைபுனை
கையாழி வைத்தான் கழித்து.
நளன் தன் நாடு முதலியன வென்று கொண்டது
401. அப்பலகை யொன்றி னருகிருந்தார் தாமதிக்கச்
செப்பரிய செல்வத் திருநகரும் - ஒப்பரிய
வன்றானை யோடு வளநாடும் வஞ்சனையால்
வென்றானை வென்றானவ் வேந்து.
புட்கரன் யாவும் இழ்ந்து தன் நாடு சென்றது
402. அந்த வளநாடு மவ்வரசு மாங்கொழிய
வந்த படியே வழிக்கொண்டான் - செந்தமிழோர்
நாவேய்ந்த சொல்லா னளனென்று போற்றிசைக்கும்
தேர்வேந்தற் கெல்லாங் கொடுத்து.
நளன் தன் நகரை அடைந்தது
403. ஏனை முடிவேந்த ரெத்திசையும் போற்றிசைப்பச்
சேனை புடைசூழத் தேரேறி - ஆனபுகழ்ப்
பொன்னகர மெய்தும் புரந்தரனைப் போற்பொலிந்து
நன்னகரம் புக்கான் நளன்.
நகர மாந்தரின் மகிழ்ச்சி நிலை
404. கார்பெற்ற தோகையோ கண்பெற்ற வாண்முகமோ
நீர்பெற் றுயர்ந்த நிறைபுலமோ - பார்பெற்று
மாதோடும் மன்னன் வரக்கண்ட மாநகருக்
கேதோ வுரைப்ப னெதிர்.
(பின்னுரை)
405. வென்றி நிடதத்தார் வேந்தன் சரிதையீ
தென்றுரைத்து வேத யியல்முனிவன் - நன்றிபுனை
மன்னா பருவரலை மாற்றுதியென் றாசிமொழி
பன்னா நடத்திட்டான் பண்டு.
கலி நீங்கு காண்டம் முற்றும்
Friday, April 15, 2011
Sunday, April 10, 2011
சிலப்பதிகாரம் 2. மதுரைக் காண்டம்
இளங்கோ அடிகள் இயற்றிய சிலப்பதிகாரம்
2. மதுரைக் காண்டம்
உள்ளுரை
11. காடுகாண் காதை12. வேட்டுவ வரி
13. புரஞ்சேரியிறுத்த காதை
14. ஊர்காண் காதை
15. அடைக்கலக் காதை
16. கொலைக்களக் காதை
17. ஆய்ச்சியர் குரவை
18. துன்ப மாலை
19. ஊர்சூழ் வரி
20. வழக்குரை காதை
21. வஞ்சின மாலை
22. அழற்படு காதை
23. கட்டுரை காதை
கட்டுரை
11. காடுகாண் காதை
| திங்கள்மூன் றடுக்கிய திருமுக் குடைக்கீழ்ச் செங்கதிர் ஞாயிற்றுத் திகழொளி சிறந்து கோதைதாழ் பிண்டிக் கொழுநிழ லிருந்த ஆதியில் தோற்றத் தறிவனை வணங்கிக் கந்தன் பள்ளிக் கடவுளர்க் கெல்லாம் | 5 |
| அந்தி லரங்கத் தகன்பொழி லகவயிற் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி மாதவத் தாட்டியும் மாண்புற மொழிந்தாங்கு அன்றவ ருறைவிடத் தல்கின ரடங்கித் தென்றிசை மருங்கிற் செலவு விருப்புற்று | 10 |
| வைகறை யாமத்து வாரணங் கழிந்து வெய்யவன் குணதிசை விளங்கித் தோன்ற வளநீர்ப் பண்ணையும் வாவியும் பொலிந்ததோர் இளமரக் கானத் திருக்கை புக்குழி வாழ்க எங்கோ மன்னவர் பெருந்தகை | 15 |
| ஊழிதொ றூழிதொ றுலகங் காக்க அடியிற் றன்னள வரசர்க் குணர்த்தி வடிவேல் எறிந்த வான்பகை பொறாது பஃறுளி யாற்றுடன் பன்மலை யடுக்கத்துக் குமரிக் கோடுங் கொடுங்கடல் கொள்ள | 20 |
| வடதிசைக் கங்கையும் இமயமுங் கொண்டு தென்றிசை யாண்ட தென்னவன் வாழி திங்கட் செல்வன் திருக்குலம் விளங்கச் செங்கணா யிரத்தோன் திறல்விளங் காரம் பொங்கொளி மார்பிற் பூண்டோன் வாழி | 25 |
| முடிவளை யுடைத்தோன் முதல்வன் சென்னியென்று இடியுடைப் பெருமழை யெய்தா தேகப் பிழையா விளையுட் பெருவளஞ் சுரப்ப மழைபிணித் தாண்ட மன்னவன் வாழ்கெனத் தீதுதீர் சிறப்பின் தென்னனை வாழ்த்தி | 30 |
| மாமுது மறையோன் வந்திருந் தோனை யாது நும்மூர் ஈங்கென் வரவெனக் கோவலன் கேட்பக் குன்றாச் சிறப்பின் மாமறை யாளன் வருபொருள் உரைப்போன் நீல மேகம் நெடும்பொற் குன்றத்துப் | 35 |
| பால்விரிந் தகலாது படிந்தது போல ஆயிரம் விரித்தெழு தலையுடை அருந்திறற் பாயற் பள்ளிப் பலர்தொழு தேத்த விரிதிரைக் காவிரி வியன்பெரு துருத்தித் திருவமர் மார்பன் கிடந்த வண்ணமும் | 40 |
| வீங்குநீ ரருவி வேங்கட மென்னும் ஓங்குயர் மலையத் துச்சி மீமிசை விரிகதிர் ஞாயிறுந் திங்களும் விளங்கி இருமருங் கோங்கிய இடைநிலைத் தானத்து மின்னுக்கோடி யுடுத்து விளங்குவிற் பூண்டு | 45 |
| நன்னிற மேகம் நின்றது போலப் பகையணங் காழியும் பால்வெண் சங்கமும் தகைபெறு தாமரைக் கையி னேந்தி நலங்கிளர் ஆரம் மார்பிற் பூண்டு பொலம்பூ வாடையிற் பொலிந்து தோன்றிய | 50 |
| செங்கண் நெடியோன் நின்ற வண்ணமும் என்கண் காட்டென் றென்னுளங் கவற்ற வந்தேன் குடமலை மாங்காட் டுள்ளேன் தென்னவன் நாட்டுச் சிறப்புஞ் செய்கையும் கண்மணி குளிர்ப்பக் கண்டே னாதலின் | 55 |
| வாழ்த்திவந் திருந்தேன் இதுவென் வரவெனத் தீத்திறம் புரிந்தோன் செப்பக் கேட்டு மாமறை முதல்வ மதுரைச் செந்நெறி கூறு நீயெனக் கோவலற் குரைக்கும் கோத்தொழி லாளரொடு கொற்றவன் கோடி | 60 |
| வேத்தியல் இழந்த வியனிலம் போல வேனலங் கிழவனொடு வெங்கதிர் வேந்தன் தானலந் திருகத் தன்மையிற் குன்றி முல்லையுங் குறிஞ்சியும் முறைமையின் திரிந்து நல்லியல் பிழந்து நடுங்குதுய ருறுத்துப் | 65 |
| பாலை யென்பதோர் படிவங் கொள்ளும் காலை எய்தினிர் காரிகை தன்னுடன் அறையும் பொறையும் ஆரிடை மயக்கமும் நிறைநீர் வேலியும் முறைபடக் கிடந்தஇந் நெடும்பேர் அத்தம் நீந்திச் சென்று | 70 |
| கொடும்பை நெடுங்குளக் கோட்டகம் புக்கால் பிறைமுடிக் கண்ணிப் பெரியோன் ஏந்திய அறைவாய்ச் சூலத் தருநெறி கவர்க்கும் வலம்படக் கிடந்த வழிநீர் துணியின் அலறுதலை மராமும் உலறுதலை ஓமையும் | 75 |
| பொரியரை உழிஞ்சிலும் புன்முளி மூங்கிலும் வரிமரல் திரங்கிய கரிபுறக் கிடக்கையும் நீர்நசைஇ வேட்கையின் மானின்று விளிக்கும் கானமும் எயினர் கடமுங் கடந்தால் ஐவன வெண்ணெலும் அறைக்கட் கரும்பும் | 80 |
| கொய்பூந் தினையும் கொழும்புன வரகும் காயமும் மஞ்சளும் ஆய்கொடிக் கவலையும் வாழையும் கமுகும் தாழ்குலைத் தெங்கும் மாவும் பலாவும் சூழடுத் தோங்கிய தென்னவன் சிறுமலை திகழ்ந்து தோன்றும் | 85 |
| அம்மலை வலங்கொண் டகன்பதிச் செல்லுமின் அவ்வழிப் படரீ ராயி னிடத்துச் செவ்வழிப் பண்ணிற் சிறைவண் டரற்றும் தடந்தாழ் வயலொடு தண்பூங் காவொடு கடம்பல கிடந்த காடுடன் கழிந்து | 90 |
| திருமால் குன்றத்துச் செல்குவி ராயின் பெருமால் கெடுக்கும் பிலமுண் டாங்கு விண்ணோர் ஏத்தும் வியத்தகு மரபிற் புண்ணிய சரவணம் பவகா ரணியோடு இட்ட சித்தி யெனும்பெயர் போகி | 95 |
| விட்டு நீங்கா விளங்கிய பொய்கை முட்டாச் சிறப்பின் மூன்றுள வாங்குப் புண்ணிய சரவணம் பொருந்துவி ராயின் விண்ணவர் கோமான் விழுநூ லெய்துவிர் பவகா ரணி படிந் தாடுவி ராயிற் | 100 |
| பவகா ரணத்திற் பழம்பிறப் பெய்துவிர் இட்ட சித்தி எய்துவி ராயின் இட்ட சித்தி எய்துவிர் நீரே ஆங்குப் பிலம்புக வேண்டுதி ராயின் ஓங்குயர் மலையத் துயர்ந்தோற் றொழுது | 105 |
| சிந்தையில் அவன்றன் சேவடி வைத்து வந்தனை மும்முறை மலைவலம் செய்தால் நிலம்பக வீழ்ந்த சிலம்பாற் றகன்றலைப் பொலங்கொடி மின்னிற் புயலைங் கூந்தற் கடிமல ரவிழ்ந்த கன்னிகா ரத்துத் | 110 |
| தொடிவளைத் தோளி ஒருத்தி தோன்றி இம்மைக் கின்பமும் மறுமைக் கின்பமும் இம்மையு மறுமையும் இரண்டும் இன்றியோர் செம்மையில் நிற்பதுஞ் செப்புமின் நீயிர்இவ் வரைத்தாள் வாழ்வேன் வரோத்தமை என்பேன் | 115 |
| உரைத்தார்க் குரியேன் உரைத்தீ ராயின் திருத்தக் கீர்க்குத் திறந்தேன் கதவெனும் கதவந் திறந்தவள் காட்டிய நன்னெறிப் புதவம் பலவுள போகிடை கழியன ஒட்டுப் புதவமொன் றுண்டதன் உம்பர் | 120 |
| வட்டிகைப் பூங்கொடி வந்து தோன்றி இறுதியில் இன்பம் எனக்கீங் குரைத்தாற் பெறுதிர் போலும்நீர் பேணிய பொருளெனும் உரையீ ராயினும் உறுகண் செய்யேன் நெடுவழிப் புறத்து நீக்குவல் நும்மெனும் | 125 |
| உரைத்தார் உளரெனின் உரைத்த மூன்றின் கரைப்படுத் தாங்குக் காட்டினள் பெயரும் அருமறை மருங்கின் ஐந்தினும் எட்டினும் வருமுறை எழுத்தின் மந்திர மிரண்டும் ஒருமுறை யாக உளங்கொண் டோதி | 130 |
| வேண்டிய தொன்றின் விரும்பினி ராடிற் காண்டகு மரபின வல்ல மற்றவை மற்றவை நினையாது மலைமிசை நின்றோன் பொற்றா மரைத்தாள் உள்ளம் பொருந்துமின் உள்ளம் பொருந்துவி ராயின் மற்றவன் | 135 |
| புள்ளணி நீள்கொடி புணர்நிலை தோன்றும் தோன்றிய பின்னவன் துணைமலர்த் தாளிணை ஏன்றுதுயர் கெடுக்கும் இன்பம் எய்தி மாண்புடை மரபின் மதுரைக் கேகுமின் காண்டகு பிலத்தின் காட்சி யீதாங்கு | 140 |
| அந்நெறிப் படரீ ராயின் இடையது செந்நெறி யாகும் தேம்பொழி லுடுத்த ஊரிடை யிட்ட காடுபல கடந்தால் ஆரிடை யுண்டோர் ஆரஞர்த் தெய்வம் நடுக்கஞ் சாலா நயத்தின் தோன்றி | 145 |
| இடுக்கண் செய்யா தியங்குநர்த் தாங்கும் மடுத்துடன் கிடக்கும் மதுரைப் பெருவழி நீள்நிலங் கடந்த நெடுமுடி அண்ணல் தாள்தொழு தகையேன் போகுவல் யானென மாமறை யோன்வாய் வழித்திறம் கேட்ட | 150 |
| காவுந்தி யையையோர் கட்டுரை சொல்லும் நலம்புரி கொள்கை நான்மறை யாள பிலம்புக வேண்டும் பெற்றி ஈங்கில்லை கப்பத் திந்திரன் காட்டிய நூலின் மெய்ப்பாட் டியற்கையின் விளங்கக் காணாய் | 155 |
| இறந்த பிறப்பின் எய்திய வெல்லாம் பிறந்த பிறப்பிற் காணா யோநீ வாய்மையின் வழாது மன்னுயி ரோம்புநர்க்கு யாவது முண்டோ எய்தா அரும்பொருள் காமுறு தெய்வங் கண்டடி பணிய | 160 |
| நீபோ யாங்களும் நீள்நெறிப் படர்குதும் என்றம் மறையோற் கிசைமொழி யுணர்த்திக் குன்றாக் கொள்கைக் கோவலன் றன்னுடன் அன்றைப் பகலோர் அரும்பதித் தங்கிப் பின்றையும் அவ்வழிப் பெயர்ந்துசெல் வழிநாட் | 165 |
| கருந்தடங் கண்ணியும் கவுந்தி யடிகளும் வகுந்துசெல் வருத்தத்து வழிமருங் கிருப்ப இடைநெறிக் கிடந்த இயவுகொள் மருங்கின் புடைநெறிப் போயோர் பொய்கையிற் சென்று நீர்நசைஇ வேட்கையின் நெடுந்துறை நிற்பக் | 170 |
| கானுறை தெய்வம் காதலிற் சென்று நயந்த காதலின் நல்குவன் இவனென வயந்த மாலை வடிவில் தோன்றிக் கொடிநடுக் குற்றது போல ஆங்கவன் அடிமுதல் வீழ்ந்தாங் கருங்கணீர் உகுத்து | 175 |
| வாச மாலையின் எழுதிய மாற்றம் தீதிலேன் பிழைமொழி செப்பினை யாதலின் கோவலன் செய்தான் கொடுமையென் றென்முன் மாதவி மயங்கி வான்துய ருற்று மேலோ ராயினும் நூலோ ராயினும் | 180 |
| பால்வகை தெரிந்த பகுதியோ ராயினும் பிணியெனக் கொண்டு பிறக்கிட் டொழியும் கணிகையர் வாழ்க்கை கடையே போன்மெனச் செவ்வரி ஒழுகிய செழுங்கடை மழைக்கண் வெண்முத் துதிர்த்து வெண்ணிலாத் திகழும் | 185 |
| தண்முத் தொருகாழ் தன்கையாற் பரிந்து துனியுற் றென்னையுந் துறந்தன ளாதலின் மதுரை மூதூர் மாநகர்ப் போந்தது எதிர்வழிப் பட்டோர் எனக்காங் குரைப்பச் சாத்தொடு போந்து தனித்துயர் உழந்தேன் | 190 |
| பாத்தரும் பண்பநின் பணிமொழி யாதென மயக்குந் தெய்வமிவ் வன்காட் டுண்டென வியத்தகு மறையோன் விளம்பின னாதலின் வஞ்சம் பெயர்க்கும் மந்திரத் தால்இவ் ஐஞ்சி லோதியை அறிகுவன் யானெனக் | 195 |
| கோவலன் நாவிற் கூறிய மந்திரம் பாய்கலைப் பாவை மந்திர மாதலின் வனசா ரிணியான் மயக்கஞ் செய்தேன் புனமயிற் சாயற்கும் புண்ணிய முதல்விக்கும் என்திறம் உரையா தேகென் றேகத் | 200 |
| தாமரைப் பாசடைத் தண்ணீர் கொணர்ந் தாங்கு அயாவுறு மடந்தை அருந்துயர் தீர்த்து மீதுசெல் வெங்கதிர் வெம்மையின் தொடங்கத் தீதியல் கானஞ் செலவரி தென்று கோவலன் றன்னொடும் கொடுங்குழை மாதொடும் | 205 |
| மாதவத் தாட்டியும் மயங்கதர் அழுவத்துக் குரவமும் மரவமும் கோங்கமும் வேங்கையும் விரவிய பூம்பொழில் விளங்கிய இருக்கை ஆரிடை யத்தத் தியங்குந ரல்லது மாரி வளம்பெறா வில்லேர் உழவர் | 210 |
| கூற்றுறழ் முன்பொடு கொடுவில் ஏந்தி வேற்றுப்புலம் போகிநல் வெற்றங் கொடுத்துக் கழிபே ராண்மைக் கடன்பார்த் திருக்கும் விழிநுதற் குமரி விண்ணோர் பாவை மையறு சிறப்பின் வான நாடி | 215 |
| ஐயைதன் கோட்டம் அடைந்தனர் ஆங்கென். |
12. வேட்டுவ வரி
| கடுங்கதிர் திருகலின் நடுங்கஞர் எய்தி ஆறுசெல் வருத்தத்துச் சீறடி சிவப்ப நறும்பல் கூந்தல் குறும்பல உயிர்த் தாங்கு ஐயை கோட்டத் தெய்யா வொருசிறை வருந்துநோய் தணிய இருந்தனர் உப்பால் | 5 |
| வழங்குவில் தடக்கை மறக்குடித் தாயத்துப் பழங்கட னுற்ற முழங்குவாய்ச் சாலினி தெய்வ முற்று மெய்ம்மயிர் நிறுத்துக் கையெடுத் தோச்சிக் கானவர் வியப்ப இடுமுள் வேலி எயினர்கூட் டுண்ணும் | 10 |
| நடுவூர் மன்றத் தடிபெயர்த் தாடிக் கல்லென் பேரூர்க் கணநிரை சிறந்தன வல்வில் எயினர் மன்றுபாழ் பட்டன மறக்குடித் தாயத்து வழிவளஞ் சுரவாது அறக்குடி போலவிந் தடங்கினர் எயினரும் | 15 |
| கலையமர் செல்வி கடனுணின் அல்லது சிலையமர் வென்றி கொடுப்போ ளல்லள் மட்டுண் வாழ்க்கை வேண்டுதி ராயின் கட்டுண் மாக்கள் கடந்தரும் எனவாங்கு இட்டுத் தலையெண்ணும் எயின ரல்லது | 20 |
| சுட்டுத் தலைபோகாத் தொல்குடிக் குமரியைச் சிறுவெள் ளரவின் குருளைநாண் சுற்றிக் குறுநெறிக் கூந்தல் நெடுமுடி கட்டி இளைசூழ் படப்பை இழுக்கிய வேனத்து வளைவெண் கோடு பறித்து மற்றது | 25 |
| முளைவெண் திங்க ளென்னச் சாத்தி மறங்கொள் வயப்புலி வாய்பிளந்து பெற்ற மாலை வெண்பல் தாலிநிரை பூட்டி வரியும் புள்ளியு மயங்கு வான்புறத்து உரிவை மேகலை உடீஇப் பரிவொடு | 30 |
| கருவில் வாங்கிக் கையகத்துக் கொடுத்துத் திரிதரு கோட்டுக் கலைமே லேற்றிப் பாவையுங் கிளியுந் தூவி அஞ்சிறைக் கானக் கோழியும் நீனிற மஞ்ஞையும் பந்துங் கழங்குந் தந்தனர் பரசி | 35 |
| வண்ணமுஞ் சுண்ணமுந் தண்ணறுஞ் சாந்தமும் புழுக்கலும் நோலையும் விழுக்குடை மடையும் பூவும் புகையும் மேவிய விரையும் ஏவல் எயிற்றியர் ஏந்தினர் பின்வர ஆறெறி பறையுஞ் சூறைச் சின்னமும் | 40 |
| கோடும் குழலும் பீடுகெழு மணியும் கணங்கொண்டு துவைப்ப அணங்குமுன் னிறீஇ விலைப்பலி உண்ணும் மலர்பலி பீடிகைக் கலைப்பரி ஊர்தியைக் கைதொழு தேத்தி இணைமலர்ச் சீறடி இனைந்தனள் வருந்திக் | 45 |
| கணவனோ டிருந்த மணமலி கூந்தலை இவளோ, கொங்கச் செல்வி குடமலை யாட்டி தென்றமிழ்ப் பாவை செய்த தவக்கொழுந்து ஒருமா மணியாய் உலகிற் கோங்கிய திருமா மணியெனத் தெய்வமுற் றுரைப்பப் | 50 |
| பேதுறவு மொழிந்தனள் மூதறி வாட்டியென்று அரும்பெறற் கணவன் பெரும்புறத் தொடுங்கி விருந்தின் மூரல் அரும்பினள் நிற்ப மதியின் வெண்தோடு சூடுஞ் சென்னி நுதல்கிழித்து விழித்த இமையா நாட்டத்துப் | 55 |
| பவள வாய்ச்சி தவளவாள் நகைச்சி நஞ்சுண்டு கறுத்த கண்டி வெஞ்சினத்து அரவுநாண் பூட்டி நெடுமலை வளைத்தோள் துளையெயிற் றுரகக் கச்சுடை முலைச்சி வளையுடைக் கையிற் சூல மேந்தி | 60 |
| கரியின் உரிவை போர்த் தணங் காகிய அரியின் உரிவை மேகலை யாட்டி சிலம்புங் கழலும் புலம்புஞ் சீறடி வலம்படு கொற்றத்து வாய்வாட் கொற்றவை இரண்டுவே றுருவில் திரண்டதோள் அவுணன் | 65 |
| தலைமிசை நின்ற தையல் பலர்தொழும் அமரி குமரி கவுரி சமரி சூலி நீலி மாலவற் கிளங்கிளை ஐயை செய்யவள் வெய்யவாள் தடக்கைப் பாய்கலைப் பாவை பைந்தொடிப் பாவை | 70 |
| ஆய்கலைப் பாவை அருங்கலப் பாவை தமர்தொழ வந்த குமரிக் கோலத்து அமரிளங் குமரியும் அருளினள் வரியுறு செய்கை வாய்ந்ததா லெனவே; உரைப்பாட்டுமடை. |
| நாகம் நாறு நரந்தம் நிரந்தன | 1 |
| ஆவும் ஆரமும் ஓங்கின எங்கணும் சேவும் மாவும் செறிந்தன கண்ணுதல் பாகம் ஆளுடை யாள்பலி முன்றிலே; செம்பொன் வேங்கை சொரிந்தன சேயிதழ் | 2 |
| கொம்பர் நல்லில வங்கள் குவிந்தன பொங்கர் வெண்பொரி சிந்தின புன்கிளந் திங்கள் வாழ்சடை யாள்திரு முன்றிலே; மரவம் பாதிரி புன்னை மணங்கமழ் | 3 |
| குரவம் கோங்கம் மலர்ந்தன கொம்பர்மேல் அரவ வண்டினம் ஆர்த்துடன் யாழ்செய்யும் திருவ மாற்கிளை யாள்திரு முன்றிலே; வேறு கொற்றவை கொண்ட அணிகொண்டு நின்றவிப் | 4 |
| பொற்றொடி மாதர் தவமென்னை கொல்லோ பொற்றொடி மாதர் பிறந்த குடிப்பிறந்த விற்றொழில் வேடர் குலனே குலனும்; ஐயை திருவின் அணிகொண்டு நின்றவிப் | 5 |
| பையர வல்குல் தவமென்னை கொல்லோ பையர வல்குல் பிறந்த குடிப்பிறந்த எய்வில் எயினர் குலனே குலனும்; பாய்கலைப் பாவை அணிகொண்டு நின்றவிவ் | 6 |
| ஆய்தொடி நல்லாள் தவமென்னை கொல்லோ ஆய்தொடி நல்லாள் பிறந்த குடிப்பிறந்த வேய்வில் எயினர் குலனே குலனும்; வேறு ஆனைத்தோல் போர்த்துப் புலியின் உரியுடுத்துக் | 7 |
| கானத் தெருமைக் கருந்தலைமேல் நின்றாயால் வானோர் வணங்க மறைமேல் மறையாகி ஞானக் கொழுந்தாய் நடுக்கின்றி யேநிற்பாய்; வரிவளைக்கை வாளேந்தி மாமயிடற் செற்றுக் | 8 |
| கரியதிரி கோட்டுக் கலைமிசைமேல் நின்றாயால் அரியரன்பூ மேலோன் அகமலர்மேல் மன்னும் விரிகதிரஞ் சோதி விளக்காகி யேநிற்பாய்; சங்கமும் சக்கரமும் தாமரைக் கையேந்திச் | 9 |
| செங்கண் அரிமால் சினவிடைமேல் நின்றாயால் கங்கை முடிக்கணிந்த கண்ணுதலோன் பாகத்து மங்கை உருவாய் மறையேத்த வேநிற்பாய்; வேறு ஆங்குக், | 10 |
| கொன்றையுந் துளவமும் குழுமத் தொடுத்த துன்று மலர்ப்பிணையல் தோள்மே லிட்டாங்கு அசுரர் வாட அமரர்க் காடிய குமரிக் கோலத்துக் கூத்துள் படுமே; வேறு ஆய்பொன் னரிச்சிலம்பும் சூடகமும் மேகலையும் ஆர்ப்ப வார்ப்ப | 11 |
| மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடும் போலும் மாயஞ்செய் வாளவுணர் வீழநங்கை மரக்கான்மேல் வாளமலை யாடுமாயின் காயாமலர்மேனி யேத்திவானோர் கைபெய் மலர்மாரி காட்டும் போலும்; உட்குடைச் சீறூ ரொருமகன்ஆ னிரைகொள்ள உற்ற காலை | 12 |
| வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டும் போலும் வெட்சி மலர்புனைய வெள்வா ளுழத்தியும் வேண்டின் வேற்றூர்க் கட்சியுட் காரி கடிய குரலிசைத்துக் காட்டும் போலும்; கள்விலை யாட்டி மறுப்பப் பொறாமறவன் கைவில் ஏந்திப் | 13 |
| புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரைகருதிப் போகும் போலும் புள்ளும் வழிப்படரப் புல்லார் நிரை கருதிப் போகுங் காலைக் கொள்ளும் கொடியெடுத்துக் கொற்றவையும் கொடுமரமுன் செல்லும் போலும் வேறு இளமா எயிற்றி இவைகாண் நின் னையர் | 14 |
| தலைநாளை வேட்டத்துத் தந்தநல் ஆனிரைகள் கொல்லன் துடியன் கொளைபுணர் சீர்வல்ல நல்லியாழ்ப் பாணர்தம் முன்றில் நிறைந்தன; முருந்தேர் இளநகை காணாய்நின் னையர் | 15 |
| கரந்தை யலறக் கவர்ந்த இனநிரைகள் கள்விலை யாட்டிநல் வேய்தெரி கானவன் புள்வாய்ப்புச் சொன்னகணி முன்றில் நிறைந்தன; கயமல ருண்கண்ணாய் காணாய்நின் னையர் | 16 |
| அயலூர் அலற எறிந்தநல் ஆனிரைகள் நயனில் மொழியின் நரைமுது தாடி எயினர் எயிற்றியர் முன்றில் நிறைந்தன; துறைப்பாட்டுமடை. வேறு சுடரொடு திரிதரு முனிவரும் அமரரும் | 17 |
| இடர்கெட அருளும்நின் இணையடி தொழுதேம் அடல்வலி எயினர்நின் அடிதொடு கடனிது மிடறுகு குருதிகொள் விறல்தரு விலையே; அணிமுடி அமரர்தம் அரசொடு பணிதரு | 18 |
| மணியுரு வினைநின மலரடி தொழுதேம் கணநிறை பெறுவிறல் எயினிடு கடனிது நிணனுகு குருதிகொள் நிகரடு விலையே; துடியொடு சிறுபறை வயிரொடு துவைசெய | 19 |
| வெடிபட வருபவர் எயினர்கள் அரையிருள் அடுபுலி யனையவர் குமரிநின் அடிதொடு படுகடன் இதுவுகு பலிமுக மடையே; வேறு வம்பலர் பல்கி வழியும் வளம்பட | 20 |
| அம்புடை வல்வில் எயின்கடன் உண்குவாய் சங்கரி அந்தரி நீலி சடாமுடிச் செங்கண் அரவு பிறையுடன் சேர்த்துவாய்; துண்ணென் துடியொடு துஞ்சூர் எறிதரு | 21 |
| கண்ணில் எயினர் இடுகடன் உண்குவாய் விண்ணோர் அமுதுண்டுஞ் சாவ ஒருவரும் உண்ணாத நஞ்சுண் டிருந்தருள் செய்குவாய்; பொருள்கொண்டு புண்செயி னல்லதை யார்க்கும் | 22 |
| அருளில் எயினர் இடுகடன் உண்குவாய் மருதின் நடந்துநின் மாமன்செய் வஞ்ச உருளுஞ் சகடம் உதைத்தருள் செய்குவாய்; வேறு மறைமுது முதல்வன் பின்னர் மேய | 23 |
| பொறையுயர் பொதியிற் பொருப்பன் பிறர்நாட்டுக் கட்சியும் கரந்தையும் பாழ்பட வெட்சி சூடுக விறல்வெய் யோனே. |
13. புறஞ்சேரியிறுத்த காதை
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.| பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக் கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள் படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக் கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா | 5 |
| வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும் உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா செங்கோல் தென்னவர் காக்கும் நாடென எங்கணும் போகிய இசையோ பெரிதே | 10 |
| பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும் நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின் இரவிடைக் கழிதற் கேத மில்லெனக் குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப் | 15 |
| படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப் பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித் தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித் தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும் சீரிள வனமுலை சேரா தொழியவும் | 20 |
| தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல் போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும் பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி செந்தளிர் மேனி சேரா தொழியவும் மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து | 25 |
| புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய வேனில் திங்களும் வேண்டுதி யென்றே பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர் ஆரிடை உழந்த மாதரை நோக்கிக் | 30 |
| கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும் இடிதரும் உளியமும் இனையா தேகெனத் தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி மறவுரை நீத்த மாசறு கேள்வி அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து | 35 |
| வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக் கான வாரணங் கதிர்வர வியம்ப வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப் புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர் | 40 |
| தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர் நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன் காதலி தன்னொடு கானகம் போந்ததற் கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி | 45 |
| உட்புலம் புறுதலின் உருவந் திரியக் கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான் கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ் அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே | 50 |
| வருந்தினை போலுநீ மாதவி யென்றோர் பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி கோசிக மாணி கூறக் கேட்டே யாதுநீ கூறிய உரையீ திங்கெனத் தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக் | 55 |
| கோசிக மாணி கொள்கையின் உரைப்போன் இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும் அருமணி இழந்த நாகம் போன்றதும் இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத் துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும் | 60 |
| ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும் பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும் அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப் | 65 |
| பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும் வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப் பசந்த மேனியள் படர்நோ யுற்று நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர் படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும் | 70 |
| வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத் தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும் இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன் வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக் கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே | 75 |
| மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும் ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும் வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி | 80 |
| போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட உடனுறை காலத் துரைத்தநெய் வாசம் குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக் காட்டிய தாதலிற் கைவிட லீயான் | 85 |
| ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன் அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன் வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும் குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது | 90 |
| கையறு நெஞ்சம் கடியல் வேண்டும் பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங் | 95 |
| கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல் பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது மாசில் குரவர் மலரடி தொழுதேன் கோசிக மாணி காட்டெனக் கொடுத்து நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய | 100 |
| இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி மாசில் கற்பின் மனைவியோ டிருந்த ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு ஆடியல் கொள்கை அந்தரி கோலம் பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து | 105 |
| செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில் தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி வரன்முறை வந்த மூவகைத் தானத்து | 110 |
| பாய்கலைப் பாவை பாடற் பாணி ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப் பாடற் பாணி அளைஇ அவரொடு கூடற் காவதம் கூறுமின் நீரெனக் காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம் | 115 |
| நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத் தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத் தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப் | 120 |
| போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி அட்டிற் புகையும் அகலங் காடி முட்டாக் கூவியர் மோதகப் புகையும் மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும் | 125 |
| பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர் விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின் அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும் கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப் புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின் | 130 |
| பொதியில் தென்றல் போலா தீங்கு மதுரைத் தென்றல் வந்தது காணீர் நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர் தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு | 135 |
| பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும் பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும் பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த காலை முரசக் கனைகுரல் ஓதையும் | 140 |
| நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும் மாதவ ரோதி மலிந்த ஓதையும் மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு வாளோர் எடுத்த நாளணி முழவமும் போரிற் கொண்ட பொருகரி முழக்கமும் | 145 |
| வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும் பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும் கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும் கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல் ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக் | 150 |
| குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும் மரவமும் நாகமும் திலகமும் மருதமும் சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும் பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும் | 155 |
| விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும் குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும் பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும் மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல் | 160 |
| வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய் அருவி முல்லை அணிநகை யாட்டி | 165 |
| விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண் விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல் உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப் புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி வையை என்ற பொய்யாக் குலக்கொடி | 170 |
| தையற் குறுவது தானறிந் தனள்போல் புண்ணிய நறுமல ராடை போர்த்துக் கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப் புனல்யா றன்றிது பூம்புனல் யாறென அனநடை மாதரும் ஐயனுந் தொழுது | 175 |
| பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும் அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும் பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண் மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித் தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி | 180 |
| வானவர் உறையும் மதுரை வலங்கொளத் தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக் கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும் தையலும் கணவனும் தனித்துறு துயரம் | 185 |
| ஐய மின்றி அறிந்தன போலப் பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக் கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப் போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப் | 190 |
| புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும் காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும் வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப் | 195 |
14. ஊர்காண் காதை
| புறஞ்சிறைப் பொழிலும் பிறங்குநீர்ப் பண்ணையும் இறங்குகதிர்க் கழனியும் புள்ளெழுந் தார்ப்பப் புலரி வைகறைப் பொய்கைத் தாமரை மலர்பொதி அவிழ்த்த உலகுதொழு மண்டிலம் வேந்துதலை பனிப்ப ஏந்துவாட் செழியன் | 5 |
| ஒங்குயர் கூடல் ஊர்துயி லெடுப்ப நுதல்விழி நாட்டத் திறையோன் கோயிலும் உவணச் சேவ லுயர்த்தோன் நியமமும் மேழிவல னுயர்த்த வெள்ளை நகரமும் கோழிச் சேவற் கொடியோன் கோட்டமும் | 10 |
| அறத்துறை விளங்கிய அறவோர் பள்ளியும் மறத்துறை விளங்கிய மன்னவன் கோயிலும் வால்வெண் சங்கொடு வகைபெற் றோங்கிய காலை முரசங் கனைகுரல் இயம்பக் கோவலன் சென்று கொள்கையி னிருந்த | 15 |
| காவுந்தி ஐயையைக் கைதொழு தேத்தி நெறியின் நீங்கியோர் நீர்மையே னாகி நறுமலர் மேனி நடுங்குதுய ரெய்த அறியாத் தேயத் தாரிடை யுழந்து சிறுமை யுற்றேன் செய்தவத் தீர்யான் | 20 |
| தொன்னகர் மருங்கின் மன்னர் பின்னோர்க்கு என்னிலை யுணர்த்தி யான்வருங் காறும் பாதக் காப்பினள் பைந்தொடி யாகலின் ஏத முண்டோ அடிக ளீங் கென்றலும் கவுந்தி கூறுங் காதலி தன்னொடு | 25 |
| தவந்தீர் மருங்கின் தனித்துயர் உழந்தோய் மறத்துறை நீங்குமின் வல்வினை யூட்டுமென் றறந்துறை மாக்கள் திறத்திற் சாற்றி நாக்கடிப் பாக வாய்ப்பறை யறையினும் யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார் | 30 |
| தீதுடை வெவ்வினை யுருத்த காலைப் பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர் ஒய்யா வினைப்பயன் உண்ணுங் காலைக் கையாறு கொள்ளார் கற்றறி மாக்கள் பிரிதல் துன்பமும் புணர்தல் துன்பமும் | 35 |
| உருவி லாளன் ஒறுக்குந் துன்பமும் புரிகுழல் மாதர்ப் புணந்தோர்க் கல்லது ஒருதனி வாழ்க்கை உரவோர்க் கில்லை பெண்டிரும் உண்டியும் இன்ப மென்றுலகிற் கொண்டோ ருறூஉங் கொள்ளாத் துன்பம் | 40 |
| கண்டன ராகிக் கடவுளர் வரைந்த காமஞ் சார்பாக் காதலின் உழந்தாங்கு ஏமஞ் சாரா இடும்பை எய்தினர் இன்றே யல்லால் இறந்தோர் பலரால் தொன்று படவரூஉந் தொன்மைத் தாதலின் | 45 |
| தாதை ஏவலின் மாதுடன் போகிக் காதலி நீங்கக் கடுந்துய ருழந்தோன் வேத முதல்வற் பயந்தோ னென்பது நீயறிந் திலையோ நெடுமொழி யன்றோ வல்லா டாயத்து மண்ணர சிழந்து | 50 |
| மெல்லியல் தன்னுடன் வெங்கா னடைந்தோன் காதலிற் பிரிந்தோ னல்லன் காதலி தீதொடு படூஉஞ் சிறுமைய ளல்லள் அடவிக் கானகத் தாயிழை தன்னை இடையிருள் யாமத் திட்டு நீக்கியது | 55 |
| வல்வினை யன்றோ மடந்தைதன் பிழையெனச் சொல்லலும் உண்டேற் சொல்லா யோநீ அனையையும் அல்லை ஆயிழை தன்னொடு பிரியா வாழ்க்கை பெற்றனை யன்றே வருந்தா தேகி மன்னவன் கூடல் | 60 |
| பொருந்துழி யறிந்து போதீங் கென்றலும் இளைசூழ் மிளையொடு வளைவுடன் கிடந்த இலங்குநீர்ப் பரப்பின் வலம்புண ரகழியில் பெருங்கை யானை இனநிரை பெயரும் சுருங்கை வீதி மருங்கிற் போகிக் | 65 |
| கடிமதில் வாயில் காவலிற் சிறந்த அடல்வாள் யவனர்க் கயிராது புக்காங்கு ஆயிரங் கண்ணோன் அருங்கலச் செப்பு வாய்திறந் தன்ன மதிலக வரைப்பில் குடகாற் றெறிந்து கொடுநுடங்கு மறுகின் | 70 |
| கடைகழி மகளிர் காதலஞ் செல்வரொடு வருபுனல் வையை மருதோங்கு முன்றுறை விரிபூந் துருத்தி வெண்மண லடைகரை ஓங்குநீர் மாடமொடு நாவா யியக்கிப் பூம்புணை தழீஇப் புனலாட் டமர்ந்து | 75 |
| தண்ணறு முல்லையுந் தாழ்நீர்க் குவளையும் கண்ணவிழ் நெய்தலுங் கதுப்புற அடைச்சி வெண்பூ மல்லிகை விரியலொடு தொடர்ந்த தண்செங் கழுநீர்த் தாதுவிரி பிணையல் கொற்கையம் பெருந்துறை முத்தொடு பூண்டு | 80 |
| தெக்கண மலயச் செழுஞ்சே றாடிப் பொற்கொடி மூதூர்ப் பொழிலாட் டமர்ந்தாங்கு எற்படு பொழுதின் இளநிலா முன்றில் தாழ்தரு கோலந் தகை பாராட்ட வீழ்பூஞ் சேக்கை மேலினி திருந்தாங்கு | 85 |
| அரத்தப் பூம்பட் டரைமிசை யுடீஇக் குரற்றலைக் கூந்தற் குடசம் பொருந்திச் சிறுமலைச் சிலம்பின் செங்கூ தாளமொடு நறுமலர்க் குறிஞ்சி நாண்மலர் வேய்ந்து குங்கும வருணங் கொங்கையி னிழைத்துச் | 90 |
| செங்கொடு வேரிச் செழும்பூம் பிணையல் சிந்துரச் சுண்ணஞ் சேர்ந்த மேனியில் அந்துகிர்க் கோவை அணியொடு பூண்டு மலைச்சிற கரிந்த வச்சிர வேந்தற்குக் கலிகெழு கூடற் செவ்வணி காட்டக் | 95 |
| காரர சாளன் வாடையொடு வரூஉம் கால மன்றியும் நூலோர் சிறப்பின் முகில்தோய் மாடத் தகில்தரு விறகின் மடவரல் மகளிர் தடவுநெருப் பமர்ந்து நறுஞ்சாந் தகலத்து நம்பியர் தம்மொடு | 100 |
| குறுங்கண் அடைக்கும் கூதிர்க் காலையும் வளமனை மகளிரும் மைந்தரும் விரும்பி இளநிலா முன்றிலின் இளவெயில் நுகர விரிகதிர் மண்டிலந் தெற்கேர்பு வெண்மழை அரிதில் தோன்றும் அச்சிரக் காலையும் | 105 |
| ஆங்க தன்றியும் ஓங்கிரும் பரப்பின் வங்க ஈட்டத்துத் தொண்டியோ ரிட்ட அகிலும் துகிலும் ஆரமும் வாசமும் தொகுகருப் பூரமுஞ் சுமந்துடன் வந்த கொண்டலொடு புகுந்து கோமகன் கூடல் | 110 |
| வெங்கண் நெடுவேள் வில்விழாக் காணும் பங்குனி முயக்கத்துப் பனியர சியாண்டுளன் கோதை மாதவி கொழுங்கொடி யெடுப்பக் காவும் கானமும் கடிமல ரேந்தத் தென்னவன் பொதியில் தென்றலொடு புகுந்து | 115 |
| மன்னவன் கூடல் மகிழ்துணை தழூஉம் இன்னிள வேனில் யாண்டுளன் கொல்லென்று உருவக் கொடியோ ருடைப்பெருங் கொழுநரொடு பருவ மெண்ணும் படர்தீர் காலைக் கன்றம ராயமொடு களிற்றினம் நடுங்க | 120 |
| என்றூழ் நின்ற குன்றுகெழு நன்னாட்டுக் காடுதீப் பிறப்பக் கனையெரி பொத்திக் கோடையொடு புகுந்து கூட லாண்ட வேனில் வேந்தன் வேற்றுப்புலம் படர ஓசனிக் கின்ற உறுவெயிற் கடைநாள் | 125 |
| வையமுஞ் சிவிகையும் மணிக்கால் அமளியும் உய்யா னத்தின் உறுதுணை மகிழ்ச்சியும் சாமரைக் கவரியுந் தமனிய அடைப்பையும் கூர்நுனை வாளுங் கோமகன் கொடுப்பப் பெற்ற செல்வம் பிறழா வாழ்க்கைப் | 130 |
| பொற்றொடி மடந்தையர் புதுமணம் புணர்ந்து செம்பொன் வள்ளத்துச் சிலதிய ரேந்திய அந்தீந் தேறல் மாந்தினர் மயங்கிப் பொறிவரி வண்டினம் புல்லுவழி அன்றியும் நறுமலர் மாலையின் வறிதிடங் கடிந்தாங்கு | 135 |
| இலவிதழ்ச் செவ்வாய் இளமுத் தரும்பப் புலவிக் காலத்துப் போற்றா துரைத்த காவியங் கண்ணார் கட்டுரை எட்டுக்கும் நாவொடு நவிலா நகைபடு கிளவியும் அஞ்செங் கழுநீர் அரும்பவிழ்த் தன்ன | 140 |
| செங்கயல் நெடுங்கட் செழுங்கடைப் பூசலும் கொலைவிற் புருவத்துக் கொழுங்கடை சுருளத் திலகச் சிறுநுதல் அரும்பிய வியரும் செவ்வி பார்க்குஞ் செழுங்குடிச் செல்வரொடு வையங் காவலர் மகிழ்தரும் வீதியும் | 145 |
| சுடுமண் ஏறா வடுநீங்கு சிறப்பின் முடியர சொடுங்குங் கடிமனை வாழ்க்கை வேத்தியல் பொதுவியல் எனவிரு திறத்து மாத்திரை யறிந்து மயங்கா மரபின் ஆடலும் வரியும் பாணியுந் தூக்கும் | 150 |
| கூடிய குயிலுவக் கருவியும் உணர்ந்து நால்வகை மரபின் அவினயக் களத்தினும் ஏழ்வகை நிலத்தினும் எய்திய விரிக்கும் மலைப்பருஞ் சிறப்பின் தலைக்கோ லரிவையும் வாரம் பாடுந் தோரிய மடந்தையும் | 155 |
| தலைப்பாட்டுக் கூத்தியும் இடைப்பட்டுக் கூத்தியும் நால்வேறு வகையின் நயத்தகு மரபின் எட்டுக் கடைநிறுத்த ஆயிரத் தெண்கழஞ்சு முட்டா வைகல் முறைமையின் வழாஅத் தாக்கணங் கனையார் நோக்குவலைப் பட்டாங்கு | 160 |
| அரும்பெறல் அறிவும் பெரும்பிறி தாகத் தவத்தோ ராயினுந் தகைமலர் வண்டின் நகைப்பதம் பார்க்கும் இளையோ ராயினும் காம விருந்தின் மடவோ ராயினும் ஏம வைகல் இன்றுயில் வதியும் | 165 |
| பண்ணுங் கிளையும் பழித்த தீஞ்சொல் எண்ணெண் கலையோர் இருபெரு வீதியும் வையமும் பாண்டிலும் மணித்தேர்க் கொடுஞ்சியும் மெய்புகு கவசமும் வீழ்மணித் தோட்டியும் அதள்புனை அரணமும் அரியா யோகமும் | 170 |
| வளைதரு குழியமும் வால்வெண் கவரியும் ஏனப் படமும் கிடுகின் படமும் கானப் படமும் காழூன்று கடிகையும் செம்பிற் செய்நவும் கஞ்சத் தொழிலவும் வம்பின் முடிநவும் மாலையிற் புனைநவும் | 175 |
| வேதினத் துப்பவும் கோடுகடை தொழிலவும் புகையவும் சாந்தவும் பூவிற் புனைநவும் வகைதெரி வறியா வளந்தலை மயங்கிய அரசுவிழை திருவின் அங்காடி வீதியும் காக பாதமும் களங்கமும் விந்துவும் | 180 |
| ஏகையும் நீங்கி இயல்பிற் குன்றா நூலவர் நொடிந்த நுழைநுண் கோடி நால்வகை வருணத்து நலங்கேழ் ஒளியவும் ஏகையும் மாலையும் இருளொடு துறந்த பாசார் மேனிப் பசுங்கதிர் ஒளியவும் | 185 |
| பதுமமும் நீலமும் விந்தமும் படிதமும் விதிமுறை பிழையா விளங்கிய சாதியும் பூச உருவின் பொலந்தௌித் தனையவும் தீதறு கதிரொளித் தெண்மட் டுருவவும் இருள்தௌித் தனையவும் இருவே றுருவவும் | 190 |
| ஒருமைத் தோற்றத் தைவேறு வனப்பின் இலங்குகதிர் விடூஉம் நலங்கெழு மணிகளும் காற்றினும் மண்ணினும் கல்லினும் நீரினும் தோற்றிய குற்றந் துகளறத் துணிந்தவும் சந்திர குருவே அங்காரக னென | 195 |
| வந்த நீர்மைய வட்டத் தொகுதியும் கருப்பத் துளையவும் கல்லிடை முடங்கலும் திருக்கு நீங்கிய செங்கொடி வல்லியும் வகைதெரி மாக்கள் தொகைபெற் றோங்கிப் பகைதெறல் அறியாப் பயங்கெழு வீதியும் | 200 |
| சாத ரூபம் கிளிச்சிறை ஆடகம் சாம்பூ நதமென ஓங்கிய கொள்கையின் பொலந்தெரி மாக்கள் கலங்கஞ ரொழித்தாங்கு இலங்குகொடி யெடுக்கும் நலங்கிளர் வீதியும் நூலினும் மயிரினும் நுழைநூற் பட்டினும் | 205 |
| பால்வகை தெரியாப் பன்னூ றடுக்கத்து நறுமடி செறிந்த அறுவை வீதியும் நிறைக்கோல் துலாத்தர் பறைக்கட் பராரையர் அம்பண வளவையர் எங்கணுந் திரிதரக் கால மன்றியும் கருங்கறி மூடையொடு | 210 |
| கூலங் குவித்த கூல வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் அந்தியும் சதுக்கமும் ஆவண வீதியும் மன்றமும் கவலையும் மறுகும் திரிந்து விசும்பகடு திருகிய வெங்கதிர் நுழையாப் | 215 |
| பசுங்கொடிப் படாகைப் பந்தர் நீழல் காவலன் பேரூர் கண்டுமகிழ் வெய்திக் கோவலன் பெயர்ந்தனன் கொடிமதிற் புறத்தென். |
15. அடைக்கலக் காதை
| நிலந்தரு திருவின் நிழல்வாய் நேமி கடம்பூண் டுருட்டும் கௌரியர் பெருஞ்சீர்க் கோலின் செம்மையும் குடையின் தண்மையும் வேலின் கொற்றமும் விளங்கிய கொள்கைப் பதியெழு வறியாப் பண்புமேம் பட்ட | 5 |
| மதுரை மூதூர் மாநகர் கண்டாங்கு அறந்தரு நெஞ்சின் அறவோர் பல்கிய புறஞ்சிறை மூதூர்ப் பொழிலிடம் புகுந்து தீதுதீர் மதுரையும் தென்னவன் கொற்றமும் மாதவத் தாட்டிக்குக் கோவலன் கூறுழித் | 10 |
| தாழ்நீர் வேலித் தலைச் செங்கானத்து நான்மறை முற்றிய நலம்புரி கொள்கை மாமறை முதல்வன் மாடலன் என்போன் மாதவ முனிவன் மலைவலங் கொண்டு குமரியம் பெருந்துறை கொள்கையிற் படிந்து | 15 |
| தமர்முதற் பெயர்வோன் தாழ்பொழி லாங்கண் வகுந்துசெல் வருத்தத்து வான்றுயர் நீங்கக் கவுந்தி இடவயிற் புகுந்தோன் தன்னைக் கோவலன் சென்று சேவடி வணங்க நாவ லந்தணன் தானவின் றுரைப்போன் | 20 |
| வேந்துறு சிறப்பின் விழுச்சீ ரெய்திய மாந்தளிர் மேனி மாதவி மடந்தை பால்வாய்க் குழவி பயந்தன ளெடுத்து வாலா மைந்நாள் நீங்கிய பின்னர் மாமுது கணிகையர் மாதவி மகட்கு | 25 |
| நாம நல்லுரை நாட்டுது மென்று தாமின் புறூஉந் தகைமொழி கேட் டாங்கு இடையிருள் யாமத் தெறிதிரைப் பெருங்கடல் உடைகலப் பட்ட எங்கோன் முன்னாள் புண்ணிய தானம் புரிந்தோ னாகலின் | 30 |
| நண்ணுவழி இன்றி நாள்சில நீந்த இந்திரன் ஏவலின் ஈங்கு வாழ்வேன் வந்தேன் அஞ்சல் மணிமே கலையான் உன்பெருந் தானத் துறுதி யொழியாது துன்ப நீங்கித் துயர்க்கட லொழிகென | 35 |
| விஞ்சையிற் பெயர்த்து விழுமந் தீர்த்த எங்குல தெய்வப் பெயரீங் கிடுகென அணிமே கலையார் ஆயிரங் கணிகையர் மணிமே கலையென வாழ்த்திய ஞான்று மங்கல மடந்தை மாதவி தன்னொடு | 40 |
| செம்பொன் மாரி செங்கையிற் பொழிய ஞான நன்னெறி நல்வரம் பாயோன் தானங் கொள்ளுந் தகைமையின் வருவோன் தளர்ந்த நடையில் தண்டுகா லூன்றி வளைந்த யாக்கை மறையோன் றன்னைப் | 45 |
| பாகுகழிந் தியாங்கணும் பறைபட வரூஉம் வேக யானை வெம்மையிற் கைக்கொள ஓய்யெனத் தெழித்தாங் குயர்பிறப் பாளனைக் கையகத் தொழித்ததன் கையகம் புக்குப் பொய்பொரு முடங்குகை வெண்கோட் டடங்கி | 50 |
| மையிருங் குன்றின் விஞ்சையன் ஏய்ப்பப் பிடர்த்தலை இருந்து பெருஞ்சினம் பிறழாக் கடக்களி றடக்கிய கருணை மறவ பிள்ளை நகுலம் பெரும்பிறி தாக எள்ளிய மனையோள் இனைந்துபின் செல்ல | 55 |
| வடதிசைப் பெயரும் மாமறை யாளன் கடவ தன்றுநின் கைத்தூண் வாழ்க்கை வடமொழி வாசகஞ் செய்த நல்லேடு கடனறி மாந்தர் கைந்நீ கொடுக் கெனப் பீடிகைத் தெருவிற் பெருங்குடி வாணிகர் | 60 |
| மாட மறுகின் மனைதொறு மறுகிக் கருமக் கழிபலங் கொண்மி னோவெனும் அருமறை யாட்டியை அணுகக் கூஉய் யாதுநீ யுற்ற இடர்ஈ தென்னென மாதர்தா னுற்ற வான்துயர் செப்பி | 65 |
| இப்பொரு ளெழுதிய இதழிது வாங்கிக் கைப்பொருள் தந்தென் கடுந்துயர் களைகென அஞ்சல் உன்றன் அருந்துயர் களைகேன் நெஞ்சுறு துயரம் நீங்குக என்றாங்கு ஓத்துடை அந்தணர் உரைநூற் கிடக்கையில் | 70 |
| தீத்திறம் புரிந்தோள் செய்துயர் நீங்கத் தானஞ் செய் தவள் தன்றுயர் நீக்கிக் கானம் போன கணவனைக் கூட்டி ஒல்காச் செல்வத் துறுபொருள் கொடுத்து நல்வழிப் படுத்த செல்லாச் செல்வ | 75 |
| பத்தினி யொருத்தி படிற்றுரை எய்த மற்றவள் கணவற்கு வறியோன் ஒருவன் அறியாக் கரிபொய்த் தறைந்துணும் பூதத்துக் கறைகெழு பாசத்துக் கையகப் படலும் பட்டோன் றவ்வை படுதுயர் கண்டு | 80 |
| கட்டிய பாசத்துக் கடிதுசென் றெய்தி என்னுயிர் கொண்டீங் கிவனுயிர் தாவென நன்னெடும் பூதம் நல்கா தாகி நரக னுயிர்க்கு நல்லுயிர் கொண்டு பரகதி யிழக்கும் பண்பீங் கில்லை | 85 |
| ஒழிக நின் கருத்தென உயிர்முன் புடைப்ப அழிதரு முள்ளத் தவளொடும் போந்தவன் சுற்றத் தோர்க்கும் தொடர்புறு கிளைகட்கும் பற்றிய கிளைஞரின் பசிப்பிணி யறுத்துப் பல்லாண்டு புரந்த இல்லோர் செம்மல் | 90 |
| இம்மைச் செய்தன யானறி நல்வினை உம்மைப் பயன்கொல் ஒருதனி யுழந்தித் திருத்தகு மாமணிக் கொழுந்துடன் போந்தது விருத்தகோ பால நீயென வினவக் கோவலன் கூறுமோர் குறுமகன் தன்னால் | 95 |
| காவல் வேந்தன் கடிநகர் தன்னில் நாறைங் கூந்தல் நடுங்குதுய ரெய்தக் கூறைகோட் பட்டுக் கோட்டுமா ஊரவும் அணித்தகு புரிகுழ லாயிழை தன்னொடும் பிணிப்பறுத் தோர்தம் பெற்றி யெய்தவும் | 100 |
| மாமலர் வாளி வறுநிலத் தெறிந்து காமக் கடவுள் கையற் றேங்க அணிதிகழ் போதி அறவோன் றன்முன் மணிமேகலையை மாதவி யளிப்பவும் நனவுபோல நள்ளிருள் யாமத்துக் | 105 |
| கனவு கண்டேன் கடிதீங் குறுமென அறத்துறை மாக்கட் கல்ல திந்தப் புறச்சிறை யிருக்கை பொருந்தா தாகலின் அரைசர் பின்னோர் அகநகர் மருங்கினின் உரையிற் கொள்வரிங் கொழிகநின் இருப்புக் | 110 |
| காதலி தன்னொடு கதிர்செல் வதன்முன் மாட மதுரை மாநகர் புகுகென மாதவத் தாட்டியும் மாமறை முதல்வனும் கோவலன் றனக்குக் கூறுங் காலை அறம்புரி நெஞ்சின் அறவோர் பல்கிய | 115 |
| புறஞ்சிறை மூதூர்ப் பூங்கண் இயக்கிக்குப் பான்மடை கொடுத்துப் பண்பிற் பெயர்வோள் ஆயர் முதுமகள் மாதரி என்போள் காவுந்தி ஐயையைக் கண்டடி தொழலும் ஆகாத் தோம்பி ஆப்பயன் அளிக்கும் | 120 |
| கோவலர் வாழ்க்கையோர் கொடும்பா டில்லை தீதிலள் முதுமகள் செவ்வியள் அளியள் மாதரி தன்னுடன் மடந்தையை இருத்துதற்கு ஏதம் இன்றென எண்ணின ளாகி மாதரி கேளிம் மடந்தைதன் கணவன் | 125 |
| தாதையைக் கேட்கில் தன்குல வாணர் அரும்பொருள் பெறுநரின் விருந்தெதிர் கொண்டு கருந்தடங் கண்ணியொடு கடிமனைப் படுத்துவர் உடைப்பெருஞ் செல்வர் மனைப்புகு மளவும் இடைக்குல மடந்தைக் கடைக்கலந் தந்தேன் | 130 |
| மங்கல மடந்தையை நன்னீ ராட்டிச் செங்கயல் நெடுங்கண் அஞ்சனந் தீட்டித் தேமென் கூந்தற் சின்மலர் பெய்து தூமடி உடீஇத் தொல்லோர் சிறப்பின் ஆயமும் காவலும் ஆயிழை தனக்குத் | 135 |
| தாயும் நீயே யாகித் தாங்கிங்கு என்னொடு போந்த இளங்கொடி நங்கைதன் வண்ணச் சீறடி மண்மகள் அறிந்திலள் கடுங்கதிர் வெம்மையிற் காதலன் றனக்கு நடுங்குதுய ரெய்தி நாப்புலர வாடித் | 140 |
| தன்துயர்காணாத் தகைசால் பூங்கொடி இன்துணை மகளிர்க் கின்றியமையாக் கற்புக் கடம்பூண்ட இத்தெய்வ மல்லது பொற்புடைத் தெய்வம் யாங்கண் டிலமால் வானம் பொய்யாது வளம்பிழைப் பறியாது | 145 |
| நீணில வேந்தர் கொற்றம் சிதையாது பத்தினிப் பெண்டிர் இருந்தநா டென்னும் அத்தகு நல்லுரை அறியா யோநீ தவத்தோர் அடக்கலம் தான்சிறி தாயினும் மிகப்பே ரின்பம் தருமது கேளாய் | 150 |
| காவிரிப் படப்பைப் பட்டினந் தன்னுள் பூவிரி பிண்டிப் பொதுநீங்கு திருநிழல் உலக நோன்பிகள் ஒருங்குடன் இட்ட இலகொளிச் சிலாதல மேலிருந் தருளித் தருமஞ் சாற்றுஞ் சாரணர் தம்முன் | 155 |
| திருவில் இட்டுத் திகழ்தரு மேனியன் தாரன் மாலையன் தமனியப் பூணினன் பாரோர் காணாப் பலர்தொழு படிமையன் கருவிரற் குரங்கின் கையொரு பாகத்துப் பெருவிறல் வானவன் வந்துநின் றோனைச் | 160 |
| சாவக ரெல்லாம் சாரணர்த் தொழுதீங்கு யாதிவன் வரவென இறையோன் கூறும் எட்டி சாயலன் இருந்தோன் றனது பட்டினி நோன்பிகள் பலர்புகு மனையிலோர் மாதவ முதல்வனை மனைப்பெருங் கிழத்தி | 165 |
| ஏதம் நீங்க எதிர்கொள் அமயத்து ஊர்ச்சிறு குரங்கொன் றொதுங்கிஉள் புக்குப் பாற்படு மாதவன் பாதம் பொருந்தி உண்டொழி மிச்சிலும் உகுத்த நீரும் தண்டா வேட்கையில் தான்சிறி தருந்தி | 170 |
| எதிர்முகம் நோக்கிய இன்பச் செவ்வியை அதிராக் கொள்கை அறிவனும் நயந்துநின் மக்களின் ஓம்பு மனைக்கிழத் தீயென மிக்கோன் கூறிய மெய்மொழி ஓம்பிக் காதற் குரங்கு கடைநா ளெய்தவும் | 175 |
| தானஞ் செய்வுழி அதற்கொரு கூறு தீதறு கென்றே செய்தன ளாதலின் மத்திம நன்னாட்டு வாரணந் தன்னுள் உத்தர கௌத்தற் கொருமக னாகி உருவினும் திருவினும் உணர்வினுந் தோன்றிப் | 180 |
| பெருவிறல் தானம் பலவுஞ் செய்தாங்கு எண்ணால் ஆண்டின் இறந்தபிற் பாடு விண்ணோர் வடிவம் பெற்றன னாதலின் பெற்ற செல்வப் பெரும்பய னெல்லாம் தற்காத் தளித்தோள் தானச் சிறப்பெனப் | 185 |
| பண்டைப் பிறப்பிற் குரங்கின் சிறுகை கொண்டொரு பாகத்துக் கொள்கையிற் புணர்ந்த சாயலன் மனைவி தானந் தன்னால் ஆயினன் இவ்வடிவு அறிமி னோவெனச் சாவகர்க் கெல்லாம் சாற்றினன் காட்டத் | 190 |
| தேவ குமரன் தோன்றினன் என்றலும் சாரணர் கூறிய தகைசால் நன்மொழி ஆரணங் காக அறந்தலைப் பட்டோர் அன்றப் பதியுள் அருந்தவ மாக்களும் தன்தெறல் வாழ்க்கைச் சாவக மாக்களும் | 195 |
| இட்ட தானத் தெட்டியும் மனைவியும் முட்டா இன்பத்து முடிவுல கெய்தினர் கேட்டனை யாயினித் தோட்டார் குழலியொடு நீட்டித் திராது நீபோ கென்றே கவுந்தி கூற உவந்தன ளேத்தி | 200 |
| வளரிள வனமுலை வாங்கமைப் பணைத்தோள் முளையிள வெண்பல் முதுக்குறை நங்கையொடு சென்ற ஞாயிற்றுச் செல்சுடர் அமயத்துக் கன்றுதேர் ஆவின் கனைகுரல் இயம்ப மறித்தோள் நவியத்து உறிக்கா வாளரொடு | 205 |
| செறிவளை ஆய்ச்சியர் சிலர் புறஞ் சூழ மிளையும் கிடங்கும் வளைவிற் பொறியும் கருவிர லூகமும் கல்லுமிழ் கவணும் பரிவுறு வெந்நெயும் பாகடு குழிசியும் காய்பொன் உலையும் கல்லிடு கூடையும் | 210 |
| தூண்டிலும் தொடக்கும் ஆண்டலை அடுப்பும் கவையும் கழுவும் புதையும் புழையும் ஐயவித் துலாமும் கைபெயர் ஊசியும் சென்றெறி சிரலும் பன்றியும் பணையும் எழுவுஞ் சீப்பும் முழுவிறற் கணையமும் | 215 |
| கோலும் குந்தமும் வேலும் பிறவும் ஞாயிலும் சிறந்து நாட்கொடி நுடங்கும் வாயில் கழிந்துதன் மனைபுக் கனளால் கோவலர் மடந்தை கொள்கையிற் புணர்ந்தென். |
16. கொலைக்களக் காதை
| அரும்பெறற் பாவையை அடைக்கலம் பெற்ற இரும்பே ருவகையின் இடைக்குல மடந்தை அளைவிலை யுணவின் ஆய்ச்சியர் தம்மொடு மிளைசூழ் கோவலர் இருக்கை யன்றிப் பூவ லூட்டிய புனைமாண் பந்தர்க் | 5 |
| காவற் சிற்றிற் கடிமனைப் படுத்துச் செறிவளை யாய்ச்சியர் சிலருடன் கூடி நறுமலர்க் கோதையை நாணீ ராட்டிக் கூடல் மகளிர் கோலங் கொள்ளும் ஆடகப் பைம்பூ ணருவிலை யழிப்பச் | 10 |
| செய்யாக் கோலமொடு வந்தீர்க் கென்மகள் ஐயை காணீ ரடித்தொழி லாட்டி பொன்னிற் பொதிந்தேன் புனைபூங் கோதை என்னுடன் நங்கையீங் கிருக்கெனத் தொழுது மாதவத் தாட்டி வழித்துயர் நீக்கி | 15 |
| ஏத மில்லா இடந்தலைப் படுத்தினள் நோதக வுண்டோ நும்மக னார்க்கினிச் சாவக நோன்பிக ளடிக ளாதலின் நாத்தூண் நங்கையொடு நாள்வழிப் படூஉம் அடிசி லாக்குதற் கமைந்தநற் கலங்கள் | 20 |
| நெடியா தளிமின் நீரெனக் கூற இடைக்குல மடந்தையர் இயல்பிற் குன்றா மடைக்கலந் தன்னொடு மாண்புடை மரபிற் கோளிப் பாகற் கொழுங்கனித் திரள்காய் வாள்வரிக் கொடுங்காய் மாதுளம் பசுங்காய் | 25 |
| மாவின் கனியொடு வாழைத் தீங்கனி சாலி யரிசி தம்பாற் பயனொடு கோல்வளை மாதே கொள்கெனக் கொடுப்ப மெல்விரல் சிவப்பப் பல்வேறு பசுங்காய் கொடுவாய்க் குயத்து விடுவாய் செய்யத் | 30 |
| திருமுகம் வியர்த்தது செங்கண் சேந்தன கரிபுற அட்டில் கண்டனள் பெயர வையெரி மூட்டிய ஐயை தன்னொடு கையறி மடைமையிற் காதலற் காக்கித் தாலப் புல்லின் வால்வெண் தோட்டுக் | 35 |
| கைவன் மகடூஉக் கவின்பெறப் புனைந்த செய்வினைத் தவிசிற் செல்வன் இருந்தபின் கடிமல ரங்கையிற் காதல னடிநீர் சுடுமண் மண்டையில் தொழுதனள் மாற்றி மண்ணக மடந்தையை மயக்கொழிப் பனள்போல் | 40 |
| தண்ணீர் தௌித்துத் தன்கையால் தடவிக் குமரி வாழையின் குருத்தகம் விரித்தீங்கு அமுத முண்க அடிக ளீங்கென அரசர் பின்னோர்க் கருமறை மருங்கின் உரிய வெல்லாம் ஒருமுறை கழித்தாங்கு | 45 |
| ஆயர் பாடியின் அசோதைபெற் றெடுத்த பூவைப் புதுமலர் வண்ணன் கொல்லோ நல்லமு துண்ணும் நம்பி யீங்குப் பல்வளைத் தோளியும் பண்டுநங் குலத்துத் தொழுனை யாற்றினுள் தூமணி வண்ணனை | 50 |
| விழுமந் தீர்த்த விளக்குக் கொல்லென ஐயையுந் தவ்வையும் விம்மிதம் எய்திக் கண்கொளா நமக் கிவர் காட்சி யீங்கென உண்டினி திருந்த உயர்பே ராளற்கு அம்மென் திரையலோ டடைக்கா யீத்த | 55 |
| மையீ ரோதியை வருகெனப் பொருந்திக் கல்லதர் அத்தம் கடக்க யாவதும் வல்லுந கொல்லோ மடந்தைமெல் லடியென வெம்முனை யருஞ்சுரம் போந்ததற் கிரங்கி எம்முது குரவர் என்னுற் றனர்கொல் | 60 |
| மாயங் கொல்லோ வல்வினை கொல்லோ யானுளங் கலங்கி யாவதும் அறியேன் வறுமொழி யாளரொடு வம்பப் பரத்தரொடு குறுமொழி கோட்டி நெடுநகை புக்குப் பொச்சாப் புண்டு பொருளுரை யாளர் | 65 |
| நச்சுக்கொன் றேற்கும் நன்னெறி யுண்டோ இருமுது குரவ ரேவலும் பிழைத்தேன் சிறுமுதுக் குறைவிக்குச் சிறுமையுஞ் செய்தேன் வழுவெனும் பாரேன் மாநகர் மருங்கீண்டு எழுகென எழுந்தாய் என்செய் தனையென | 70 |
| அறவோர்க் களித்தலும் அந்தண ரோம்பலும் துறவோர்க் கெதிர்தலும் தொல்லோர் சிறப்பின் விருந்தெதிர் கோடலும் இழந்த என்னைநும் பெருமக டன்னொடும் பெரும்பெயர்த் தலைத்தாள் மன்பெருஞ் சிறப்பின் மாநிதிக் கிழவன் | 75 |
| முந்தை நில்லா முனிவிகந் தனனா அற்புளஞ் சிறந்தாங் கருண்மொழி அளைஇ எற்பா ராட்ட யானகத் தொளித்த நோயும் துன்பமும் நொடிவது போலுமென் வாயல் முறுவற்கவர் உள்ளகம் வருந்தப் | 80 |
| போற்றா வொழுக்கம் புரிந்தீர் யாவதும் மாற்றா உள்ள வாழ்க்கையே னாதலின் ஏற்றெழுந் தனன்யான் என்றவள் கூறக் குடிமுதற் சுற்றமும் குற்றிளை யோரும் அடியோர் பாங்கும் ஆயமும் நீங்கி | 85 |
| நாணமும் மடனும் நல்லோ ரேத்தும் பேணிய கற்பும் பெருந்துணை யாக என்னொடு போந்தீங் கென்றுயர் களைந்த பொன்னே கொடியே புனைபூங் கோதாய் நாணின் பாவாய் நீணில விளக்கே | 90 |
| கற்பின் கொழுந்தே பொற்பின் செல்வி சீறடிச் சிலம்பி னொன்றுகொண் டியான்போய் மாறி வருவன் மயங்கா தொழிகெனக் கருங்கயல் நெடுங்கட் காதலி தன்னை ஒருங்குடன் தழீஇ உழையோ ரில்லா | 95 |
| ஒருதனி கண்டுதன் உள்ளகம் வெதும்பி வருபனி கரந்த கண்ண னாகிப் பல்லான் கோவல ரில்லம் நீங்கி வல்லா நடையின் மறுகிற் செல்வோன் இமிலே றெதிர்ந்த திழுக்கென அறியான் | 100 |
| தன்குலம் அறியுந் தகுதியன் றாதலின் தாதெரு மன்றந் தானுடன் கழிந்து மாதர் வீதி மறுகிடை நடந்து பீடிகைத் தெருவிற் பெயர்வோன் ஆங்கண் கண்ணுள் வினைஞர் கைவினை முற்றிய | 105 |
| நுண்வினைக் கொல்லர் நூற்றுவர் பின்வர மெய்ப்பை புக்கு விலங்குநடைச் செலவின் கைக்கோற் கொல்லனைக் கண்டன னாகித் தென்னவன் பெயரொடு சிறப்புப் பெற்ற பொன்வினைக் கொல்லன் இவனெனப் பொருந்திக் | 110 |
| காவலன் றேவிக் காவதோர் காற்கணி நீவிலை யிடுதற் காதி யோவென அடியேன் அறியே னாயினும் வேந்தர் முடிமுதற் கலன்கள் சமைப்பேன் யானெனக் கூற்றத் தூதன் கைதொழு தேத்தப் | 115 |
| போற்றருஞ் சிலம்பின் பொதிவா யவிழ்த்தனன் மத்தக மணியோடு வயிரம் கட்டிய பத்திக் கேவணப் பசும்பொற் குடைச்சூற் சித்திரச் சிலம்பின் செய்வினை யெல்லாம் பொய்த்தொழிற் கொல்லன் புரிந்துடன் நோக்கிக் | 120 |
| கோப்பெருந் தேவிக் கல்லதை இச்சிலம்பு யாப்புற வில்லை யெனமுன் போந்து விறல்மிகு வேந்தற்கு விளம்பியான் வரவென் சிறுகுடி லங்கண் இருமின் நீரெனக் கோவலன் சென்றக் குறுமக னிருக்கையோர் | 125 |
| தேவ கோட்டச் சிறையகம் புக்கபின் கரந்தியான் கொண்ட காலணி ஈங்குப் பரந்து வௌிப்படா முன்னம் மன்னற்குப் புலம்பெயர் புதுவனிற் போக்குவன் யானெனக் கலங்கா வுள்ளம் கரந்தனன் செல்வோன் | 130 |
| கூடன் மகளிர் ஆடல் தோற்றமும் பாடற் பகுதியும் பண்ணின் பயங்களும் காவல னுள்ளம் கவர்ந்தன என்றுதன் ஊட லுள்ளம் உள்கரந் தொளித்துத் தலைநோய் வருத்தந் தன்மே லிட்டுக் | 135 |
| குலமுதல் தேவி கூடா தேக மந்திரச் சுற்றம் நீங்கி மன்னவன் சிந்தரி நெடுங்கட் சிலதியர் தம்மொடு கோப்பெருந் தேவி கோயில் நோக்கிக் காப்புடை வாயிற் கடைகாண் அகவையின் | 140 |
| வீழ்ந்தனன் கிடந்து தாழ்ந்துபல ஏத்திக் கன்னக மின்றியும் கவைக்கோ லின்றியும் துன்னிய மந்திரந் துணையெனக் கொண்டு வாயி லாளரை மயக்குதுயி லுறுத்துக் கோயிற் சிலம்பு கொண்ட கள்வன் | 145 |
| கல்லென் பேரூர்க் காவலர்க் கரந்தென் சில்லைச் சிறுகுடி லகத்திருந் தோனென வினைவிளை கால மாதலின் யாவதும் சினையலர் வேம்பன் தேரான் ஆகி ஊர்காப் பாளரைக் கூவி ஈங்கென் | 150 |
| தாழ்பூங் கோதை தன்காற் சிலம்பு கன்றிய கள்வன் கைய தாகில் கொன்றச் சிலம்பு கொணர்க ஈங்கெனக் காவலன் ஏவக் கருந்தொழிற் கொல்லனும் ஏவ லுள்ளத் தெண்ணியது முடித்தெனத் | 155 |
| தீவினை முதிர்வலைச் சென்றுபட் டிருந்த கோவலன் றன்னைக் குறுகின னாகி வலம்படு தானை மன்னவன் ஏவச் சிலம்பு காணிய வந்தோர் இவரெனச் செய்வினைச் சிலம்பின் செய்தி யெல்லாம் | 160 |
| பொய்வினைக் கொல்லன் புரிந்துடன் காட்ட இலக்கண முறைமையின் இருந்தோன் ஈங்கிவன் கொலைப்படு மகனலன் என்றுகூறும் அருந்திறல் மாக்களை அகநகைத் துரைத்துக் கருந்தொழிற் கொல்லன் காட்டின னுரைப்போன் | 165 |
| மந்திரம் தெய்வம் மருந்தே நிமித்தம் தந்திரம் இடனே காலம் கருவியென்று எட்டுட னன்றே இழுக்குடை மரபிற் கட்டுண் மாக்கள் துணையெனத் திரிவது மருந்திற் பட்டீ ராயின் யாவரும் | 170 |
| பெரும்பெயர் மன்னனிற் பெருநவைப் பட்டீர் மந்திர நாவிடை வழுத்துவ ராயின் இந்திர குமரரின் யாங்காண் குவமோ தெய்வத் தோற்றம் தௌிகுவ ராயின் கையகத் துறுபொருள் காட்டியும் பெயர்குவர் | 175 |
| மருந்தின் நங்கண் மயக்குவ ராயின் இருந்தோம் பெயரும் இடனுமா ருண்டோ நிமித்தம் வாய்த்திடி னல்ல தியாவதும் புகற்கிலா அரும்பொருள் வந்துகைப் புகுதினும் தந்திர கரணம் எண்ணுவ ராயின் | 180 |
| இந்திரன் மார்பத் தாரமும் எய்துவர் இவ்விடம் இப்பொருள் கோடற் கிடமெனின் அவ்விடத் தவரை யார்காண் கிற்பார் காலங் கருதி அவர்பொருள் கையுறின் மேலோ ராயினும் விலக்கலு முண்டோ | 185 |
| கருவி கொண்டவர் அரும்பொருள் கையுறின் இருநில மருங்கின் யார்காண் கிற்பார் இரவே பகலே என்றிரண் டில்லை கரவிடங் கேட்பினோர் புகலிட மில்லை தூதர் கோலத்து வாயிலின் இருந்து | 190 |
| மாதர் கோலத்து வல்லிருட் புக்கு விளக்கு நிழலில் துளக்கிலன் சென்றாங்கு இளங்கோ வேந்தன் துளங்கொளி ஆரம் வெயிலிடு வயிரத்து மின்னின் வாங்கத் துயில்கண் விழித்தோன் தோளிற் காணான் | 195 |
| உடைவாள் உருவ உறைகை வாங்கி எறிதொறுஞ் செறித்த இயல்பிற் காற்றான் மல்லிற் காண மணித்தூண் காட்டிக் கல்வியிற் பெயர்ந்த கள்வன் றன்னைக் கண்டோர் உளரெனிற் காட்டும் ஈங்கிவர்க் | 200 |
| குண்டோ வுலகத் தொப்போ ரென்றக் கருந்தொழிற் கொல்லன் சொல்ல ஆங்கோர் திருந்துவேற் றடக்கை இளையோன் கூறும் நிலனகழ் உளியன் நீலத் தானையன் கலன்நசை வேட்கையிற் கடும்புலி போன்று | 205 |
| மாரி நடுநாள் வல்லிருள் மயக்கத்து ஊர்மடி கங்குல் ஒருவன் தோன்றக் கைவாள் உருவஎன் கைவாள் வாங்க எவ்வாய் மருங்கினும் யானவற் கண்டிலேன் அரிதிவர் செய்தி அலைக்கும் வேந்தனும் | 210 |
| உரிய தொன் றுரைமின் உறுபடை யீரெனக் கல்லாக் களிமக னொருவன் கையில் வெள்வாள் எறிந்தனன் விலங்கூ டறுத்தது புண்ணுமிழ் குருதி பொழிந்துடன் பரப்ப மண்ணக மடந்தை வான்றுயர் கூரக் | 215 |
| காவலன் செங்கோல் வளைஇய வீழ்ந்தனன் கோவலன் பண்டை ஊழ்வினை உருத்தென். நேரிசை வெண்பா நண்ணும் இருவினையும் நண்ணுமின்கள் நல்லறமே கண்ணகி தன் கேள்வன் காரணத்தான்-மண்ணில் வளையாத செங்கோல் வளைந்ததே பண்டை விளைவாகி வந்த வினை. |
17. ஆய்ச்சியர் குரவை
| கயலெழுதிய இமயநெற்றியின் அயலெழுதிய புலியும்வில்லும் நாவலந்தண் பொழின்மன்னர் ஏவல்கேட்பப் பாரரசாண்ட மாலை வெண்குடைப் பாண்டியன் கோயிலில் | 5 |
| காலை முரசங் கனைகுர லியம்புமாகலின் நெய்ம்முறை நமக்கின் றாமென்று ஐயைதன் மகளைக் கூஉய்க் கடைகயிறு மத்துங் கொண்டு இடைமுதுமகள் வந்துதோன்றுமன்; | 10 |
உரைப்பாட்டு மடை குடப்பால் உறையா குவியிமில் ஏற்றின் | 1 |
| மடக்கணீர் சோரும் வருவதொன் றுண்டு; உறிநறு வெண்ணெய் உருகா உருகும் | 2 |
| மறிதெறித் தாடா வருவதொன் றுண்டு; நான்முலை யாயம் நடுங்குபு நின்றிரங்கும் | 3 |
| மான்மணி வீழும் வருவதொன் றுண்டு; கருப்பம் குடத்துப்பா லுறையாமையும் குவியிமி லேற்றின் மடக்கண்ணீீர் சோர்தலும் உறியில் வெண்ணெ யுருகாமையும் மறி முடங்கியாடாமையும் மான்மணி நிலத்தற்று வீழ்தலும் வருவதோர் துன்பமுண்டென மகளை நோக்கி மனமயங்காதே மண்ணின் மாதர்க்கணியாகிய கண்ணகியுந்தான்காண ஆயர்பாடியில் எருமன்றத்து மாயவனுடன் தம்முன் ஆடிய வாலசரிதை நாடகங்களில் வேல் நெடுங்கண் பிஞ்ஞையோ டாடிய குரவை யாடுதும் யாமென்றாள் கறவை கன்று துயர் நீங்குகவெனவே; கொளு காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ் | 1 |
| வேரி மலர்க் கோதையாள்; கட்டு நெற்றிச் செகிலை யடர்த்தாற் குரியவிப் | 2 |
| பொற்றொடி மாதராள் தோள்; மல்லல் மழவிடை யூர்ந்தாற் குரியளிம் | 3 |
| முல்லையம் பூங்குழல் தான்; நுண்பொறி வெள்ளை யடர்த்தாற்கே யாகுமிப் | 4 |
| பெண்கொடி மாதர்தன் தோள்; பொற்பொறி வெள்ளை யடர்த்தார்க்கே யாகுமிந் | 5 |
| நற்கொடி மென்முலை தான்; வென்றி மழவிடை யூர்ந்தாற் குரியளிக் | 6 |
| கொன்றையம் பூங்குழ லாள்; தூநிற வெள்ளை அடர்த்தாற் குரியளிப் | 7 |
| பூவைப் புதுமல ராள்; எடுத்துக் காட்டு ஆங்கு, தொழுவிடை ஏறு குறித்து வளர்த்தார் எழுவரிளங் கோதை யார் என்றுதன் மகளை நோக்கித் தொன்றுபடு முறையால் நிறுத்தி இடைமுது மகளிவர்க்குப் படைத்துக்கோட் பெயரிடுவாள் குடமுதல் இடமுறை யாக்குரல் துத்தம் கைக்கிளை உழைஇளி விளரி தாரமென விரிதரு பூங்குழல் வேண்டிய பெயரே; மாயவன் என்றாள் குரலை விறல்வெள்ளை ஆயவன் என்றாள் இளிதன்னை- ஆய்மகள் பின்னையாம் என்றாளோர் துத்தத்தை மற்றையார் முன்னையாம் என்றாள் முறை; மாயவன் சீருளார் பிஞ்ஞையுந் தாரமும் வால்வெள்ளை சீரார் உழையும் விளரியும் கைக்கிளை பிஞ்ஞை இடத்தாள் வலத்துளாள் முத்தைக்கு நல்விளரி தான்; அவருள், வண்டுழாய் மாலையை மாயவன் மேலிட்டுத் தண்டாக் குரவைதான் உள்படுவாள்-கொண்டசீர் வையம் அளந்தான்றன் மார்பின் திருநோக்காப் பெய்வளைக் கையாள்நம் பின்னைதா னாமென்றே ஐயென்றா ளாயர் மகள்; கூத்துள் படுதல் அவர் தாம், செந்நிலை மண்டிலத்தாற் கற்கடகக் கைகோஒத்து அந்நிலையே யாடற்சீ ராய்ந்துளார்- முன்னைக் குரற்கொடி தன்கிளையை நோக்கிப் பரப்புற்ற கொல்லைப் புனத்துக் குருந்தொசித்தாற் பாடுதும் முல்லைத்தீம் பாணி யென்றாள்; எனாக், குரன்மந்த மாக இளிசம னாக வரன்முறையே துத்தம் வலியா உரனிலா மந்தம் விளரி பிடிப்பாள் அவள்நட்பின் பின்றையைப் பாட்டெடுப் பாள்; பாட்டு கன்று குணிலாக் கனியுதிர்த்த மாயவன் | 1 |
| இன்றுநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் கொன்றையந் தீங்குழல் கேளாமோ தோழீ; பாம்பு கயிறாக் கடல்கடைந்த மாயவன் | 2 |
| ஈங்குநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் ஆம்பலந் தீங்குழல் கேளாமோ தோழீ; கொல்லையஞ் சாரற் குருந்தொசித்த மாயவன் | 3 |
| எல்லைநம் ஆனுள் வருமேல் அவன்வாயில் முல்லையந் தீங்குழல் கேளாமோ தோழீ; தொழுனைத் துறைவனோ டாடிய பின்னை அணிநிறம் பாடுகேம் யாம்; இறுமென் சாயல் நுடங்க நுடங்கி | 1 |
| அறுவை யொளித்தான் வடிவென் கோயாம் அறுவை யொளித்தான் அயர அயரும் நறுமென் சாயல் முகமென் கோயாம்; வஞ்சஞ் செய்தான் தொழுனைப் புனலுள் | 2 |
| நெஞ்சங் கவர்ந்தாள் நிறையென் கோயாம் நெஞ்சங் கவர்ந்தாள் நிறையும் வளையும் வஞ்சஞ் செய்தான் வடிவென் கோயாம்; தையல் கலையும் வளையும் இழந்தே | 3 |
| கையி லொளித்தாள் முகமென் கோயாம் கையி லொளித்தாள் முகங்கண் டழுங்கி மைய லுழந்தான் வடிவென் கோயாம்; ஒன்றன் பகுதி கதிர்திகிரி யான்மறைத்த கடல்வண்ணன் இடத்துளாள் | 1 |
| மதிபுரையு நறுமேனித் தம்முனோன் வலத்துளாள் பொதியவிழ் மலர்க்கூந்தற் பிஞ்ஞைசீர் புறங்காப்பார் முதுமறைதேர் நாரதனார் முந்தைமுறை நரம்புளர்வார்; மயிலெருத் துறழ்மேனி மாயவன் வலத்துளாள் | 2 |
| பயிலிதழ் மலர்மேனித் தம்முனோன் இடத்துளாள் கயிலெருத்தம் கோட்டியநம் பின்னைசீர் புறங்காப்பார் குயிலுவருள் நாரதனார் கொளைபுணர்சீர் நரம்புளர்வார்; ஆடுநர்ப் புகழ்தல் மாயவன்றம் முன்னினொடும் வரிவளைக்கைப் பின்னையொடும் கோவலர்தஞ் சிறுமியர்கள் குழற்கோதை புறஞ்சோர ஆய்வளைச்சீர்க் கடிபெயர்த்திட் டசொதையார் தொழுதேத்தத் தாதெருமன் றத்தாடுங் குரவையோ தகவுடைத்தே; எல்லாநாம், புள்ளூர் கடவுளைப் போற்றுதும் போற்றுதும் உள்வரிப் பாணியொன் றுற்று; உள்வரி வாழ்த்து கோவா மலையாரம் கோத்த கடலாரம் | 1 |
| தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே தேவர்கோன் பூணாரம் பூண்டான் செழுந்துவரைக் கோகுல மேய்த்துக் குருந்தொசித்தா னென்பரால்; பொன்னிமயக் கோட்டுப் புலிபொறித்து மண்ணாண்டான் | 2 |
| மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் மன்னன் வளவன் மதிற்புகார் வாழ்வேந்தன் பொன்னன் திகிரிப் பொருபடையா னென்பரால்; முந்நீரி னுள்புக்கு மூவாக் கடம்பெறிந்தான் | 3 |
| மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் மன்னர்கோச் சேரன் வளவஞ்சி வாழ்வேந்தன் கன்னவில் தோளோச்சிக் கடல்கடைந்தா னென்பரால்; முன்னிலைப் பரவல் வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் | 1 |
| கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே கலக்கியகை அசோதையார் கடைகயிற்றாற் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே; அறுபொருள் இவனென்றே அமரர்கணந் தொழுதேத்த | 2 |
| உறுபசியொன் றின்றியே உலகடைய உண்டனையே உண்டவாய் களவினான் உறிவெண்ணெ யுண்டவாய் வண்டுழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே; திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்நின் செங்கமல | 3 |
| இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே நடந்தஅடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்தஅடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே; படர்க்கைப் பரவல் மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் | 1 |
| தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே; பெரியவனை மாயவனைப் பேருலக மெல்லாம் | 2 |
| விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும் திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ண கண்ணே கண்ணிமைத்துக் காண்பார்தம் கண்ணென்ண கண்ணே; மடந்தாழு நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் | 3 |
| கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்தா ரணமுழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா வென்னா நாவென்ன நாவே; என்றியாம், கோத்த குரவையுள் ஏத்திய தெய்வநம் ஆத்தலைப் பட்ட துயர்தீர்க்க வேத்தர் மருள வைகல் வைகல் மாறட்டு வெற்றி விளைப்பது மன்னோ கொற்றத்து இடிப்படை வானவன் முடித்தலை யுடைத்த தொடித்தோட் டென்னவன் கடிப்பிகு முரசே. |
18. துன்ப மாலை
| ஆங்கு, ஆயர் முதுமகள் ஆடிய சாயலாள் பூவும் புகையும் புனைசாந்துங் கண்ணியும் நீடுநீர் வையை நெடுமா லடியேத்தத் தூவித் துறைபடியப் போயினாள் மேவிக் | 5 |
| குரவை முடிவிலோர் ஊரரவங் கேட்டு விரைவொடு வந்தாள் உளள்; அவள்தான், சொல்லாடாள் சொல்லாடாள் நின்றாள்அந் நங்கைக்குச் சொல்லாடும் சொல்லாடுந் தான்; | 10 |
| எல்லாவோ, காதலற் காண்கிலேன் கலங்கிநோய் கைம்மிகும் ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சன்றே ஊதுலை தோற்க உயிர்க்கும்என் நெஞ்சாயின் ஏதிலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; | 15 |
நண்பகற் போதே நடுக்குநோய் கைம்மிகும் அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சன்றே அன்பனைக் காணாது அலவும்என் நெஞ்சாயின் மன்பதை சொன்ன தெவன்வாழி யோதோழீ; தஞ்சமோ தோழீ தலைவன் வரக்காணேன் | 20 |
| வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சன்றே வஞ்சமோ உண்டு மயங்கும்என் நெஞ்சாயின் எஞ்சலார் சொன்ன தெவன்வாழி யோதோழீ; சொன்னது:- அரைசுறை கோயில் அணியார் ஞெகிழம் | 25 |
| கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே கரையாமல் வாங்கிய கள்வனாம் என்றே குரைகழல் மாக்கள் கொலைகுறித் தனரே எனக் கேட்டு, பொங்கி எழுந்தாள் விழுந்தாள் பொழிகதிர்த் | 30 |
| திங்கள் முகிலொடுஞ் சேண்நிலம் கொண்டெனச் செங்கண் சிவப்ப அழுதாள்தன் கேள்வனை எங்கணா என்னா இனைந்தேங்கி மாழ்குவாள்; இன்புறு தங்கணவர் இடரெரி யகமூழ்கத் துன்புறு வனநோற்றுத் துயருறு மகளிரைப்போல் | 35 |
| மன்பதை அலர்தூற்ற மன்னவன் தவறிழைப்ப அன்பனை இழந்தேன்யான் அவலங்கொண் டழிவலோ; நறைமலி வியன்மார்பின் நண்பனை இழந்தேங்கித் துறைபல திறமூழ்கித் துயருறு மகளிரைப்போல் மறனொடு திரியுங்கோல் மன்னவன் தவறிழைப்ப | 40 |
| அறனென்னும் மடவோய்யான் அவலங் கொண்டழிவலோ; தம்முறு பெருங்கணவன் தழலெரி யகமூழ்கக் கைம்மைகூர் துறைமூழ்குங் கவலைய மகளிரைப்போல் செம்மையின் இகந்தகோல் தென்னவன் தவறிழைப்ப இம்மையும் இசையொரீஇ இனைந்தேங்கி அழிவலோ; | 45 |
காணிகா, வாய்வதின் வந்த குரவையின் வந்தீண்டும் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டீமின் ஆய மடமகளி ரெல்லீருங் கேட்டைக்க பாய்திரை வேலிப் படுபொருள் நீயறிதி | 50 |
| காய்கதிர்ச் செல்வனே கள்வனோ என்கணவன் கள்வனோ அல்லன் கருங்கயற்கண் மாதராய் ஒள்ளெரி உண்ணுமிவ் வூரென்ற தொருகுரல். |
19. ஊர்சூழ் வரி
| என்றனன் வெய்யோன் இலங்கீர் வளைத்தோளி நின்றிலள் நின்ற சிலம்பொன்று கையேந்தி முறையில் அரசன்றன் ஊரிருந்து வாழும் நிறையுடைப் பத்தினிப் பெண்டிர்காள் ஈதொன்று பட்டேன் படாத துயரம் படுகாலை | 5 | |
| உற்றேன் உறாதது உறுவனே ஈதொன்று கள்வனோ அல்லன் கணவன்என் காற்சிலம்பு கொள்ளும் விலைப்பொருட்டாற் கொன்றாரே ஈதொன்று மாதர்த் தகைய மடவார்கண் முன்னரே காதற் கணவனைக் காண்பனே ஈதொன்று | 10 | |
| காதற் கணவனைக் கண்டா லவன்வாயில் தீதறு நல்லுரை கேட்பனே ஈதொன்று தீதறு நல்லுரை கேளா தொழிவேனேல் நோதக்க செய்தாளென் றெள்ளல் இதுவொன்றென்று அல்லலுற் றாற்றா தழுவாளைக் கண்டேங்கி | 15 | |
| மல்லல் மதுரையா ரெல்லாருந் தாமயங்கிக் களையாத துன்பமிக் காரிகைக்குக் காட்டி வளையாத செங்கோல் வளைந்த திதுவென்கொல் மன்னவர் மன்னன் மதிக்குடை வாள்வேந்தன் தென்னவன் கொற்றம் சிதைந்த திதுவென்கொல் | 20 | |
| மண்குளிரச் செய்யும் மறவேல் நெடுந்தகை தண்குடை வெம்மை விளைத்த திதுவென்கொல் செம்பொற் சிலம்பொன்று கையேந்தி நம்பொருட்டால் வம்பப் பெருந்தெய்வம் வந்த திதுவென்கொல் ஐயரி யுண்கண் அழுதேங்கி யரற்றுவாள் | 25 | |
| தெய்வமுற்றாள் போலுந் தகைய ளிதுவென்கொல் என்பன சொல்லி இனைந்தேங்கி யாற்றவும் மன்பழி தூற்றுங் குடியதே மாமதுரைக் கம்பலை மாக்கள் கணவனைத் தாங்காட்டச் செம்பொற் கொடியனையாள் கண்டாளைத் தான்காணான் | 30 | |
மல்லன்மா ஞாலம் இருளூட்டி மாமலைமேற் செவ்வென் கதிர்சுருங்கிச் செங்கதிரோன் சென்றொளிப்பப் புல்லென் மருள்மாலைப் பூங்கொடியாள் பூசலிட ஒல்லென் ஒலிபடைத்த தூர்; வண்டார் இருங்குஞ்சி மாலைதன் வார்குழன்மேற் | 35 | |
| கொண்டாள் தழீஇக் கொழுநன்பாற் காலைவாய்ப் புண்தாழ் குருதி புறஞ்சோர மாலைவாய்க் கண்டாள் அவன்றன்னைக் காணாக் கடுந்துயரம் என்னுறு துயர்கண்டும் இடருறும் இவள்என்னீர் பொன்னுறு நறுமேனி பொடியாடிக் கிடப்பதோ | 40 | |
| மன்னுறு துயர்செய்த மறவினை யறியாதேற்கு என்னுறு வினைகாணா இதுவென உரையாரோ யாருமில் மருள்மாலை இடருறு தமியேன்முன் தார்மலி மணிமார்பம் தரைமூழ்கிக் கிடப்பதோ பார்மிகு பழிதூற்றப் பாண்டியன் தவறிழைப்ப | 45 | |
| ஈர்வதோர் வினைகாணா இதுவென உரையாரோ கண்பொழி புனல்சோரும் கடுவினை யுடையேன்முன் புண்பொழி குருதியிராய்ப் பொடியாடிக் கிடப்பதோ மன்பதை பழிதூற்ற மன்னவன் தவறிழைப்ப உண்பதோர் வினைகாணா இதுவென உரையாரோ | 50 | |
பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் கொண்ட கொழுந ருறுகுறை தாங்குறூஉம் பெண்டிரும் உண்டுகொல் பெண்டிரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் ஈன்ற குழுவி எடுத்து வளர்க்குறூஉம் | 55 | |
| சான்றோரும் உண்டுகொல் சான்றோரும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் வைவாளில் தப்பிய மன்னவன் கூடலில் தெய்வமும் உண்டுகொல் தெய்வமும் உண்டுகொல் என்றிவை சொல்லி அழுவாள் கணவன்றன் | 60 | |
| பொன்துஞ்சு மார்பம் பொருந்தத் தழீஇக்கொள்ள நின்றான் எழுந்து நிறைமதி வாள்முகம் கன்றிய தென்றவள் கண்ணீர்கை யான்மாற்ற அழுதேங்கி நிலத்தின்வீழ்ந் தாயிழையாள் தன்கணவன் தொழுதகைய திருந்தடியைத் துணைவளைக்கை யாற்பற்றப் | 65 | |
| பழுதொழிந் தெழுந்திருந்தான் பல்லமரர் குழாத்துளான் எழுதெழில் மலருண்கண் இருந்தைக்க எனப்போனான் மாயங்கொல் மற்றென்கொல் மருட்டியதோர் தெய்வங்கொல் போயெங்கு நாடுகேன் பொருளுரையோ இதுவன்று காய்சினந் தணிந்தன்றிக் கணவனைக் கைகூடேன் | 70 | |
| தீவேந்தன் தனைக்கண்டித் திறங்கேட்பல் யானென்றாள் என்றாள் எழுந்தாள் இடருற்ற தீக்கனா நின்றாள் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்சோர நின்றால் நினைந்தாள் நெடுங்கயற்கண் நீர்துடையாச் சென்றால் அரசன் செழுங்கோயில் வாயில்முன். | 75 |
20. வழக்குரை காதை
| ஆங்குக் குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும் கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக் கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா | 5 |
| விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும் கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா கருப்பம் செங்கோலும் வெண்குடையும் செறிநிலத்து மறிந்துவீழ்தரும் நங்கோன்றன் கொற்றவாயில் | 10 |
| மணிநடுங்க நடுங்குமுள்ளம் இரவுவில்லிடும் பகல்மீன்விழும் இருநான்கு திசையும் அதிர்ந்திடும் வருவதோர் துன்பமுண்டு மன்னவற் கியாம் உரைத்துமென ஆடியேந்தினர் கலனேந்தினர் அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர் கோடியேந்தினர் பட்டேந்தினர் கொழுந்திரையலின் செப்பேந்தினர் வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர் | 15 |
| மான்மதத்தின் சாந்தேந்தினர் கண்ணியேந்தினர் பிணையலேந்தினர் கவரியேந்தினர் தூபமேந்தினர் கூனுங்குறளும் ஊமுங்கூடிய குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர நரைவிரைஇய நறுங்கூந்தலர் உரைவிரைஇய பலர்வாழ்த்திட ஈண்டுநீர் வையங்காக்கும் பாண்டியன்பெருந் தேவிவாழ்கென ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக் | 20 |
| கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன் திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால், வாயி லோயே வாயி லோயே அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து | 25 |
| இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று அறிவிப் பாயே அறிவிப் பாயே; என வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி | 30 |
| தென்னம் பொருப்பின் தலைவ வாழி செழிய வாழி தென்னவ வாழி பழியொடு படராப் பஞ்வ வாழி அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப் பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி | 35 |
| வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள் அறுவர்க் கிளைய நங்கை இறைவனை ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக் கானகம் உகந்த காளி தாருகன் பேருரங் கிழித்த பெண்ணு மல்லள் | 40 |
| செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும் பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள் கணவனை இழந்தாள் கடையகத் தாளே கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என வருக மற்றவள் தருக ஈங்கென | 45 |
| வாயில் வந்து கோயில் காட்டக் கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய் யாரை யோநீ மடக்கொடி யோய்எனத் தேரா மன்னா செப்புவ துடையேன் | 50 |
| எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப் புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும் வாயிற் கடைமணி நடுநா நடுங்க ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன் அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் | 55 |
| பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர் ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி மாசாத்து வாணிகன் மகனை யாகி வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச் சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு | 60 |
| என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற் கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை | 65 |
| நற்றிறம் படராக் கொற்கை வேந்தே என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத் தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே தருகெனத் தந்து தான்முன் வைப்பக் | 70 |
| கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன் பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட யானோ அரசன் யானே கள்வன் | 75 |
| மன்பதை காக்குந் தென்புலங் காவல் என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன் கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக் கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று | 80 |
| இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி. வெண்பா அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் | 1 |
| பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா வடுவினையே செய்த வயவேந்தன் றேவி கடுவினையேன் செய்வதூஉங் காண். காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும் | 2 |
| ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன் காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக் கூடலான் கூடாயி னான். மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும் | 3 |
| கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன் கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில் உண்டளவே தோற்றான் உயிர். |
21. வஞ்சின மாலை
| கோவேந்தன் தேவி கொடுவினை யாட்டியேன் யாவுந் தெரியா இயல்பினே னாயினும் முற்பகற் செய்தான் பிறன்கேடு தன்கேடு பிற்பகற் காண்குறூஉம் பெற்றியகாண் நற்பகலே வன்னி மரமும் மடைப்பளியுஞ் சான்றாக | 5 |
| முன்னிறுத்திக் காட்டிய மொய்குழ லாள் பொன்னிக் கரையின் மணற்பாவை நின்கணவ னாமென்று உரைசெய்த மாதரொடும் போகாள் திரைவந்து அழியாது சூழ்போக வாங்குந்தி நின்ற வரியா ரகலல்குல் மாதர் உரைசான்ற | 10 |
| மன்னன் கரிகால் வளவன்மகள் வஞ்சிக்கோன் தன்னைப் புனல்கொள்ளத் தான்புனலின் பின்சென்று கல்நவில் தோளாயோ வென்னக் கடல்வந்து முன்னிறுத்திக் காட்ட அவனைத் தழீஇக் கொண்டு பொன்னங் கொடிபோலப் போதந்தாள் மன்னி | 15 |
| மணல்மலி பூங்கானல் வருகலன்கள் நோக்கிக் கணவன்வரக் கல்லுருவம் நீத்தாள் இணையாய மாற்றாள் குழவிவிழத் தன்குழவி யுங்கிணற்று வீழ்த்தேற்றுக் கொண்டெடுத்த வேற்கண்ணாள் வேற்றொருவன் நீள்நோக்கங் கண்டு நிறைமதி வாள்முகத்தைத் | 20 |
| தானோர் குரக்குமுக மாகென்று போன கொழுநன் வரவே குரக்குமுக நீத்த பழுமணி அல்குற்பூம் பாவை விழுமிய பெண்ணறி வென்பது பேதைமைத்தே என்றுரைத்த நுண்ணறிவி னோர்நோக்கம் நோக்காதே எண்ணிலேன் | 25 |
| வண்டல் அயர்விடத் தியானோர் மகள்பெற்றால் ஒண்டொடி நீயோர் மகற்பெறில் கொண்ட கொழுநன் அவளுக்கென் றியானுரைத்த மாற்றம் கெழுமி அவளுரைப்பக் கேட்ட விழுமத்தால் சிந்தைநோய் கூருந் திருவிலேற் கென்றெடுத்துத் | 30 |
| தந்தைக்குத் தாயுரைப்பக் கேட்டாளாய் முந்தியோர் கோடிக் கலிங்கம் உடுத்துக் குழல்கட்டி நீடித் தலையை வணங்கித் தலைசுமந்த ஆடகப்பூம் பாவை அவள்போல்வார் நீடிய மட்டார் குழலார் பிறந்த பதிப்பிறந்தேன் | 35 |
| பட்டாங் கியானுமோர் பத்தினியே யாமாகில் ஒட்டே னரசோ டொழிப்பேன் மதுரையுமென் பட்டிமையுங் காண்குறுவாய் நீயென்னா விட்டகலா நான்மாடக் கூடல் மகளிரு மைந்தரும் வானக் கடவளரும் மாதவருங் கேட்டீமின் | 40 |
| யானமர் காதலன் தன்னைத் தவறிழைத்த கோநகர் சீறினேன் குற்றமிலேன் யானென்று இடமுலை கையால் திருகி மதுரை வலமுறை மும்முறை வாரா அலமந்து மட்டார் மறுகின் மணிமுலையை வட்டித்து | 45 |
| விட்டா ளெறிந்தாள் விளங்கிழையாள் வட்டித்த நீல நிறத்துத் திரிசெக்கர் வார்சடைப் பால்புரை வெள்ளெயிற்றுப் பார்ப்பனக் கோலத்து மாலை எரியங்கி வானவன் தான்தோன்றி மாபத் தினிநின்னை மாணப் பிழைத்தநாள் | 50 |
| பாயெரி இந்தப் பதியூட்டப் பண்டேயோர் ஏவ லுடையேனா லியார்பிழைப்பா ரீங்கென்னப் பார்ப்பார் அறவோர் பசுப்பத் தினிப்பெண்டிர் மூத்தோர் குழவி யெனுமிவரைக் கைவிட்டுத் தீத்திறத்தார் பக்கமே சேர்கென்று காய்த்திய | 55 |
| பொற்றொடி ஏவப் புகையழல் மண்டிற்றே நற்றேரான் கூடல் நகர். வெண்பா பொற்பு வழுதியுந்தன் பூவையரும் மாளிகையும் விற்பொலியுஞ் சேனையுமா வேழமுங்--கற்புண்ணத் தீத்தரு வெங்கூடற் றெய்வக் கடவுளரும் மாத்துவத் தான்மறைந்தார் மற்று. |
22. அழற்படு காதை
| ஏவல் தெய்வத் தெரிமுகம் திறந்தது காவல் தெய்வங் கடைமுகம் அடைத்தன அரைசர் பெருமான் அடுபோர்ச் செழியன் வளைகோல் இழுக்கத் துயிராணி கொடுத்தாங்கு இருநில மடந்தைக்குச் செங்கோல் காட்டப் | 5 |
| புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சியது அறியாது ஆசான் பெருங்கணி அறக்களத்து அந்தணர் காவிதி மந்திரக் கணக்கர் தம்மொடு கோயில் மாக்களும் குறுந்தொடி மகளிரும் | 10 |
| ஓவியச் சுற்றத் துரையவிந் திருப்பக் காழோர் வாதுவர் கடுந்தே ரூருநர் வாய்வாள் மறவர் மயங்கினர் மலிந்து கோமகன் கோயிற் கொற்ற வாயில் தீமுகங் கண்டு தாமிடை கொள்ள | 15 |
| நித்திலப் பைம்பூண் நிலாத்திகழ் அவிரொளித் தண்கதிர் மதியத் தன்ன மேனியன் ஒண்கதிர் நித்திலம் பூணொடு புனைந்து வெண்ணிறத் தாமரை அறுகை நந்தியென்று இன்னவை முடித்த நன்னிறச் சென்னியன் | 20 |
| நுரையென விரிந்த நுண்பூங் கலிங்கம் புலரா துடுத்த உடையினன் மலரா வட்டிகை இளம்பொரி வன்னிகைச் சந்தனம் கொட்டமோ டரைத்துக் கொண்ட மார்பினன் தேனும் பாலும் கட்டியும் பெட்பச் | 25 |
| சேர்வன பெறூஉந் தீம்புகை மடையினன் தீர்த்தக் கரையும் தேவர் கோட்டமும் ஓத்தின் சாலையும் ஒருங்குடன் நின்று பிற்பகற் பொழுதிற் பேணினன் ஊர்வோன் நன்பகல் வரவடி யூன்றிய காலினன் | 30 |
| விரிகுடை தண்டே குண்டிகை காட்டம் பிரியாத் தருப்பை பிடித்த கையினன் நாவினும் மார்பினும் நவின்ற நூலினன் முத்தீ வாழ்க்கை முறைமையின் வழாஅ வேத முதல்வன் வேள்விக் கருவியோடு | 35 |
| ஆதிப் பூதத்து அதிபதிக் கடவுளும் வென்றி வெங்கதிர் புரையும் மேனியன் குன்றா மணிபுனை பூணினன் பூணொடு முடிமுதற் கலன்கள் பூண்டனன் முடியொடு சண்பகம் கருவிளை செங்கூ தாளம் | 40 |
| தண்கமழ் பூநீர்ச் சாதியோடு இனையவை கட்டும் கண்ணியும் தொடுத்த மாலையும் ஒட்டிய திரணையோடு ஒசிந்த பூவினன் அங்குலி கையறிந்து அஞ்சுமகன் விரித்த குங்கும வருணங் கொண்ட மார்பினன் | 45 |
| பொங்கொளி யரத்தப் பூம்பட் டுடையினன் முகிழ்த்தகைச் சாலி அயினி பொற்கலத் தேந்தி ஏலு நற்சுவை இயல்புளிக் கொணர்ந்து வெம்மையிற் கொள்ளும் மடையினன் செம்மையில் | 50 |
| பவளச் செஞ்சுடர் திகழொளி மேனியன் ஆழ்கடல் ஞால மாள்வோன் தன்னின் முரைசொடு வெண்குடை கவரி நெடுங்கொடி உரைசா லங்குசம் வடிவேல் வடிகயிறு எனவிவை பிடித்த கையின னாகி | 55 |
| எண்ணருஞ் சிறப்பின் மன்னரை யோட்டி மன்ணகம் கொண்டு செங்கோல் ஓச்சிக் கொடுந்தொழில் கடிந்து கொற்றங் கொண்டு நடும்புகழ் வளர்த்து நானிலம் புரக்கும் உரைசால் சிறப்பின் நெடியோன் அன்ன | 60 |
| அரைச பூதத்து அருந்திறற் கடவுளும் செந்நிறப் பசும்பொன் புரையும் மேனியன் மன்னிய சிறப்பின் மறவேல் மன்னவர் அரைசுமுடி யொழிய அமைத்த பூணினன் வாணிக மரபின் நீள்நிலம் ஓம்பி | 65 |
| நாஞ்சிலும் துலாமும் ஏந்திய கையினன் உரைசால் பொன்னிறங் கொண்ட உடையினன் வெட்சி தாழை கட்கமழ் ஆம்பல் சேட னெய்தல் பூளை மருதம் கூட முடித்த சென்னியன் நீடொளிப் | 70 |
| பொன்னென விரிந்த நன்னிறச் சாந்தம் தன்னொடு புனைந்த மின்னிற மார்பினன் கொள்ளும் பயறும் துவரையும் உழுந்தும் நன்னியம் பலவும் நயந்துடன் அளைஇக் கொள்ளெனக் கொள்ளும் மடையினன் புடைதரு | 75 |
| நெல்லுடைக் களனே புள்ளுடைக் கழனி வாணிகப் பீடிகை நீள்நிழற் காஞ்சிப் பாணிகைக் கொண்டு முற்பகற் பொழுதில் உள்மகிழ்ந் துண்ணு வோனே அவனே நாஞ்சிலம் படையும் வாய்ந்துறை துலாமுஞ் | 80 |
| சூழொளித் தாலு மியாழும் ஏந்தி விலைந்துபத மிகுந்து விருந்துபதம் தந்து மலையவும் கடலவு மரும்பலம் கொணர்ந்து விலைய வாக வேண்டுநர்க் களித்தாங்கு உழவுதொழி லுதவும் பழுதில் வாழ்க்கைக் | 85 |
| கிழவன் என்போன் கிளரொளிச் சென்னியின் இளம்பிறை சூடிய இறையவன் வடிவினோர் விளங்கொளிப் பூத வியன்பெருங் கடவுளும் கருவிளை புரையு மேனிய னரியொடு வெள்ளி புனைந்த பூணினன் தெள்ளொளிக் | 90 |
| காழகம் செறிந்த உடையினன் காழகில் சாந்து புலர்ந்தகன்ற மார்பினன் ஏந்திய கோட்டினும் கொடியினும் நீரினும் நிலத்தினும் காட்டிய பூவிற் கலந்த பித்தையன் கம்மியர் செய்வினைக் கலப்பை ஏந்திச் | 95 |
| செம்மையின் வரூஉஞ் சிறப்புப் பொருந்தி மண்ணுறு திருமணி புரையு மேனியன் ஒண்ணிறக் காழகஞ் சேர்ந்த உடையினன் ஆடற் கமைந்த அவற்றொடு பொருந்திப் பாடற் கமைந்த பலதுறை போகிக் | 100 |
| கலிகெழு கூடற் பலிபெறு பூதத் தலைவ னென்போன் தானுந் தோன்றிக் கோமுறை பிழைத்த நாளி லிந்நகர் தீமுறை உண்பதோர் திறனுண் டென்ப தாமுறை யாக அறிந்தன மாதலின் | 105 |
| யாமுறை போவ தியல்பன் றோவெனக் கொங்கை குறித்த கொற்ற நங்கைமுன் நாற்பாற் பூதமும் பாற்பாற் பெயரக் கூல மறுகும் கொடித்தேர் வீதியும் பால்வேறு தெரிந்த நால்வேறு தெருவும் | 110 |
| உரக்குரங்கு உயர்த்த ஒண்சிலை உரவோன் காவெரி யூட்டிய நாள்போற் கலங்க அறவோர் மருங்கின் அழற்கொடி விடாது மறவோர் சேரி மயங்கெரி மண்டக் கறவையும் கன்றும் கனலெரி சேரா | 115 |
| அறவை யாயர் அகன்றெரு அடைந்தன மறவெங் களிறும் மடப்பிடி நிரைகளும் விரைபரிக் குதிரையும் புறமதிற் பெயர்ந்தன சாந்தந் தோய்ந்த ஏந்திள வனமுலை மைத்தடங் கண்ணார் மைந்தர் தம்முடன் | 120 |
| செப்புவா யவிழ்ந்த தேம்பொதி நறுவிரை நறுமல ரவிழ்ந்த நாறிரு முச்சித் துறுமலர்ப் பிணையல் சொரிந்த பூந்துகள் குங்குமம் எழுதிய கொங்கை முன்றில் பைங்கா ழாரம் பரிந்தன பரந்த | 125 |
| தூமென் சேக்கைத் துனிப்பதம் பாராக் காமக் கள்ளாட் டடங்கினர் மயங்கத் திதலை அல்குல் தேங்கமழ் குழலியர் குதலைச் செவ்வாய்க் குறுநடைப் புதல்வரொடு பஞ்சியா ரமளியில் துஞ்சுதுயில் எடுப்பி | 130 |
| வால்நரைக் கூந்தல் மகளிரொடு போத வருவிருந் தோம்பி மனையற முட்டாப் பெருமனைக் கிழத்தியர் பெருமகிழ் வெய்தி இலங்குபூண் மார்பிற் கணவனை இழந்து சிலம்பின் வென்ற சேயிழை நங்கை | 135 |
| கொங்கைப் பூசல் கொடிதோ வன்றெனப் பொங்கெரி வானவன் தொழுதனர் ஏத்தினர் எண்ணான் கிரட்டி இருங்கலை பயின்ற பண்ணியல் மடந்தையர் பயங்கெழு வீதித் தண்ணுமை முழவம் தாழ்தரு தீங்குழல் | 140 |
| பண்ணுக்கிளை பயிரும் பண்ணியாழ்ப் பாணியொடு நாடக மடந்தைய ராடரங் கிழந்தாங்கு எந்நாட் டாள்கொல் யார்மகள் கொல்லோ இந்நாட் டிவ்வூர் இறைவனை யிழந்து தேரா மன்னனைச் சிலம்பின் வென்றிவ் | 145 |
| ஊர்தீ யூட்டிய ஒருமக ளென்ன அந்தி விழவும் ஆரண ஓதையும் செந்தீ வேட்டலுந் தெய்வம் பரவலும் மனைவிளக் குறுத்தலும் மாலை அயர்தலும் வழங்குகுரன் முரசமு மடிந்த மாநகர்க் | 150 |
| காதலற் கெடுத்த நோயொ டுளங்கனன்று ஊதுலைக் குருகின் உயிர்த்தன ளுயிர்த்து மறுகிடை மறுகுங் கவலையிற் கவலும் இயங்கலும் இயங்கும் மயங்கலும் மயங்கும் ஆரஞ ருற்ற வீரபத் தினிமுன் | 155 |
| கொந்தழல் வெம்மைக் கூரெரி பொறாஅள் வந்து தோன்றினள் மதுராபதியென். வெண்பா மாமகளும் நாமகளும் மாமயிடற் செற்றுகந்த கோமகளும் தாம்படைத்த கொற்றத்தாள்- நாம முதிரா முலைகுறைத்தாள் முன்னரே வந்தாள் | 160 |
| மதுரா பதியென்னு மாது. |
17 முதல் 33 வரையும்
37 முதல் 50 வரையும்
67 முதல் 84 வரையும்
89 முதல் 96 வரையும்
111 ஆம் வரியும்
பிற்கால இடைச்சேர்க்கையென உரையாசிரியர் பலரும் கருதுவர்.]
23. கட்டுரை காதை
| சடையும் பிறையுந் தாழ்ந்த சென்னிக் குவளை உண்கண் தவளவாள் முகத்தி கடையெயிறு அரும்பிய பவளச்செவ் வாய்த்தி இடைநிலா விரிந்த நித்தில நகைத்தி இடமருங் கிருண்ட நீல மாயினும் | 5 |
| வலமருங்கு பொன்னிறம் புரையு மேனியள் இடக்கை பொலம்பூந் தாமரை யேந்தினும் வலக்கை அம்சுடர்க் கொடுவாள் பிடித்தோள் வலக்கால் புனைகழல் கட்டினும் இடக்கால் தனிச்சிலம்பு அரற்றும் தகைமையள் பனித்துறைக் | 10 |
| கொற்கைக் கொண்கன் குமரித் துறைவன் பொற்கோட்டு வரம்பன் பொதியிற் பொருப்பன் குலமுதற் கிழத்தி ஆதலின் அலமந்து ஒருமுலை குறைத்த திருமா பத்தினி அலமரு திருமுகத் தாயிழை நங்கைதன் | 15 |
| முன்னிலை ஈயாள் பின்னிலைத் தோன்றிக் கேட்டிசின் வாழி நங்கையென் குறையென வாட்டிய திருமுகம் வலவயிற் கோட்டி யாரைநீ யென்பின் வருவோய் என்னுடை ஆரஞ ரெவ்வ மறிதியோவென | 20 |
| ஆரஞ ரெவ்வ மறிந்தேன் அணிஇழாஅய் மாபெருங் கூடல் மதுரா பதியென்பேன் கட்டுரை யாட்டியேன் யானின் கணவற்குப் பட்ட கவற்சியேன் பைந்தொடி கேட்டி பெருந்தகைப் பெண்ணொன்று கேளாயென் நெஞ்சம் | 25 |
| வருந்திப் புலம்புறு நோய் தோழீநீ ஈதொன்று கேட்டியென் கோமகற்கு ஊழ்வினை வந்தக் கடை மாதராய் ஈதொன்று கேளுன் கணவற்குத் தீதுற வந்த வினை; காதின் | 30 |
| மறைநா வோசை யல்ல தியாவதும் மணிநா வோசை கேட்டது மிலனே அடிதொழு திறைஞ்சா மன்ன ரல்லது குடிபழி தூற்றுங் கோலனு மல்லன் இன்னுங் கேட்டி நன்னுதல் மடந்தையர் | 35 |
| மடங்கெழு நோக்கின் மதமுகந் திறப்புண்டு இடங்கழி நெஞ்சத்து இளமை யானை கல்விப் பாகன் கையகப் படாஅது ஒல்கா உள்ளத் தோடு மாயினும் ஒழுக்கொடு புணர்ந்தவிவ் விழுக்குடிப் பிறந்தோர்க்கு | 40 |
| இழுக்கந் தாராது இதுவுங் கேட்டி உதவா வாழ்க்கைக் கீரந்தை மனைவி புதவக் கதவம் புடைத்தனன் ஒருநாள் அரைச வேலி யல்ல தியாவதும் புரைதீர் வேலி இல்லென மொழிந்து | 45 |
| மன்றத் திருத்திச் சென்றீ ரவ்வழி இன்றவ் வேலி காவா தோவெனச் செவிச்சூட் டாணியிற் புகையழல் பொத்தி நெஞ்சஞ் சுடுதலின் அஞ்சி நடுக்குற்று வச்சிரத் தடக்கை அமரர் கோமான் | 50 |
| உச்சிப் பொன்முடி ஒளிவளை உடைத்தகை குறைத்த செங்கோல் குறையாக் கொற்றத்து இறைக்குடிப் பிறந்தோர்க்கு இழுக்க மின்மை இன்னுங் கேட்டி நன்வா யாகுதல் பெருஞ்சோறு பயந்த திருந்துவேல் தடக்கை | 55 |
| திருநிலை பெற்ற பெருநா ளிருக்கை அறனறி செங்கோல் மறநெறி நெடுவாள் புறவுநிறை புக்கோன் கறவைமுறை செய்தோன் பூம்புனற் பழனப் புகார்நகர் வேந்தன் தாங்கா விளையுள் நன்னா டதனுள் | 60 |
| வலவைப் பார்ப்பான் பராசர னென்போன் குலவுவேற் சேரன் கொடைத்திறங் கேட்டு வண்டமிழ் மறையோற்கு வானுறை கொடுத்த திண்டிறல் நெடுவேற் சேரலற் காண்கெனக் காடும் நாடும் ஊரும் போகி | 65 |
| நீடுநிலை மலயம் பிற்படச் சென்றாங்கு ஒன்றுபுரி கொள்கை இருபிறப் பாளர் முத்தீச் செல்வத்து நான்மறை முற்றி ஐம்பெரு வேள்வியுஞ் செய்தொழில் ஓம்பும் அறுதொழி லந்தணர் பெறுமுறை வகுக்க | 70 |
| நாவலங் கொண்டு நண்ணா ரோட்டிப் பார்ப்பன வாகை சூடி ஏற்புற நன்கலங் கொண்டு தன்பதிப் பெயர்வோன் செங்கோல் தென்னன் திருந்துதொழில் மறையவர் தங்கா லென்ப தூரே அவ்வூர்ப் | 75 |
| பாசிலை பொதுளிய போதி மன்றத்துத் தண்டே குண்டிகை வெண்குடை காட்டம் பண்டச் சிறுபொதி பாதக் காப்பொடு களைந்தனன் இருப்போன் காவல் வெண்குடை விளைந்துமுதிர் கொற்றத்து விறலோன் வாழி | 80 |
| கடற்கடம் பெறிந்த காவலன் வாழி விடர்ச்சிலை பொறித்த வேந்தன் வாழி பூந்தண் பொருநைப் பொறையன் வாழி மாந்தரஞ் சேரல் மன்னவன் வாழ்கெனக் குழலும் குடுமியும் மழலைச் செவ்வாய்த் | 85 |
| தளர்நடை யாயத்துத் தமர்முதல் நீங்கி விளையாடு சிறாஅ ரெல்லாஞ் சூழ்தரக் குண்டப் பார்ப்பீ ரென்னோ டோதியென் பண்டச் சிறுபொதி கொண்டுபோ மின்னெனச் சீர்த்தகு சிறப்பின் வார்த்திகன் புதல்வன் | 90 |
| ஆலமர் செல்வன் பெயர்கொண்டு வளர்ந்தோன் பால்நாறு செவ்வாய்ப் படியோர் முன்னர்த் தளர்நா வாயினும் மறைவிளி வழாஅது உளமலி உவகையோ டொப்ப வோதத் தக்கிணன் தன்னை மிக்கோன் வியந்து | 95 |
| முத்தப் பூணூல் அத்தகு புனைகலம் கடகம் தோட்டொடு கையுறை ஈத்துத் தன்பதிப் பெயர்ந்தன னாக நன்கலன் புனைபவும் பூண்பவும் பொறாஅ ராகி வார்த்திகன் தன்னைக் காத்தன ரோம்பிப் | 100 |
| கோத்தொழி லிளையவர் கோமுறை அன்றிப் படுபொருள் வௌவிய பார்ப்பா னிவனென இடுசிறைக் கோட்டத் திட்டன ராக வார்த்திகன் மனைவி கார்த்திகை என்போள் அலந்தனள் ஏங்கி அழுதனள் நிலத்தில் | 105 |
| புலந்தனள் புரண்டனள் பொங்கினள் அதுகண்டு மையறு சிறப்பின் ஐயை கோயில் செய்வினைக் கதவந் திறவா தாகலின் திறவா தடைத்த திண்ணிலைக் கதவம் மறவேல் மன்னவன் கேட்டனன் மயங்கிக் | 110 |
| கொடுங்கோ லுண்டுகொல் கொற்றவைக் குற்ற இடும்பை யாவதும் அறிந்தீ மின்னென ஏவ லிளையவர் காவலற் றொழுது வார்த்திகற் கொணர்ந்த வாய்மொழி யுரைப்ப நீர்த்தன் றிதுவென நெடுமொழி கூறி | 115 |
| அறியா மாக்களின் முறைநிலை திரிந்தவென் இறைமுறை பிழைத்தது பொறுத்தல்நுங் கடனெனத் தடம்புனற் கழனித் தங்கால் தன்னுடன் மடங்கா விளையுள் வயலூர் நல்கிக் கார்த்திகை கணவன் வார்த்திகன் முன்னர் | 120 |
| இருநில மடந்தைக்குத் திருமார்பு நல்கியவள் தணியா வேட்கையுஞ் சிறிதுதணித் தனனே நிலைகெழு கூடல் நீள்நெடு மறுகின் மலைபுரை மாடம் எங்கணும் கேட்பக் கலையமர் செல்வி கதவந் திறந்தது | 125 |
| சிறைப்படு கோட்டஞ் சீமின் யாவதுங் கறைப்படு மாக்கள் கறைவீடு செய்ம்மின் இடுபொரு ளாயினும் படுபொரு ளாயினும் உற்றவர்க் குறுதி பெற்றவர்க் காமென யானை யெருத்தத்து அணிமுரசு இரீஇக் | 130 |
| கோன்முறை யறைந்த கொற்ற வேந்தன் தான்முறை பிழைத்த தகுதியுங் கேள்நீ ஆடித் திங்கள் பேரிருட் பக்கத்து அழல்சேர் குட்டத் தட்டமி ஞான்று வெள்ளி வாரத்து ஒள்ளெரி யுண்ண | 135 |
| உரைசால் மதுரையோடு அரைசுகே டுறுமெனும் உரையு முண்டே நிரைதொடி யோயே கடிபொழி லுடுத்த கலிங்கநன் னாட்டு வடிவேல் தடக்கை வசுவுங் குமரனும் தீம்புனற் பழனச் சிங்க புரத்தினும் | 140 |
| காம்பெழு கானக் கபில புரத்தினும் அரைசாள் செல்வத்து நிரைதார் வேந்தர் வீயாத் திருவின் விழுக்குடிப் பிறந்த தாய வேந்தர் தம்முள் பகையுற இருமுக் காவதத் திடைநிலத் தியாங்கணுஞ் | 145 |
| செருவல் வென்றியிற் செல்வோ ரின்மையின் அரும்பொருள் வேட்கையிற் பெருங்கலன் சுமந்து கரந்துறை மாக்களிற் காதலி தன்னொடு சிங்கா வண்புகழ்ச் சிங்க புரத்தினோர் அங்கா டிப்பட் டருங்கலன் பகரும் | 150 |
| சங்கமன் என்னும் வாணிகன் தன்னை முந்தைப் பிறப்பிற் பைந்தொடி கணவன் வெந்திறல் வேந்தற்குக் கோத்தொழில் செய்வோன் பரத னென்னும் பெயரனக் கோவலன் விரத நீங்கிய வெறுப்பின னாதலின் | 155 |
| ஒற்றன் இவனெனப் பற்றினன் கொண்டு வெற்றிவேல் மன்னற்குக் காட்டிக் கொல்வுழிக் கொலைக்களப் பட்ட சங்கமன் மனைவி நிலைக்களங் காணாள் நீலி என்போள் அரசர் முறையோ பரதர் முறையோ | 160 |
| ஊரீர் முறையோ சேரியீர் முறையோவென மன்றினும் மறுகினும் சென்றனள் பூசலிட்டு எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்தி மலைத்தலை யேறியோர் மால்விசும் பேணியில் | 165 |
| கொலைத்தலை மகனைக் கூடுபு நின்றோள் எம்முறு துயரம் செய்தோ ரியாவதும் தம்முறு துயரமிற் றாகுக வென்றே விழுவோ ளிட்ட வழுவில் சாபம் பட்டனி ராதலிற் கட்டுரை கேள்நீ | 170 |
| உம்மை வினைவந் துருத்த காலைச் செம்மையி லோர்க்குச் செய்தவ முதவாது வாரொலி கூந்தல்நின் மணமகன் தன்னை ஈரேழ் நாளகத் தெல்லை நீங்கி வானோர் தங்கள் வடிவின் அல்லதை | 175 |
| ஈனோர் வடிவிற் காண்டல் இல்லென மதுரைமா தெய்வம் மாபத் தினிக்கு விதிமுறை சொல்லி அழல்வீடு கொண்டபின் கருத்துறு கணவற் கண்டபின் அல்லது இருத்தலும் இல்லேன் நிற்றலும் இலனெனக் | 180 |
| கொற்றவை வாயிற் பொற்றொடி தகர்த்துக் கீழ்த்திசை வாயிற் கணவனொடு புகுந்தேன் மேற்றிசை வாயில் வறியேன் பெயர்கென இரவும் பகலும் மயங்கினள் கையற்று உரவுநீர் வையை ஒருகரைக் கொண்டாங்கு | 185 |
| அவல என்னாள் அவலித்து இழிதலின் மிசைய என்னாள் மிசைவைத் தேறலிற் கடல்வயிறு கிழித்து மலைநெஞ்சு பிளந்தாங்கு அவுணரைக் கடந்த சுடரிலை நெடுவேல் நெடுவேள் குன்றம் அடிவைத் தேறிப் | 190 |
| பூத்த வேங்கைப் பொங்கர்க் கீழோர் தீத்தொழி லாட்டியேன் யானென் றேங்கி எழுநா ளிரட்டி எல்லை சென்றபின் தொழுநா ளிதுவெனத் தோன்ற வாழ்த்திப் பீடுகெழு நங்கை பெரும்பெய ரேத்தி | 195 |
| வாடா மாமலர் மாரி பெய்தாங்கு அமரர்க் கரசன் தமர்வந் தேத்தக் கோநகர் பிழைத்த கோவலன் றன்னொடு வான வூர்தி ஏறினள் மாதோ கானமர் புரிகுழற் கண்ணகி தானென். | 200 |
வெண்பா தெய்வந் தொழாஅள் கொழுநற் றொழுவாளைத் தெய்வந் தொழுந்தகைமை திண்ணிதால்- தெய்வமாய் மண்ணக மாதர்க் கணியாய கண்ணகி விண்ணக மாதர்க்கு விருந்து. கட்டுரை முடிகெழு வேந்தர் மூவ ருள்ளும் படைவிளங்கு தடக்கைப் பாண்டியர் குலத்தோர் அறனும் மறனும் ஆற்றலும் அவர்தம் பழவிறல் மூதூர்ப் பண்புமேம் படுதலும் விழவுமலி சிறப்பும் விண்ணவர் வரவும் | 5 |
| ஒடியா இன்பத் தவருடை நாட்டுக் குடியுங் கூழின் பெருக்கமும் அவர்தம் வையைப் பேரியாறு வளஞ்சுரந் தூட்டலும் பொய்யா வானம் புதுப்பெயல் பொழிதலும் ஆரபடி சாத்துவதி யென்றிரு விருத்தியும் | 10 |
| நேரத் தோன்றும் வரியுங் குரவையும் என்றிவை அனைத்தும் பிறபொருள் வைப்போடு ஒன்றித் தோன்றும் தனிக்கோள் நிலைமையும் வடஆரியர் படைகடந்து தென்றமிழ்நா டொருங்குகாணப் | 15 |
| புரைதீர் கற்பின் தேவி தன்னுடன் அரைசு கட்டிலில் துஞ்சிய பாண்டியன் நெடுஞ்செழியனோ டொருபரிசா நோக்கிக் கிடந்த மதுரைக் காண்டம் முற்றிற்று. | 20 |
Subscribe to:
Posts (Atom)
